சனி, 14 பிப்ரவரி, 2015

காதலிக்கும் எனது அன்பான இளம் சிநேகிதர்களே…


(சென்ற பதிவின் தொடர்ச்சி...)
பெரும்பாலான காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோர்க்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும், காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன? 

காதலர்கள் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தனிமையில் நிறைய பேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும் பேசவேண்டும். மேலை நாடுகளில் காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை அந்தச் சமூகம் அங்கீகரிகிறது.

உண்மையில் இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்னை. வீட்டுக்குள் அவர்கள் சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற காதலர்கள் மறைவிடம் நாடுகிறார்கள்.

காதலர்கள் பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய வரவேற்பரை மட்டுமே வீடு ஆகாதே… குளியல் அறை, சமையல் அறை, பின்கட்டு… இந்த லட்சணங்களை மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று? இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள்.

தொடர்ந்த பேச்சு, தொடர்ந்த பழக்கம் அசல் முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடும். கல்யாணம் ஆகாத ஆணையும் பெண்ணையும் பழகவிடுவதாவது? ஏதாவது தப்புத்தாண்டா நடந்துவிட்டால்? எங்களைப் போன்ற மூத்த தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக நினைக்கும்.
சரி. . . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்?

நடந்துவிட்டால் இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்ரம் வற்றிப் போகாது. பெண்கள் சம்பாதிக்க வெளியே போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே? பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். என்ன கெட்டுப் போயிற்று?

காதலை மனதளவில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகமெங்கும் குழந்தைகள் குழந்தைகளாத்தான் பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்று தனித்தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பேருந்தில், கோயில்களில். ஆண்கள் இடம் வேறு. பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடக்கூடாது.

பெண்ணையும் ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக்காற்றும் பட்டுவிடாமல் பாதுக்காக்கிறார்கள்.

பையன்களுக்கு பெண்கள் கனவுகள். பெண்களுக்கு பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலாருக்கும் கெட்டி தட்டிப் போகிறது. 

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக சுலபத்தில் விழாத ‘லாட்டரி டிக்கெட்டு’காளாக இருக்கிறார்கள். அதனாலேயே பரஸ்பரம் அவர்கள் ஆச்சர்யங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள். பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? இந்தப் பிரித்துப் பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான உண்மை.

எனக்குத் தரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குண் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு. பெண் காயத்ரி. ஒன்பது பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது? அவள் இவனைப் பார்த்து, ‘கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா’ என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான். அவன் அவளைப் பார்த்து ‘டைம் என்ன’ என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும், டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும். 

எதிர்பாலோடு பேசமாட்டோமா என்று அடக்கிவைக்கப்பட்ட ஆசை… அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெரு முனையில், கடைகளின் வாசல் நிழல்களில் வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். காதல் கண்ணாலா கெட்டிப்படும்? இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து, அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக்கொண்டார்கள். ஒரு நாள் இந்த வீட்டுச் சிறையில் இருந்து தப்பிக்க எண்ணி ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலிஸ், ரெய்டில் அவர்களை வளைத்தது.

அதிகம் சொல்வானேன்… அந்தப் பெண்குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள்.

அந்தப் பெண்ணின் பையனின் தவறு என்ன? இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ மகளையோ தேடி வரும் நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச்சொல்வோம். அவர்களுக்கு டீ தந்து உபசரிப்போம். பெரும்பாலோன தப்புகள் தவிர்க்கப்டும்தானே? 

இளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப்பேசத்தான் அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே? பேசப் பேச மனசுக்குள் நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறம் இவர்கள் ஓடுவார்களா என்ன?

அப்புறமும் ஓடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும்? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?

அன்புக் கண்மணிகளே!

மனம் நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய முடியும்? வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? விடலைத்தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிஷ்டம் அல்ல! ஒட்டு மொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும் நாம் காண வேண்டும்.

நமது தநிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை உணர்த்துகிறது? விபச்சாரம் செய்ய நேர்ந்து பிடிப்பட்ட பெண்களை நம் பத்திரிகைகள் ‘அழகி’ என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன? கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் ‘வக்கிர’ வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்?

கல்லூரி அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது? இப்படி எத்தனையோ கேடுகளில் ஒன்றாகத்தான் அ-காதலைக் காதல் என்று புரிந்துகொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப் பார்க்காத சமுகத்தில் காதல் மட்டும் கறை படியாது எங்ஙனம் இருக்கும்?

