சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூலை, 2020

கருப்பணசாமியின் சிநேகிதர்கள் - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்; நா. கோபாலகிருஷ்ணன்

விமர்சனம் என்பதே நிறை குறைகள் அடங்கியதுதான். நம்முடைய எழுத்தை எல்லோரும் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நமது குறைகள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது.

திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இங்கே நாம் ஆளை விமர்சிப்பதில்லை. நட்புக்காக முகஸ்துதி பாடுவதில்லை. ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துகிறோம், அவ்வளவுதான். இங்கு விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. இந்தப் புரிதல் இருந்தால் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனங்களும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழும்.

‘கருப்பணசாமியின் சிநேகிதர்கள்’– இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தலைப்புதான் இதை விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். அந்தக்கால தூர்தர்ஷனில் ‘மால்குடி டேஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானதை என் வயதையொத்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே மாதிரி சென்னை தொலைக்காட்சியில் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற தொடரும் வந்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கதை, அதுதான் இதன் சிறப்பே. சிறுகதைத் தொகுப்பிலும் இதுதான் எனக்குப் பிடித்த விஷயமே. வேறு வேறு கதைகள், கதா பாத்திரங்கள். உள்ளே நறுக்குத் தெரித்தாற்போன்ற ஒரு விஷயம். கடைசியில் வாசகனின் அனுமானத்திற்கே முடிவை விட்டுவிடுவது போன்றவை சிறுகதையில் சிறப்பான அம்சம்.

இதில் முதல் கதை ‘மழை’யில்தான் ஆரம்பிக்கிறது. பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் முத்தையாவின் சைக்கிளில் உள்ள மூட்டை என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது. இரண்டாவது ஏன் முத்தையாவின் குடும்பத்தை ஜமீன் குடும்பம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்ற ஆவல் பிறக்கிறது. இத்தனை நாள் வேலை கொடுக்காமல் ஒதுக்கிவைத்த ஜமீன் கூப்பிட்டு ஒரு திருட்டு வேலை கொடுத்ததும் ஏன் என்ற கேள்வி வருகிறது. இப்படி கேள்விகளூடே கதை நகர்வதால் சுவாரஸ்யமும் கூடிக்கொண்டே போகிறது.

பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்கவேண்டுமா என்ன? இந்தத்தகவல் புதிதாக இருக்கிறது. கடைசியில் முத்தையன் ‘சிரித்தான்... உரக்கச்சிரித்தான்’ என்று முடித்தது இன்னும் சிறப்பு. மூக்கறுந்த பிள்ளையாரை அந்த ஊரிலிருந்து அகற்றியதால் அங்கு இடியுடன் கனமழை... அதே பிள்ளையார் இங்கே வந்ததால் இனி இந்த ஊர்ல மழையே வராது. சரி அது அவனது ஊரும்கூடத்தானே. அங்கு மழை பெய்யாது எனில் பாதிக்கப்படுவதில் அவனும் அடக்கம்தானே. பின் ஏன் சிரித்தான்? எல்லோரையும் யோசிக்கவைக்கும் கதை.

மனிதன் தன் தவறுகளை எப்போதும் ஒத்துக்கொள்வதே இல்லை. யார் மீதாவது பழியைப்போட்டுத் தப்பிக்கவே நினைக்கிறான். இல்லையேல் ‘நான் என்ன பண்றது?’ ‘என் சூழ்நிலை அப்படி’, ‘சந்தர்ப்பம் அப்படின்னு’ சமாதானம் சொல்லுவான். இது ரெண்டுமில்ல, மனசுதான் காரணம், அந்த மனசிலுள்ள ‘அழுக்கு’தான் காரணம்னும்னோ, அந்த மனசிலுள்ள பேராசைதான் காரணம்னோ ஒத்துக்கறதே இல்ல. இந்த இரண்டாவது கதையின் நாலுவரிக் கவிதையிலேயே கதையைச் சொன்னதுதான் சிறப்பு.

