வெள்ளி, 10 ஜூலை, 2020

உனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்;        அன்னபூரணி தண்டபாணி

இது குடும்பக் கதையா இல்லை காதல் கதையா? இரண்டும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பெரிய நாவல், வாசித்து முடிக்கப் பல நாளாயிற்று. பழைய மாலைமதியில் வரும் ரமணிசந்திரன் நாவல் படிப்பது போன்றதொரு பிரமை ஏற்பட்டது உண்மைதான்.

கதை எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுவென்று நகர்கிறது. நவநாகரிக மங்கையாகத் திருமணத்தை வெறுப்பவளாக வரும் காவ்யாவுக்குக் கல்யாணம் பண்ணி, காதலிக்க வைத்து சராசரி பெண்ணாக  மாற்றிக் குடும்பக் குத்துவிளக்காக்கி கதையை முடித்திருக்கிறார்.

சாஃட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் சில ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைப்போலக் கதிரும் காவியாவும் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்காக சில நிபந்தனைகளோடு திருமணம் செய்துகொண்டு வாழ முற்படுகிறார்கள். இந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளினால் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு கடைசியில் ஒன்று சேர்கிறார்கள் இது தான் கதை.

கதை சொல்லிய விதம், பாத்திரப் படைப்புகள் எல்லாம் அருமை. குமரன்-மீனாட்சி திருமணத்திலேயே கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார். எல்லோருக்கும் பிடித்தவளாக மீனாட்சி. ஒரு சின்ன விஷயத்துக்காகத் தம்பியுடன் பேசாமலிருக்கும் அண்ணன், கட்டாய திருமணம் செய்துவைக்கும் அப்பா என ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் அழகாகக் காட்டி விடுகிறார். இந்தக்காலத்தில் கல்யாணம் வேண்டாத ஆண்களா? அதுதான் நெருடுகிறது. அதுவும் வெறுமனே சாப்பாட்டுக்காகத்தான் கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆணோ பெண்ணோ ஒரு காலகட்டம் வரைதான் கல்யாணம் வேண்டாம் என்கிற பிடிவாதம் இருக்கும். போகப்போக வெறுமை சூழ்ந்து கொள்ள, உடல் ஒத்துழையாமை செய்ய, மனம் அலை பாய எப்போது கல்யாணம் செய்து வைப்பார்கள் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னரே இவர்களுக்குப் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவிடுவதால் அந்த வேதனையை இந்த இருவருமே அனுபவிக்க வில்லை. முதிர் கன்னிகளாய் இருப்பவர்களும், சரியான வேலை கிடைக்காததால் திருமணம் தள்ளிப் போகிறவர்களும்தான் இங்கு அதிகம்.

இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையின் வெள்ளப் பாதிப்பினை கண்முன்பே கொண்டு வந்த காட்சி, பிரிவில் தோன்றும் பரிவு, அதனால் ஏற்படும் நெருக்கம் எனக் காதல் காட்சிகளையும் அபாரமாக விவரித்திருக்கிறார். இருவருக்கும் மாற்றி மாற்றி உடல்நலப் பிரச்சினை ஏற்பட, அப்போது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை காதலாக மாறுவதும் அருமை.

புரட்சிப் பெண்ணாய் அறிமுகப்படுத்தப்பட்ட காவ்யா கடைசியில் ஸ்லோகம் படித்து கடவுளை வேண்டி, புடவைக்கு மாறி, கிராமத்துக்குப் போய் அன்பு பாசம் என்ற கூட்டுக்குள் அடங்கி, ஆணாதிக்கம் விரும்பும் அடிமையாய் மாறி தன் சுயம் இழந்து போகிறாள். பெரும்பான்மையானவர்கள் இதை ஆதரிக்கக்கூடும். ஏன் இதற்குப் பெண்களின் ஆதரவும் அதிகமிருக்கும். படித்து முடித்ததும் ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை, இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டில’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் கதை நாடகத்தனமாகி விடுகிறது. அதே மாதிரி கதிரும் வேலையை உதறி, அமெரிக்க வாய்ப்பையும் உதறி கிராமத்துக்குப் போய் அண்ணனோடு விவசாயம் பார்ப்பதும் சினிமாத்தனமே!