ஆகவே கணவன் மனைவியாக ஆன பிறகும் கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். சிறையப் பேசிப் பேசி, அப்புறம் மோனமாகவும் நீங்கள் உரையாடிக்கொள்ள வேண்டும். பெண்ணை மரியாதை செய்க. வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.

வாழ்த்துக்கள். – பிரபஞ்சன். 01.08.1999 - ஆனந்த விகடனில்

காதல் வயப்பட்ட ஜோடிகளுக்கு...



 
உங்கள் இருவரின் கடிதம் கிடைத்தது. நீங்கள் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி. இல்லற வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் போகிற ‘எங்களுக்கு ஏதேனும் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறீர்கள்.

உலகத்திலேயே ரொம்ப சுலபமானது, பிறருக்கு அறிவுரை சொல்வதுதான். மீறப்படுவதற்கென்றே போடப்படும் சட்டங்களைப் போல, புறக்கணிக்கப்படுவதற்கென்றே சொல்லப்படுகிற வார்த்தைகளே அறிவுரைகள் அல்லது போதனைகள்.

ஆகவே நான் உங்களுக்கு அறிவுரை சொல்லப்போவது இல்லை. வயதில் மூத்தவன் என்கிற தகுதியை (இது தகுதிதானா?) முன்வைத்தும், நிறைய காதல் வயப்பட்டவன் என்கிற அனுபவங்களை முன்வைத்தும், உங்களுக்கு உபயோகப் படலாம் என்று நான் நம்புகிற சிலதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் காதல் புனிதமானது என்கிறீர்கள். உலகத்தில் புனிதமானது என்று எதுவுமே இல்லை. அதே போல உலகத்தில் அசிங்கமானது என்றும் எதுவும் இல்லை. காதல் இயல்பானது என்பதே உண்மை. அது இரண்டு உயிர்கள் சங்கமம் ஆகிற, தவிர்க்க முடியாத நியதி. ஆரோக்கியமான உயிரும் உடம்பும் அவாவுகிற தீனி. உயிர் வாழ்க்கை பிராண வாயுவை உட்கொள்வதால் மட்டுமே சாத்தியம் என்பது போல, மானுட வாழ்க்கை காதலினாலேயே சாத்தியமாகிறது.

உங்கள் நேசம், அல்லது காதல் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்கிற தகவல் உங்கள் கடிதத்தில் இல்லை. என்றாலும் என்ன? பொது உலக அனுபவங்களை முன்வைத்தே காதலின் ஜனன விசித்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எத்தனையோ பேரை தெருவில், வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் பார்க்க நேரிடுகிறது. சில முகங்கள்தான் பச்சைக் கொடி காட்டும் ரயில் ஊழியர் போல நமக்கு அனுமதி கொடுக்கின்றன.

சில முகங்கள்தான் பேசத்தகுந்த முகங்கள், பழகத்தகுந்த முகங்கள் என்று நம் உள் மனம் நமக்கு உத்தரவிடுகிறது. நாம் அவரில் ஈர்க்கப்படுகிறோம். ஏதேனும் ‘சாக்கு’ வைத்துக்கொண்டு பேசவும் செய்கிறோம். பரிச்சயம் பழக்கம் ஆகிறது. பழக்கம் அந்நியோன்னியத்தில் கொண்டு சேர்க்கிறது. தினம் தினம், அடிக்கடி அவர் குரலைக் கேட்க வேணும், பார்க்க வேணும் என்கிற அவஸ்தை உருவாகிறது.

மதுரை மணியின் அருமையான ஒரு கல்பனையைக் கேட்கையில், மாலியின் ஒரு சுழற்றலில், ரகுமானின் ஒரு சுழிப்பில், பர்வீன் சுல்தானாவை, அல்லது உங்கள் ரசனைக்கேற்றபடி ஒருவரைக் கேட்கையில், ‘அடடா இப்போது அவன் / அவள் என் அருகில் இல்லையே’ என்று ஏங்க வைக்கிற மனசு உங்களுக்கு சிந்தித்துவிட்டதா? துணிக்கடை பொம்மைகள் போட்டிருக்கும் ஆடைகளை, உங்கள் துணைக்கு அணிவித்து அழகு பார்க்கிறதா, உங்கள் மனசு? நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இது தொடக்கம்தான். காதல் எழுதுவது வேறு… இசைவு படுவது வேறு. காதலின் ஜீவன், அவனும் அவளும் இசைவுபடுவதிலேயே இருக்கிறது. இசைவுபடுதல் என்பது என்ன? சுவையும் நோக்கமும் ஒன்றுபடுதல். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு, ஓவியம் உயிர் உன்னதம். ஒருவருக்கு ‘இது என்ன வர்ணமெழுகல்’ என்கிற புத்தி. ஒருவருக்கு சங்கீதம் உன்னதம். ஒருவருக்கு ‘இது என்ன விலை என்கிற வியப்பு. ஒருவருக்கு புத்தகம் உயிர். ஒருவருக்கு ‘இது என்ன காசைக் கரியாக்கிக்கொண்டு’ என்கிற பணப்பிரக்ஞை.