இறைவன் எப்போதும் எளியவர்களுக்கானவன் இல்லை. பணக்காரர்கள் தங்கள் பகட்டைக்காட்டப் படைக்கப்பட்டவனாக இருக்கலாம். எளியவர்களின் வறுமையைப் பற்றியும், பசியைப் பற்றியும் அவனுக்கென்ன கவலை. மூன்று வேளையும் பூஜை புனஸ்காரம் நடக்கிறதா என்பது மட்டும்தான் அவன் கவலை. அல்லது அவனை உரிமை கொண்டாடுபவர்களின் கவலை. பஞ்சைப் பராரிகள் அன்னதானம் போட்டால் வந்து தின்றுவிட்டுப் போகட்டும், அவ்வளவுதான் கடவுளின் கருணை. காலமெல்லாம் அந்த ஏழைகள் ஏழைகளாகவே செத்துப் போகிறார்கள்.

தகப்பன் சாமியிலும் அதேதான். ஊரே கொண்டாட்டமாக இருக்கிறது. மாரியம்மாளும் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஆனால் ஏழை மாசானத்தின் வாழ்வுக்கான அவன் கடையை கபளீகரம் செய்திருந்தாலும் அவன் இடத்தில் உட்கார்ந்து ஊரின் மொத்தப் பார்வையும் தன் கடையை நோக்கித் திருப்பிவிட்டாளாம். ‘தீப ஒளியில் தெரிந்த அம்மனின் இதழோரம் தெரிந்த புன்னகைக்கு இப்போது வேறு அர்த்தம் தோன்ற பரவசத்தோடு பார்த்து நின்றான்’ மாசானம். அவனுக்கு இனி பசியே எடுக்காது! அம்மன்தான் அருள்பாலித்து விட்டாளே?!

பாவம் கருப்பணசாமியும் அவன் குதிரையும். ‘கோபக்கார சாமி அடிச்சி கொன்னுருச்சிப்பா... என்ன தப்பு பண்ணினானோ...?’ போகிற போக்கில் எவனோ சொல்லிவிட்டு போனான். இதைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. இப்படித்தான் இருக்கிறது எல்லா ஊரிலுமிருக்கிற எல்லைச்சாமிகளின் நிலையும்.

மனசின் ‘வலி’ மரணம்வரை மறக்காது. ஏதோ ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இறந்த காலமே கிடையாதாம். இன்று இப்போது நடப்பைவை மட்டும்தான் அவர்களுக்கு நினைவிருக்குமாம். சமீபத்தில்தான் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அப்படி இருந்தால் எத்தனை வசதியாக இருக்கும்!.

துரோகங்கள் சூழ் உலகில் எதை மறப்பது? எதை நினைப்பது? மனித வாழ்வில் ஒவ்வொரு இழப்பும் ஒரு வலிதான். வாழ்நாள் முழுவதும் அவனை இந்த வலி அலைக்கழித்து கொண்டே இருக்கிறது. யாரோ செய்த தவற்றைக்கூட மன்னித்து மறந்துவிடுகிறோம். ஆனால் நம்மைச் சார்ந்தவர்களின் தவற்றை மன்னிப்பதே இல்லை. ரகு கடைசியில் கண்ணீர் விட்டு என்ன பிரயோஜனம்? தனது தந்தையின் வலியைக்கூட கடைசிக்காலம் வரை தீர்க்கமுடியவில்லையே!

கதைகள் அத்தனையும் அருமை. குறை சொல்ல முடியாத எழுத்து நடை. தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணம். எழுத்துப் பிழைகளோ சொற்பிழைகளோ இல்லாத நேர்த்தி. எப்படி ஒரு சிறுகதை எழுதுவது என்று கற்றுக்கொள்ள ஒரு பாடம். வாழ்த்துக்கள் நா. கோபாலகிருஷ்ணன் அவர்களே!

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

காதலின் பொன் வீதியில்…


(பழைய நாட்குறிப்பிலிருந்து)
வேலைதெரிந்தாலும் பட்டறை வேலையில் அனுபவமில்லை. தொழில் சுத்தமும், நேர்மையும் இருந்தால் வேலை தேடிவரும் என்பது நிரூபனமாகிவிட்டது. சில நாட்களாகவே மனதில் சந்தோஷம் பூத்துக் குலுங்க ஆரம்பித்து மனிதனாய் உலா வர ஆரம்பித்திருக்கிறேன். அவள் நட்பு கிடைத்ததாலா? இல்லை இந்த தொழில் ஆரம்பித்ததாலாழ இரண்டும்தான் காரணம் என்று யோசிக்கையில் புலப்பட்டது. ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது இதைச் செய்யலாமே என்று உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தது அவள்தானே!