காரணம் உறவுகள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. அப்பா-மகன், சகோதரர்களுக்குள் என எந்த நேரத்திலும் மனக்கசப்புகள் வரலாம். பொருளாதாரம்தான் இப்போது அத்தனையையும் தீர்மானிக்கிறது. மனிதம் மெல்ல மெல்ல மரணித்து வருகிறது. உறவுகளுக்குள் கொலை சாதாரணமாகியிருக்கிறது. சுயநலம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனித மனங்களைக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த மாதிரிக் ‘கதைகள்’ படிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டிருந்தேன். குழு நண்பர்களுக்காகவே வாசிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் பெரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடவே நினைப்பேன். நாம் அவசரகால யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கை முறையில் சட்டென்று முடிக்கும் வகையிலிருந்தால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையும். ஒருவேளை வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகளைக் குறி வைத்து எழுதியிருந்தால் நீங்கள் அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கொரோனா காலம் என்பதாலேயே இத்தனை வாசிப்பு சாத்தியமாகியிருக்கிறது. மடிக்கணினியில் வாசிக்க முடியாதது பெரும் குறையாக இருக்கிறது. கைப்பேசியில் படித்தால் கண்வலி வந்துவிடுகிறது. எல்லா வகை கருவிகளிலும் படிக்கிற மாதிரியான பாஃர்மேட்டில் மாற்றுங்கள். அதுதான் என்னைப் போன்றவர்களுக்கு வசதி. மற்றபடிக் குறை சொல்ல எதுவும் இல்லாத படைப்பு. வாழ்த்துகள்.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

சனி, 4 ஜூலை, 2020

பால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்

ஆசிரியர்; ஜே.வி.ஆர். சவிதாஷா

பால்யகாலத் தெருக்கள் என்ற தலைப்பைப் பார்த்து இது எனது மறக்க முடியாத நினைவுகள் போன்ற ஒரு தொகுப்பு என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு கவிதைத் தொகுப்பு என்று. வாசிக்கத் தொடங்கியபின் நிறுத்த மனமில்லை. சரி முடித்து விடுவோம் என்று உட்கார்ந்து விட்டேன்.

ஆரம்பத்தில் எழுத வருபவர்கள் எல்லோருமே முயற்சி செய்வது கவிதை எழுதுவதுதான். அதுவும் காதலிக்கும் நேரத்தில்தான். எதையாவது எழுதி நம்மவரை அசத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கவிதை எழுதுவதுதான். நான் கூட அப்படி எழுதிய காலம் உண்டு.

வயது ஏற, குடும்பப் பொறுப்புகள் சூழ்ந்த பிறகு அதற்கெல்லாம் நேரமேது. வாசிப்பதோடு சரி, ஒரு காலகட்டத்துக்குப் பின் அதுவும் நின்று போய்விட்டது. காலத்திற்குத் தகுந்த மாதிரி நமது ரசனைகளும் மாறிப்போவதுதான் காரணமேயன்றி வேறில்லை.

நிறையத் தலைப்புகளில் கவிதைகள். எழுத்தாளரே சொல்வது போல் சில கவிதைகளாகவும், சில கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே மாட்டிக்கொண்டும் முழிக்கிறது. கதையையே கூட குறை சொல்லிவிடலாம். ஆனால் கவிதையை... முடியவே முடியாது. ஏனென்றால் கவிதைகள் எல்லாமே ஏகாந்த மனநிலையில் எழுதப்படுபவை. எத்தனை முறை திருத்தினாலும் எல்லாமே சரியாய் இருப்பது போல் தோன்றும். இது அடுத்தவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கே எனக்காய் எழுதப்படுபவை. அடுத்தவர்க்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.

