செவ்வாய், 18 அக்டோபர், 2011

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் முதல்வர்



‘சாத்தான் வேதம் ஒதுகிறதுஎன்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை முதல்வர் நிஜத்தில் நிரூபித்திருக்கிறார். வழக்குகளை சந்திக்க பயந்து ஓடுகிறார்கள் என்று தி.மு.க.வினரைப்பார்த்து எள்ளி நகையாடும் முதல்வர் தனது வழக்குக்காக இதுவரை எத்தனை முறை வாய்தா வாங்கியிருக்கிறார்? எத்தனை சாக்கு சொல்லியிருக்கிறார்? எப்படியெல்லாம் தப்பித்து வருகிறார் என்பதைப் பார்த்து வியப்புதான் மேலிடுகிறது. எப்படியும் கின்னஸ் சாதனை பெற்றே தீருவது என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

மக்கள் ஏமாளிகள் என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மறதி மிக்கவர்கள் மக்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளுமே புரிந்து வைத்திருக்கின்றன. முதலில் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தார். நடக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப்பின் முதல்வரின் விருப்பத்துக்கே தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியும், பின் தேதியை முதல்வர் தரப்பு அறிவித்ததும், இப்போது பாதுகாப்பு இல்லை என்ற சப்பைக் காரணங்களைக் கூறி நழுவப் பார்ப்பதும் முதல்வருக்கு அழகா என்ன? நீதி மன்றத்துக்கு கட்டுப்படாத இவர் எப்படி தி.மு.க.வினரை விமர்சிக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. தன் முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு எப்படி இவர் ஊழல் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்?

இன்றைய தினமலரின் செய்தியைப் பாருங்கள்................

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பாதுகாப்பு தொடர்பான பிரச்னை முடியும் வரை தான் ஆஜராக வேண்டிய தேதியை ஒத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவு நாளை ( புதன்கிழமை ) பிறப்பிக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனை தொடர்ந்து பெங்களூரூ கோர்ட்டில் நடந்த விசாரணைகளில், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் கந்தசாமி, கர்நாடகா போலீஸ் டி.சி.பி., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரப்பன அக்ரஹார சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் அனைத்து வசதிகளும் உள்ளன என நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையில் இன்று ஜெ,, தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமது பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் முழு அறிக்கை வந்ததும் நான் ஆஜராகிறேன். பாதுகாப்பு தொடர்பான விஷயம் குறித்து தமிழக அரசுக்கு இதுவரை எந்தவொரு விவரமும் வந்து சேரவில்லை. இதுவரை இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார். கர்நாடக அரசின் வக்கீலிடம் விளக்கம் கேட்டு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் கூறி விட்டனர். நாளை இந்த மனுமீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெ., வரும் 20 ம் தேதி (நாளை மறுநாள் ) ஆஜராவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரிய போது இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2 கருத்துகள்:

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… [Reply]

ஹி ஹி இன்னுமா இந்த உலகம் நம்பிகிட்டு இருக்கு?
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாகலை என்று நம்பிகிட்டு இருக்கும் மக்கள் இருக்கும் வரை , எங்கள் புரட்சி தலைவி அம்மாவை யாரும் அசச்சுக்க முடியாது , அசச்சுக்க முடியாது

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!