ஓ, இந்தப் பொக்கிஷம் எனக்கில்லையோ?! ஒரு கணம் எதுவும் ஓடவில்லை. அன்பில் அசத்தும் இவள் சில நேரங்களில் விட்டேர்த்தியாய் நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

ஹலோ! குட் மார்னிங். என்ன காலைலயே கண் கலங்கியிருக்கு, அழுதீங்களா? என்ன ஆச்சு? ம் … சொல்லுங்க.

ஒண்ணுமில்ல அமுதா.

என்கிட்டயே மறைக்கிறீங்களா?

இல்ல, நான் நீ வேணும்னு கேட்டிண்டிருக்கேன். ஆனா நீ எனக்காக வேற பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பிண்டிருக்கே – அதான் என்னால துக்கம் தாங்க முடியல!

ப்ளீஸ்… உங்கள கன்ட்ரோல் பண்ணிக்கோங்க. அதான் நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்ல. எது எப்படின்னு விதி இருக்கோ அதுபடிதான் நடக்கும். நான் எப்ப எங்க போனாலும், நீங்க எப்பவும் என் சேகர்தான், என்ன? அழக்கூடாது. ச்சே… ஆம்பிளைப் பிள்ளை அழலாமா? ம்…

நான் போயிட்டு வரட்டா?

‘அவள் போய்விட்டாள். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. நான் தெளிவில்லையோ? ஏன் சதா அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். பிரிவு வரப்போவது நிஜம். அதை ஏன் ஏற்கவில்லை என் உள் மனம்?

ஒருவர் மற்றொருவர் மகிழ்விலும், நலத்திலும், மேம்பாட்டிலும் அக்கறை கொள்வதும் அதனைச் செயல்படுத்துவதும் அன்பாகுமில்லையா? என் நலத்தில் அவள் காட்டும் அக்கறையை நாம் ஏன் காட்டவில்லை? மனதை திசை திருப்பினேன். நாமும் இவளுக்காக மாப்பிள்ளை பார்த்தால் என்ன?

அவர்கள் ஜாதியிலேயே மாப்பிள்ளை பார்க்கவேண்டும். ஜாதிப் பிரச்னை சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாய்ப் புரையோடியிருக்கிறது. ‘முடவனுக்கு கொடுத்தால்கூட கொடுப்பேனே தவிர எங்க ஜாதி தவிர்த்து வேறு ஜாதியில எம்பொண்ணைக் கொடுக்க மாட்டேன்’ – ஒரு முறை பேச்சு வாக்கில் அவள் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

முதல் வேளையாக திருமண தரகரிடம் பணம் கொடுத்து வரன் ஏதாவது இருந்தால் உடனே இந்த முகவரிக்கு தெரியப்படுத்து என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நான்கு நாட்கள் முடிந்து போயிருந்தன. என் கண்கள் ஒளியின்றி இருப்பது எனக்கே தெரிந்தது. மெட்ராஸிலிருந்து வந்தாளா? வந்திருந்தால் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை? வீட்டிற்குப் போகலாமா? வீட்டிற்குப் போய் என்ன பேசமுடியும்? அந்த எண்ணத்தைத் தவிர்த்து விட்டேன்.

ஏனோ தெரியவில்லை இந்த மாதம் தொழில் மந்தமாக இருக்கிறது. எப்படி எல்லாவற்றையும் சரிகட்டுவது என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்தது மனசு. தொழில் ‘டல்’லாக இருக்கும்போது உற்சாகம் குறைந்து போகிறது. எரிச்சல் வருகிறது. நிதானம் போய்விடுகிறது. என்ன செய்வது என்ற சிந்தனையே மேலோங்கி விடுகிறது.

இப்போது ஆறுதல் சொல்ல அவள் பக்கத்தில் இருந்தால் தேவலை என்று தோன்றியது. ‘பொண்டாட்டி வேணும்’னு சொல்றது இதுக்குத்தானோ?!