காதலின் பிள்ளையார் சுழியே இதுதான். ஒருத்தரின் சுவை, அந்த இன்னொருத்தரின் சுவையும், குறைந்த பட்சம் முரணாகக்கூடாது. அவனும் அவளும் ஒரே துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவன் ஒரு அறையில் கதை எழுதினால் இவள் இன்னொரு இறையில் கட்டுரை எழுதவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதெல்லாம் சாத்தியமும் இல்லை.

‘என்ன பெரிய கதையும் கிதையும்? அந்த நேரத்தில், இந்த முருங்கைக் கீரையை ஆஞ்சி கொடுத்தாலாவது பிரயோஜனமாக இருக்கும்’ என்று அவளோ, ‘ஆமா, நீ பெரிய இவள்… கட்டுரை எழுதுகிறாயாக்கும்… இந்தச் சட்டயைத் துவைச்சுப் போட்டால் என்ன?’ என்று இவனோ கேட்பதுதான் அசுவை அல்லது அவமரியாதை.

என் அன்புக்குரிய கண்மணிகளே!

ஒரு காதல் கதை சொல்லட்டுமா? தஞ்சாவூரில் எனக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். பனிரண்டு வயசில் இவள் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. தஞ்சாவூர் தாண்டி, சென்னை மியூசிக் அகாடமி வாசல்வரை இவள் புகழ் நீண்டு பரவியது. அந்தச் சமயத்தில்தான், அந்தச் சிநேகிதி – ராதா – ஒரு வலையில் விழுந்தாள். வேறு என்ன… அதுதான் அவஸ்தை!

யாரோ ஒரு மிராசுதார் பையன். அவனம் ஒரு குட்டி மிராசுதான். காதலித்துக் கொண்டார்கள். அல்லது அப்படி நம்பினார்கள். மூன்று நாள் கல்யாணம். ஊரடைத்துப் பந்தல். ஆயிரக்கணக்கில் இலை விழுந்தது. எல்லாம் எப்போதும் இன்பமயமாக ஆவதில்லையே… ‘வீட்டு மருமகள் ஆடுவதாவது’ என்றார்கள் மிராசு வீட்டில். பையனின் அதுவரையிலும் ஒளித்து வைக்கப்பட்ட நிஜமுகம் தெரியத் தொடங்கியது. 

ராதா இந்த நூற்றாண்டு ‘பத்தினி’ அல்லவா? புராண காலத்து பதிவிரதைகள் பட்டியலில் சேரவேண்டும் அல்லவா? இவள் ‘பெய்’ என்றால் மழை பெய்து காவிரி ரொம்ப வேண்டும் இல்லையா? ஆகவே கணவனைக் கைவிடாத அவள், கலையைக் கைவிட்டாள். கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், ‘ஏண்டா நாயே… என்னைக் கல்யாணம் பண்ணும் முன்பும் நான் ஆடிக்கொண்டுதானே இருந்தேன்… அப்போ இதைப் பற்றிப் பேசவில்லையே…?

எனக்கு, என் கலையையும் விரும்புகிற புருஷன் கிடைப்பான். கிடைக்காமல் போனாலும் அக்கறை இல்லை. என் கலை எனக்கு உசத்தி… என்று சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை… நான் அவளிடம் கேட்டேன். தரையைப் பார்த்தாள். கொஞ்சம் கண்ணீர் சிந்தினாள். அப்புறம் ‘என்ன இருந்தாலும் புருஷன் அல்லவா?’ என்றாள்.

இந்த தேசத்தில்தான் தாலி கட்டிவிட்ட ஒரே தகுதியில், கழுதை, குதிரை, மாடு, வௌவ்வால், சிலந்தி, எலி எல்லாம் புருஷர்களாகி விடுகின்றன. கழுத்தை நீட்டிவிட்ட பாவத்துக்காகப் பெண்கள், ‘பதுமை’களாகவே இருக்கிறார்கள்.