ஆரம்பத்தில் கற்பனைகளும், அப்புறம் அனுபவங்களும், வலியும் வேதனைகளும் கூட கவிதைகளில் கொட்டப்பட்டன. இங்கே சவிதாவின் கவிதைகளில் எல்லாமே அனுபவம். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடவுள், பிரம்மா என்று அவர்களை அழைத்தாலும் பெரும்பாலும் வாழ்க்கை அனுபவங்களே கவிதையில் நிறைந்திருக்கிறது.

வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு’

என்ற வரிகள் அற்புதம். காய்ச்சல், மருந்தின் வாசம் இரண்டும் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டியவை. குழந்தைகள் உலகமான டோராவும், சோட்டா பீமும் தொலைக்காட்சிப் பெட்டியில் முடங்கிப்போனதிலேயே குழந்தையின் சுகவீனம் உணர்த்துகிறது. அதே போல பால்யகாலத் தெருக்களும் புளியமரமும் ஒரே தலைப்பில் வரவேண்டிய கவிதைகள். இந்த பால்யகாலத்தில் நாம் சுற்றாத தெருக்களா? எத்தனை புளியமரத்தினடியில் கில்லியும், கோலியும் விளையாடியிருப்போம். அந்தக்கால நினைவுகள் வராத மனிதர் உண்டா என்ன?

நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது இருபது எட்டில்
முடிந்து விடுகின்றன’.

சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் என் மனதுக்குள் எழும் கேள்விகள் இவை. எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும் என்று இப்போதுதான் புரிகிறது.

உறக்கம், நினைவொளி, ஆழ்மனம், விசித்திரம், கனவின் தொடர்ச்சி என எல்லாமே ஒன்றின் ஒன்றான நீட்சியே. இரவில் உறங்கும்போது இப்படி நினைவுகளும் கனவுகளும் வந்து உறங்கவிடாமல் தொல்லை கொடுக்கும். அப்போது நினைப்பவற்றை எழுதிவைக்க மனம் நினைத்தாலும் உறங்கியும் உறங்காத மனநிலையில் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, விடிந்ததும் அது கனவாக மாறி மறந்து போவதுதானே வாடிக்கை. ஆனால் அத்தனையையும் கவிதையாக்கியிருக்கிறார்.

‘அச்சம்’ தான் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பயந்து போய்விட்டேன். குச்சம், புச்சம், பிச்சம், கச்சம் என எதுகை மோனைக்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எனக்குக்கூட தமிழின் சில வார்த்தைகள் தெரியவில்லையே என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது. உடனே இணையத்திலும் தேடத் தொடங்கி விட்டேன். ஆனால் அடுத்த பக்கத்திலேயே அதற்கான பொருளும் கொடுத்து படிப்பவர் பலரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேர்தல் திருவிழாவில் அரசியலையும் தொட்டிருக்கிறார். இந்த விழிப்புணர்வு ஒன்றே போதும் பெண்களுக்கு, இந்த ஆட்சியின் அவலத்தையே மாற்றிக்காட்டலாம். ஏதோ ஒரு பாடல், பொக்கிஷம் போன்ற பல தலைப்புகள் எனக்கு அருமையான கட்டுரைத் தலைப்புகள். மன்னிப்பு, நேசம் பிறவிக்குணம்-இதில் என் மனநிலையும் பிரதிபலித்திருப்பதைக் கண்டேன்.

இனி வாக்களிக்கும் நாவையும்
உதவத்தூண்டும் மனதையும்
கட்டிவைக்கப்போகிறேன்.’
‘பழையது போல
பழையது எல்லாம்’......

முடியவே முடியாத விஷயங்களிலெல்லாம் நிறைய இப்படிச் சபதமேற்றிருப்போம். அதெல்லாம் எத்தனை அபத்தம் இல்லையா? புறக்கணிப்புகள் மிகப் பெரிய தலைப்பு. புறக்கணிப்பும், அவமானமும் அடையாத மனிதருண்டா உலகில்? ஐந்தாறு பக்கத்துக்கு இதை வைத்து எழுதலாம்.

அதே போல வார்த்தை ஆயுதம், காதலின் வார்த்தை, வார்த்தை மீறல் என எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கலாம். முத்தாய்ப்பாய் கவிதைக் கீற்றுகள்...