ஹலோ சேகர்! எப்படி இருக்கீங்க. எப்ப பார்த்தாலும் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கின்னு… சாப்பாடு கொண்டு வந்தீங்களா? ம்… சாப்பிட்டு கிளம்புங்க, போய் வேலையைப் பாருங்க. நீங்க இல்லன்னா அங்க ஒழுங்கா வேலை நடக்கிறதில்லை. எவளை நினைச்சுக்கிட்டு இங்க உட்கார்ந்திருக்கீங்க?

எவளை என்றுதான் உனக்குத் தெரியுமே!

ஐயோ! இனிமே அப்படியெல்லாம் பேசக்கூடாது.

ஏன்?

மீனாவுக்குப் பிடிக்காது!

யார் அது மீனா? என்ன குழப்பறே?

நான் ஒண்ணும் குழப்பல. என் ஃப்ரெண்டோட தங்கச்சி பேருதான் மீனா. உங்களுக்காக பெண் பார்த்துட்டு வந்திருக்கேன்.

உனக்கு ஏனிந்த வேலை?

என் சேகருக்கு நான் செய்யாம வேறு எவ செய்வா?

சரி, என்ன ஜாதி அவங்க?

ஏன் நீங்க வேற ஜாதில கட்டிக்க மாட்டீங்களா?

என்னப்பத்திதான் உனக்குத் தெரியுமே. முதல்ல அவங்க எங்க ஜாதியில பெண் கொடுப்பாங்களா? கேட்டுச் சொல்லு. உங்க வீடு மாதிரி ஜாதி வெறி இருக்கப்போவுது.

ஏம்பா கோவமா பேசறீங்க?

பின்ன ஏன்ன? நீ வேற ஜாதின்னு தெரிஞ்சுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். வேற ஜாதில கட்டிக்க மாட்டீங்களான்னா என்ன அர்த்தம்?

சாரி, நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல… என் தோழி ஒருத்தி, நான் வே ஜாதியில மாப்பிள்ளை பார்க்கட்டுமாடின்னு கேட்டப்போ நான் என்ன சொன்னேன் தெரியுமா? வேற ஜாதின்னா… நான் சேகரையே கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னேன்.

நீ கூட ஜாதி பார்க்கிற இல்ல?

இல்ல, எங்க அப்பா அம்மாவுக்காக.

அவங்க ஒத்துக்கிட்டா என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா?

தெரியலை!

ஏன்?

நான் உங்கள ‘புருஷனா’ நினெச்சுப் பார்க்கல.

அப்போ…

நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன்.

சதா சர்வ காலமும் உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கிற என்னை இதுவரைக்கும் ஒரு நாள் கூட அப்படி நினைச்சதில்லையா?

நினைச்சேன்! ஒரு நாள் உங்க வீட்ல சாப்பிடாம வந்து உட்கார்ந்துகிட்டு அழுதீங்களே! நிம்மதியாய் சாப்பிடவாவது பொண்டாட்டி வேணும்னு கேட்டீங்களே… அப்போ நினைச்சேன்.

தன் தர்மத்தையும் விட்டுவிடாமல், பிறர் தர்மத்தையும் தூற்றாமல், யாரையும் கொச்சைப்படுத்தாமல், காதலையும் கேவலப்படுத்தாமல் என்னை மனதுக்குள் ஏற்றுக்கொண்ட இந்த நேசிப்பினை கருணை என்று சொல்வதா? காதல் என்று சொல்வதா? நன்றிப் பெருக்கால் என் கண்கள் பணித்தன. மனசுக்குள் அவளை கை கூப்பினேன்.

சாரி, அமுதா, நீ கிளம்பு. நாம இப்படி பேசிக்கிட்டிருந்தா வேதனைதான் அதிகமாகும். சாதி மதிப்பிழக்கும்போதுதான் சாதி அடிப்படையில் வரும் போலி மதிப்புகள் மறையும். நம்மோட சந்ததிகளையாவது நாம நல்லபடியா சாதி வித்தியாசமில்லாம வளர்ப்போம்.

மனிதரில் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பில் ஆறுதலும், மகிழ்ச்சியும் பரிமாறப்படுகின்றன. அதனால் வாழவேண்டும் என்ற பிடிப்பும் ஏற்படுகின்றது. எனக்கு இந்தப் பிடிப்பு இவளால் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்திற்கு உள்ளே உள்ள உறவைக் காட்டிலும், குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு, உண்மையானதாகவும், ஆதரவானதாகவும் ஏன் நெருக்கமானதாகவும் அமைந்துவிடுகிறது.. எனக்கும் இப்படித்தான் இவள் அமைந்துவிட்டாள்.