ராதா அறிவற்றவள் இல்லை… ஒரு அர்த்தத்தில் அவள் மூடம்தான். காதலின் முடிச்சு, மனசுக்குள் விழும்போதே, பரஸ்பரம் புரிதலில் அவள் ஆர்வம் காட்டி இருக்கவேண்டும். ராதா என்கிற ஸ்த்ரீ, காரசாரமாக வற்றல் குழம்பு வைக்கிறவள் மட்டுமல்ல… குழந்தைத் தொழிற்சாலை மட்டுமல்ல… எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர், சிருஷ்டிகரம் கொண்டவள்.

புரிதல்… பரஸ்பரம் புரிதலும் புரிந்து கொள்ளுதலுமே காதல். மிராசு தண்ணீரிலும் தரையிலும் தாவுகிற தவளை. ராதா, மேலே பறக்க இறக்கைகள் கொண்ட வானம்பாடி. தவளையும் வானம்பாடியும், ஒரு மஞ்சள் கயிற்றாலா இணைய முடியும்?


- பிரபஞ்சன்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஒரு நாயகன் உதயமாகிறான்...


டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர். இன்றைய வெற்றி மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் இன்னும் அபரிதமாக இருக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நாடு முழுவதும் அந்த அதிர்வு பரவி , இது போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அலை தற்போது எழுந்திருக்கிறது. மாநில வாரியாக ஊழல் செய்தவர்களே, ஆட்சி கட்டிலை பரபரம்பரை, பரம்பரையாக சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே கூறலாம். 


கெஜ்ரிவால் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருப்பதால், பிற மாநில அரசியல் கட்சிகளும் இவரது ஆதரவு, தயவை நாடி நிற்கும். இதன் மூலம் அரசியல் உறவுகளை புதுப்பித்து கொள்ளும். இதனால் உதிரி கட்சிகள் பல ஆம் ஆத்மியில் கூட்டு சேர தனது ஆதரவு கரத்தை நீட்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற சூழலை ஆம் ஆத்மி உருவாக்கியுள்ளது.

தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டு காலமாக ஊழலில் ஊறிப்போனவர்களே ஆட்சி கட்டிலில் இருந்து வந்துள்ளனர். சோடா விற்றவன் முதல் தெருவோரம் வேலை இல்லாமல் திரிந்தவர்கள் எல்லாம் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு சுமோ கார்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. பலரும் கோடிகளில் புரள்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கேள்வி கெஜ்ரிவால் வெற்றி மூலம் எழுகிறது. 

இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் இன்னும் தூய்மை அடைய வாய்ப்பு இருக்கிறது. சரியான தலைமை, நேர்மையான பார்வைகள் என்பது புதிய இளைஞர்கள் அரசியலுக்கு உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என்பதே அவா. 

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு உதயக்குமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்து: "துப்புக்கெட்ட தமிழர்களே, டெல்லியிடம் படியுங்கள் கடுகளவும் அன்போ, நேர்மையோ, பொதுநலமோ இல்லாத அய்யாக்களின், அம்மாக்களின், அலப்பரைகளின் பின்னால் போய், அவர்கள் தரும் இலவசங்களுக்காகக் கையேந்தி, 200 ரூபாய்க்கு ஓட்டை விற்று, உங்களையும் கொச்சைப்படுத்தி, உங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் கேவலமானவர்களே...டில்லி மக்களைப் பாருங்கள். 

இனியாவது மூளையும், முதுகெலும்பும் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் நலனுக்கான அரசியலைத் தேடுங்கள்! மக்கள் சொல்வது கேட்கிறதா, பிரதமர் அவர்களே? காங்கிரசுக்காரன் போல மக்கள் விரோதக் கொள்கைகளையும், செயல்பாடுகளையும், திட்டங்களையும் மேற்கொண்டால், அவர்களைப் போலவே வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! 

உங்களின் அமித் சாவோ, அமெரிக்க பாரக்கோ உங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே அடிக்கடி உடைமாற்றி, ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் அமெரிக்காக்காரனுக்கு சலாம்போட்டு, உலகம் சுற்றுவதை விட்டுவிட்டு, இந்தியர்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்''. 


சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. தில்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த தில்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை தில்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன

ஒரு நாயகன் உதயமாகியிருக்கிறான். பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

எனக்குப் பிடித்த கேள்வி பதில்கள்


 
ஜெயலலிதாவை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் நீதிபதி பதவி, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் பதவி, உலக அழகிப் போட்டியின் நடுவர் பதவி இவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்கச்சொன்னால் எதை ஏற்பீர்கள்?
முதலாவதை, எனக்கு கண்ணீர் கதைகளையும், கிளுகிளு கதைகளையும் விட மர்மம் நிறைந்த திகில் கதைகள் பிடிக்கும்.