கடல் அலைபோல்தான்-என்
நினைவலைகளும் ஒரு நாளும்
உன்னைத் தீண்டாமல்
திருப்பியதில்லை....அருமை.

கவிதைப் பக்கமே தலைவைத்து படுக்காமலிருந்த என்னை எழுந்து உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் தொகுப்பு.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

கருப்பணசாமியின் சிநேகிதர்கள் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; நா. கோபாலகிருஷ்ணன்

விமர்சனம் என்பதே நிறை குறைகள் அடங்கியதுதான். நம்முடைய எழுத்தை எல்லோரும் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நமது குறைகள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது.

திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இங்கே நாம் ஆளை விமர்சிப்பதில்லை. நட்புக்காக முகஸ்துதி பாடுவதில்லை. ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துகிறோம், அவ்வளவுதான். இங்கு விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. இந்தப் புரிதல் இருந்தால் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனங்களும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழும்.

‘கருப்பணசாமியின் சிநேகிதர்கள்’– இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தலைப்புதான் இதை விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். அந்தக்கால தூர்தர்ஷனில் ‘மால்குடி டேஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானதை என் வயதையொத்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே மாதிரி சென்னை தொலைக்காட்சியில் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற தொடரும் வந்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கதை, அதுதான் இதன் சிறப்பே. சிறுகதைத் தொகுப்பிலும் இதுதான் எனக்குப் பிடித்த விஷயமே. வேறு வேறு கதைகள், கதா பாத்திரங்கள். உள்ளே நறுக்குத் தெரித்தாற்போன்ற ஒரு விஷயம். கடைசியில் வாசகனின் அனுமானத்திற்கே முடிவை விட்டுவிடுவது போன்றவை சிறுகதையில் சிறப்பான அம்சம்.

இதில் முதல் கதை ‘மழை’யில்தான் ஆரம்பிக்கிறது. பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் முத்தையாவின் சைக்கிளில் உள்ள மூட்டை என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது. இரண்டாவது ஏன் முத்தையாவின் குடும்பத்தை ஜமீன் குடும்பம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்ற ஆவல் பிறக்கிறது. இத்தனை நாள் வேலை கொடுக்காமல் ஒதுக்கிவைத்த ஜமீன் கூப்பிட்டு ஒரு திருட்டு வேலை கொடுத்ததும் ஏன் என்ற கேள்வி வருகிறது. இப்படி கேள்விகளூடே கதை நகர்வதால் சுவாரஸ்யமும் கூடிக்கொண்டே போகிறது.

பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்கவேண்டுமா என்ன? இந்தத்தகவல் புதிதாக இருக்கிறது. கடைசியில் முத்தையன் ‘சிரித்தான்... உரக்கச்சிரித்தான்’ என்று முடித்தது இன்னும் சிறப்பு. மூக்கறுந்த பிள்ளையாரை அந்த ஊரிலிருந்து அகற்றியதால் அங்கு இடியுடன் கனமழை... அதே பிள்ளையார் இங்கே வந்ததால் இனி இந்த ஊர்ல மழையே வராது. சரி அது அவனது ஊரும்கூடத்தானே. அங்கு மழை பெய்யாது எனில் பாதிக்கப்படுவதில் அவனும் அடக்கம்தானே. பின் ஏன் சிரித்தான்? எல்லோரையும் யோசிக்கவைக்கும் கதை.

மனிதன் தன் தவறுகளை எப்போதும் ஒத்துக்கொள்வதே இல்லை. யார் மீதாவது பழியைப்போட்டுத் தப்பிக்கவே நினைக்கிறான். இல்லையேல் ‘நான் என்ன பண்றது?’ ‘என் சூழ்நிலை அப்படி’, ‘சந்தர்ப்பம் அப்படின்னு’ சமாதானம் சொல்லுவான். இது ரெண்டுமில்ல, மனசுதான் காரணம், அந்த மனசிலுள்ள ‘அழுக்கு’தான் காரணம்னும்னோ, அந்த மனசிலுள்ள பேராசைதான் காரணம்னோ ஒத்துக்கறதே இல்ல. இந்த இரண்டாவது கதையின் நாலுவரிக் கவிதையிலேயே கதையைச் சொன்னதுதான் சிறப்பு.