ஹாய் சேகர்…

அவள் வந்துவிட்டாள். என் முகம் ஏன் இத்தனை பிரகாசமடைகிறது? இது எத்தனை நாளைக்கு? உள்ளுக்குள் மனசு கேள்வி கேட்டது.

என்ன யோசனை? உங்க நண்பர்கள் எல்லாம் வண்டி வாங்கறாங்க! நீங்க எப்ப வண்டி வாங்கறது? ஹூம்… நீங்க எப்ப வண்டி வாங்கி, நான் எப்ப அதில உட்கார்ந்து வர்றது?

இல்ல அமுதா, வண்டி வாங்க இன்னும் கொஞ்சம் நாளாகும். எதுவும் தோணாத எம் மனசுல ஆர்வத்த விதைச்சு, இன்னைக்கு 4 பேர் என்கிட்ட வேலை செய்யுற அளவுக்கு முன்னேறினதுக்கு என்னோட உழைப்பு வேணும்னா காரணமா இருக்கலாம். ஆனா அந்த உழைப்புக்கு உற்சாகம் கொடுத்த நீதான் முக்கியமான காரணம் எனபதை உன்னாலேயே கூட மறுக்க முடியாது.

போதும் போதும் ஐஸ் வச்சது! வண்டி எப்ப வாங்கறீங்கன்னு கேட்டா, இந்த ராமாயணமெல்லாம் யார் கேட்டது?

சரி வாங்கறேன். முதல்ல நீ உட்காருவியா சொல்லு?
நீ ங்க முதல்ல வண்டி வாங்குங்க.

தொழில் ஆரம்பிச்சதுல கொஞ்சம் கடன் இருக்கு. முடிஞ்சதும் வாங்குற எண்ணம் இருக்கு. கண்டிப்பா வாங்கிடுவேன்.

நீங்க என்னை உண்மையா நேசிக்கிறதுன்னா, அந்த நேசிப்பை உங்க உழைப்புல காண்பிங்க. எங்க அப்பா அம்மா எல்லோர் முன்னிலையிலும் நெஞ்சு நிமிர்த்தி நடக்கனும். ‘ஐயோ எம்பொண்ணை இவனுக்கு கொடுக்காம போய்ட்டமே’னு வருத்தப்பட வைக்கனும். செய்வீங்களா சேகர்?

நிச்சயம் செய்வேன். இது சத்தியம். சரி, அந்த பெண் வீட்டலிருந்து தகவல் வந்ததா?
ம்… வந்தது… அவங்க அப்பா அம்மா வேற ஜாதின்னா வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… வருத்தமா?

ச்சேச்சே… இதுக்கு வருத்தமா? எனக்கு இது நடக்காதுன்னு தெரியும்.
எப்படி?

இதுன்னு இல்ல, எனக்கு கல்யாணம்னு அவள்ளவு சீக்கிரம் நடக்காது. என் குறை பற்றிய உண்மையை முதலிலேயே சொல்லிடறதுனால நின்னுடும்னு தோணுது.

என்ன பெரிய குறை! கை கால் ஏதும் முடமில்லையே? தலைமுடி இல்லேன்னா கூட குறைன்னு சொல்வாங்களா?

சொல்றாங்க!

யார் சொல்றது?
என் நண்பர்கள்ல சில பேர், நம்மைப் பற்றி தெரிஞ்சவங்க என் குறை பற்றி அவளுக்குத் தெரியுமான்னு கேட்டார்கள்.

நீங்க சொல்றது… நட்புல குறையெல்லாம் பார்க்கமாட்டாங்கன்னு…

அப்போ, காதலிச்சா குறையைப் பார்ப்பாங்களா? – நான் கேட்டேன்.

ஆமா, ‘லவ்’ல கொஞ்சம் அழக எதிர்பார்ப்பாங்க.

அதனாலதான் நீ என்னை லவ் பண்ணலையா?

என்ன சேகர், இப்படி புரியாம கேள்வி கேட்டுகிட்டு. என்னப்பத்தி தெரிஞ்சிகிட்டே எப்படி உங்களால இப்படி கேள்வி கேட்க முடிஞ்சது? நாம ரெண்டு பேரும் சேரணும்னு விதி இருந்தா கண்டிப்பா சேருவோம். கவலையை விடுங்க.