பெண்கள் மென்மையானவர்களா? மேன்மையானவர்களா?
தனக்காக அழும் பெண்கள் மென்மையானவர்கள். பிறருக்காக போராடும் பெண்கள் மேன்மையானவர்கள்.

அண்ணாவின் தலைமையில் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். தலைமையில் நெடுஞ்செழியன், ஜெயலலிதா தலைமையில் நெடுஞ்செழியன் ஒப்பிடுக.
போர் முரசு, பக்கவாத்தியம், பூஜை மணி.

மேலே உள்ளவை அனைத்தும் குமுதம் அரசு பதில்களில் வந்தவை.

நல்ல நண்பன் யார்?
உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய அருமையான விஷயங்களை அடுக்கிக்கொண்டே இருப்பவர்.

இந்தியாவின் துரதிஷ்டம் எது?
பொதுவாகத் தென்படும் நேர்மையற்றத்தனம்!

நிறம் மாறும் பச்சோந்தியைக் கேலி செய்பவர்கள், திசை மாறும் சூரிய காந்தியை அப்படிச் சொல்வதில்லையே ஏன்?
பச்சோந்தியின் நிற மாற்றம் சந்தர்ப்பவாதம், தந்திரம், ஏமாற்று வேலை. சூர்ய காந்தி அப்படியா? அது பக்த மீராவைப்போல மலர்களில் புகுந்த காதல் வைரஸ். சூரியனின் மீதான சோகம் ததும்பும் நிறைவேறாக் காமம்.


கோபத்தின் விளைவு என்ன?
ஒரு வீரன் போர்க்களத்தில் மட்டுமே தோற்றுப் போகிறான். கோபக்காரன் போரில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தோற்றுப் போகிறான்.

தாய் அன்புக்கும், மனைவி அன்புக்கும் என்ன வித்தியாசம்?
தாயின் அன்பை நீதிமன்றத்தில் ரத்து செய்ய முடியாது!

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

இரட்டை இலைக்கா உங்கள் ஓட்டு?

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனபின் திருவரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கிறது. நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும் முட்டாள் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் என்னைத்தான் ஆதரிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஜெயலலிதாவுக்கும், அந்தக் கட்சிக்கும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

1991 முதல் 1995 வரை முதல்வராக இருந்தபோது இவர் நடத்திய தான்தோன்றித்தனமான ஆட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. முதலில் 'ஜெ' வை ஆதரித்த அத்தனை பத்திரிகைகளும் பின்பு அவருக்கு எதிராகத் திரும்பியது. அந்த நேரத்தில் 'ஆனந்த விகடன்' வார இதழில் வந்த தலையங்கம் இன்றைக்கும் மிகப்பொருத்தமாய் இருக்கிறது.

'இரட்டை இலை?' என்ற தலைப்பில் விகடன் எழுதிய தலையங்கம் கீழே....

இரட்டை இலைச் சின்னம் இப்போதும் ஜெயலலிதாவைக் கைவிடாமல் ஓட்டுக்களைச் சேகரித்துத் தரும் என்றும், எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்துள்ள கிராம மக்கள், அவரது 'இரட்டை இலை'க்கு எதிராக ஓட்டுப்போட தயங்குவார்கள் என்றும் ஆளுங்கட்சித் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.

எம்.ஜி.ஆர். எங்கே..! ஜெயலலிதா எங்கே!

மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போட முடியுமா?

அவரது அரசியல் என்பது தெளிந்த சுவை நீர்...

இவரது அரசியலோ ஊழல் மலிந்த சாக்கடை நீர்...

அவரது இதயம் மனித நேய மலர்க் குவியல்...

இவரது இதயமோ துவேஈம் நிறைந்த தொட்டார்சுருங்கி..

அவரது கரங்கள் உதவி செய்து தேய்ந்தவை...

இவரது கரங்களோ பணப்பெட்டியின் கறை படிந்தவை...

மொத்தத்தில்...

அவர் எளிமையின் அவதாரம்...

இவர் ஆடம்பர அலங்கோலம்...

ஆகவே இரட்டை இலையை எம்.ஜி.ஆர். சின்னம் என்று நினைத்து ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடலாம் என்று யாரேனும் நினைத்தால் அது எம்.ஜி.ஆருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்காது. தன்னுடைய முன்னோர் வெட்டியது என்ற பெருமைக்காகப் பாழுங்கிணற்றில் விழுவதற்குச் சமமாகும்.


எனவே திருவரங்கம் தொகுதி மக்களே சிந்தித்து செயல்படுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊழலுக்குத் துணை போகாதீர்கள்.