இறைவன் எப்போதும் எளியவர்களுக்கானவன் இல்லை. பணக்காரர்கள் தங்கள் பகட்டைக்காட்டப் படைக்கப்பட்டவனாக இருக்கலாம். எளியவர்களின் வறுமையைப் பற்றியும், பசியைப் பற்றியும் அவனுக்கென்ன கவலை. மூன்று வேளையும் பூஜை புனஸ்காரம் நடக்கிறதா என்பது மட்டும்தான் அவன் கவலை. அல்லது அவனை உரிமை கொண்டாடுபவர்களின் கவலை. பஞ்சைப் பராரிகள் அன்னதானம் போட்டால் வந்து தின்றுவிட்டுப் போகட்டும், அவ்வளவுதான் கடவுளின் கருணை. காலமெல்லாம் அந்த ஏழைகள் ஏழைகளாகவே செத்துப் போகிறார்கள்.

தகப்பன் சாமியிலும் அதேதான். ஊரே கொண்டாட்டமாக இருக்கிறது. மாரியம்மாளும் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஆனால் ஏழை மாசானத்தின் வாழ்வுக்கான அவன் கடையை கபளீகரம் செய்திருந்தாலும் அவன் இடத்தில் உட்கார்ந்து ஊரின் மொத்தப் பார்வையும் தன் கடையை நோக்கித் திருப்பிவிட்டாளாம். ‘தீப ஒளியில் தெரிந்த அம்மனின் இதழோரம் தெரிந்த புன்னகைக்கு இப்போது வேறு அர்த்தம் தோன்ற பரவசத்தோடு பார்த்து நின்றான்’ மாசானம். அவனுக்கு இனி பசியே எடுக்காது! அம்மன்தான் அருள்பாலித்து விட்டாளே?!

பாவம் கருப்பணசாமியும் அவன் குதிரையும். ‘கோபக்கார சாமி அடிச்சி கொன்னுருச்சிப்பா... என்ன தப்பு பண்ணினானோ...?’ போகிற போக்கில் எவனோ சொல்லிவிட்டு போனான். இதைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. இப்படித்தான் இருக்கிறது எல்லா ஊரிலுமிருக்கிற எல்லைச்சாமிகளின் நிலையும்.

மனசின் ‘வலி’ மரணம்வரை மறக்காது. ஏதோ ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இறந்த காலமே கிடையாதாம். இன்று இப்போது நடப்பைவை மட்டும்தான் அவர்களுக்கு நினைவிருக்குமாம். சமீபத்தில்தான் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அப்படி இருந்தால் எத்தனை வசதியாக இருக்கும்!.

துரோகங்கள் சூழ் உலகில் எதை மறப்பது? எதை நினைப்பது? மனித வாழ்வில் ஒவ்வொரு இழப்பும் ஒரு வலிதான். வாழ்நாள் முழுவதும் அவனை இந்த வலி அலைக்கழித்து கொண்டே இருக்கிறது. யாரோ செய்த தவற்றைக்கூட மன்னித்து மறந்துவிடுகிறோம். ஆனால் நம்மைச் சார்ந்தவர்களின் தவற்றை மன்னிப்பதே இல்லை. ரகு கடைசியில் கண்ணீர் விட்டு என்ன பிரயோஜனம்? தனது தந்தையின் வலியைக்கூட கடைசிக்காலம் வரை தீர்க்கமுடியவில்லையே!

கதைகள் அத்தனையும் அருமை. குறை சொல்ல முடியாத எழுத்து நடை. தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணம். எழுத்துப் பிழைகளோ சொற்பிழைகளோ இல்லாத நேர்த்தி. எப்படி ஒரு சிறுகதை எழுதுவது என்று கற்றுக்கொள்ள ஒரு பாடம். வாழ்த்துக்கள் நா. கோபாலகிருஷ்ணன் அவர்களே!

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.