எனக்கு மாப்பிள்ளை பார்த்தீங்களே என்ன ஆச்சு?

பையனுக்கு படிப்பு குறைச்சல். வேண்டாம்னு சொல்லிட்டேன்.

எனக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆவாது!

ஏன் அப்படி சொல்ற?

எங்க ஜாதில அதிகமா யாரும் பெண்ணை வேலைக்கு அனுப்பறதில்ல. அதுவுமில்லாம நான் அதிகமா வேற படிச்சிருக்கேன். பத்தாததிற்கு செவ்வாய் தோஷம்… அது இதுன்னுட்டு…
ஆசைப்பட்ட இரண்டு பேர் சேர்ந்து வாழ இந்த சமூகம் எத்தனை வேலிகளைப் போட்டிருக்கிறது இல்லையா?

ஏன் மனசைப்போட்டு அலட்டிக்கறீங்க? கல்யாணம் நடக்கிறவரை நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நாம ஆதரவா இருப்போம். ம்… இப்ப என்ன பண்ணனும்னு சொல்லு உன்னை… நானிருக்கிறேன் இல்ல…ம்.

வேண்டாம் அமுதா… இது எனக்கு நிரந்தரமா உங்கிட்டேயிருந்து வேணும்னு தோணும். என்னைக் கட்டுப்படுத்திக்கிறது தவிர எனக்கு வேறு வழியில்லை.

ச்சேச்சே.. இதுக்கா கண் கலங்குவாங்க.

இல்ல அமுதா, இனி ஏனோ தானோ என்று இருக்கப்போவதில்லை. மனசை ஒருமுகப்படுத்தி கடவுளை வேண்டிக்கப்போகிறேன். சுத்தமான பிரார்த்தனைக்கு பலன் உண்டுன்னு சொல்வாங்க. சாத்தியமாகாதது நடக்குதான்னு பார்ப்போம். எனக்காக நீயும் பிரார்த்தனை செய். இவன் சுமைகளைக் களைந்து, இவன் சந்தோஷம் பெறவேண்டுமென்று…. மற்றது விதிப்படி நடக்கட்டும்.

ஒருவர் கண்களில் ஒருவர் வழியும் கண்ணீரைத் துடைக்க அனிச்சையாய் கை எழுந்தது.

தொடர்புடைய இடுகைகள்;

என் இனிய ஸ்நேகிதிக்கு...

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து!?
 

திங்கள், 7 ஏப்ரல், 2014

ஆசையின்றி ஓர் கடிதம்



“……………”
நீங்கள் என் கணவர்தான். என்றாலும் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தபோது, உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் ரொம்பவும் தடுமாறிப்போனேன். ‘அன்புள்ளஎன்றோ, ‘மதிப்பிற்குரியஎன்றோ குறிப்பிடலாம் என்றால், அதில் எனக்கு துளிகூட விருப்பமில்லை. ஏனெனில், உங்களை அப்படிக் குறிப்பிடுவதாலேயே அந்த வார்த்தைகள் அர்த்தமிழந்து போகும். ஆதலால் வேறுவழியின்றி கடிதத்தை வெறுமனே தொடங்குகிறேன்.
 

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிற எனக்கு யாரோ, எங்கோ தூரத்திலிருந்து எழுதுவது போன்றுகடிதமா…!’ என்று உங்கள் புருவம் சுருங்குவது புரியாமல் இல்லை. நேரிலேயே சொலல்லாம்தான். ஆனால் நினைப்பதையெல்லாம் முழுமையாக நேரில் சொல்லிவிட முடியாது. எனவே என்னுடனேயே இருக்கும் உங்களுக்கு ஒரு மூன்றாம் மனுஷி போல் இந்தக் கடிதம்.

உங்களுடன் வாழ்ந்த இந்த பத்தாண்டுகளில் உங்களுக்கென்று கடிதம் எழுத நேர்ந்தது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்கும். எதற்காக இந்தக் கடிதம் என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்பு, நமது இந்தப் பத்தாண்டு காலத் தாம்பத்தியத்தில் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்ட சில தழும்புகளை உங்களுக்குத் தொட்டுக் காட்டினால்தான் மனசு ஆறும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோகாலையில் எங்கள் ஊரில் நம் திருமணம். மாலையில் உங்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி. சோபாவில் உங்களுக்கருகில் உங்களைப் போலவே ரோஜாப்பு மாலையுடன் நான்.

வரவேற்புக்கு வந்தவர்கள் உங்களருகே வரும்போதெல்லாம் முகம் முழுக்கச் சிரிப்பாக எழுந்து நின்று, அவர்களோடு கைகுலுக்கி, வீடியோவுக்கு போஸ் கொடுத்து, ‘சாப்பிடாமப் போயிடக்கூடாதுஎன்று கண்டிப்புடன் உபசரித்தபடி இருந்தீர்கள். ஆனால் தவறிப்போய்க்கூட என் பக்கம் நீங்கள் திரும்பவே இல்லை. நான் உங்களருகேதான் நின்றுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வுகூட உங்களுக்கிருந்ததாகத் தெரியவில்லை.

இதைக் கவனித்துவிட்ட உங்கள் நண்பர் விவேக், உங்களருகே ஓடிவந்து காதோடு காதாகஎன்னடா நீவர்றவங்ககிட்ட உன் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டாமா…? என்னமோ இன்னமும் கட்டைப் பிரம்மச்சாரி மாதிரி, நீட்டுறவன் கையையெல்லாம் நீ மட்டுமே குலுக்கிக்கிட்டிருக்கேஅவங்களையும் அறிமுகப்படுத்துடாஎன்று கோபப்பட்டார். அதற்கு என்ன பதில் சொன்னீர்கள், நினைவிருக்கா பிரபு?

ஆமாண்டாஅதி ஒண்ணுதான் குறைச்சல். என்னவோ எங்க அம்மா வார்த்தையை மீற முடியாமகண்ணை மூடிக்கிட்டுத் தாலி கட்டியாச்சு. அதுக்காகஇவதான் என் அழகு பொண்டாட்டினு காட்டி, வர்றவன் போறவன்கிட்டயெல்லாம் சந்தோஷம் கொண்டாடச் சொல்றியாக்கும்…’
இப்படி அடித்தொண்டையில் தணிந்த குரலில் கோபமும் ஆதங்கமுமாக, நண்பரின் காதோடு காதாகக் கரகரத்த உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் செவிப்பறையிலும் இதயத்திலும் சுரீர், சுரீர் என்று விழுந்து பதிந்தது. அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு மெள்ளத் திரும்பி ஓரக்கண்ணால் உங்களைப் பார்த்தேன்.

ஒரு வசீகரமான ஆண்மகன் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக நீங்கள் நின்றுகொண்டிருந்தீர்கள். சட்டென்று என்னை நானே பார்த்துக்கொண்டேன். ஒற்றை வரியில் சொல்வதானால், ஒரு ஆண் மகனை வசீகரிக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாத அவலட்சணமாக நான்.

உங்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். எனவே, உங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் எனக்குப் புரிந்தது. வலிக்கத்தொடங்கிய மனதை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

நம் ஒரே குழந்தை உஷா. அவளை என் கர்ப்பத்தில் அடை காக்கத் தொடங்கிய அந்தத் தருணம்கூட, உங்களைப் பொறுத்தவரை ஒரு விபத்து மாதிரிதான். என்னதான் நான் உங்களுக்கு பிடிக்காதவளாக இருந்தாலும் இயற்கையாகவே உடம்பின் பசி உங்களைச் சுட்டெரிக்கும் போதெல்லாம் என் தேகத்தை உதாசீனப்படுத்த முடியாமல் போய்விடும். உஷாவைச் சுமக்க நேர்ந்ததுகூட இதுபோன்றதொரு பலவீனமான தருணத்தில்தான் என்பதை நானும் அறிவேன். எந்திரத்தனத்தை என் மனசு உணர்ந்தாலும் என் உடம்பும் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில், அதற்கும் பசி உண்டே…!

உங்களுக்கு தூக்க நேரத்தில் நிசப்தம் முக்கியம். ஒரு சின்ன முனகல் சத்தம் கூட உங்களுக்கு சகிக்க முடியாத இம்சை. ஒரு நாள்நடுநிசியில் லேசாக சிணுங்க ஆரம்பித்த உஷா, கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் பெற்று பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள். என்னென்னவோ சமாதானம் செய்தும் ஓய்வதாயில்லை.

அப்போது உங்கள் அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், படாரென்று கதவைத் திறந்து கொண்டு ஆவேசமாக வெளிப்பட்டு… ‘சனியனே ஏன் இப்படி தூங்கக்கூட விடாம பேய் மாதிரி அலர்றே..? செத்துத்தொலை…’ என்று ஆத்திரத்தோடு கத்தியபடி, குழந்தையோடு சேர்த்துத் துணித்தூளியைத் கிறுகிறுவென்று முறுக்கி, வேகமாக வீசியடித்தீர்கள். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். மறுவிநாடியே அனிச்சையாகப் பாய்ந்து சென்று தூளியைப் பிடித்துக்கொண்டேன். நல்லவேளைசுவர் எட்டாத் தூரம். இல்லையெனில் சுவரில் மோதிஉஷாவின் கதை அன்றே முடிந்திருக்கும். இப்போழுது நினைத்தால்கூடப் பகீரென்கிறது

ஆனால் அப்போதுகூட உங்கள் மீது நான் ஆத்திரம் கொள்ளவில்லை. எனக்குள் ஒரு ரகசிய எதிர்பார்ப்புஉங்களின் ஆத்திரம் வடிந்த பிறகு, ‘அடடா இப்படி செய்துவிட்டோமேஎன்று உங்கள் கண்களில் வருத்தம் தொணிக்க, உஷாவைத் தூக்கி முத்தமிடுவீர்கள் என்று. ஊஹூம்உங்களிடமோ அழுத்தமான மௌனம்தான்.
நான் உங்களுக்கு பிடிக்காதவள்தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷிதானேஎனக்கென்றும் ஒரு மனசுஅதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும்தானேஅதைப்பற்றி எப்போதேனும் யோசித்திருப்பீர்களா பிரபு..? மாட்டீர்கள் பரவாயில்லை. பரவாயில்லைஎனக்குள் அடைகாத்து வைத்திருந்த சிலவற்றையாவது சொல்லிவிடுகிறேன்.

புல்லட்டில் உங்களை ஒட்டி உரசியபடி முடியெல்லாம் காற்றில் பறக்க சவாரி செய்யநீண்ட பஸ் பயணத்தில், உங்கள் மடியில் ரொம்பவும் சுவாதீனமாக படுத்துத் தூங்க… ‘இந்த ஷர்ட்தான் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கு, இப்படிச் சீவறதுதான் உங்க முகத்துக்கு நல்லாயிருக்குஎன்றெல்லாம் உங்களை விதவிதமாக அழுக படுத்திப் பார்க்கஇப்படி என்னவெல்லாமோ ஆசைகள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னுமொரு ஆபூர்வ ஆசை. முதுகுப் புறமாக உங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, காதருகே குனிந்துடேய்பிரபுப் பையா! என்னைத் தூக்கிக் கொண்டு இந்த வீட்டைச் சுற்றி ரெண்டு மூணு தடவைச் சுற்றி வாடா பார்க்கலாம்என்று கிசுகிசுப்பாகச் சொல்லி, அதன் விளைவாக உங்கள் முகமும் கண்களும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைப் பார்த்து ரசிக்க வேண்டுமென்று கொள்ளை ஆசை.

என்னைப் பார்த்ததுமே உங்கள் அழகான முகம் கோபத்தால் கோணல் மாணலாகி விடுவதைக் கண்டு என் அடிமனத்து ஆசைகள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அடிக்கடி என்னோடு என் மனசு முரண்டு பிடித்திருக்கிறது. ‘உங்களுக்குள் மனமொத்த வாழ்க்கை இல்லை. பிறகு இதுதான் வாழ்க்கை என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய்? தொலைத்து தலை முழுகிவிட்டு, நிம்மதியாக ரிந்து தொலையேன்…’

என்னைப் பொறுத்தவரை, பணம் ஒரு பிரச்னை இல்லை. நானும் உங்களைப் போலவே படித்து, உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறவள். என் வழியே போவதற்கு யார் தயவும் தேவையில்லை. ஆனாலும் உங்களை விட்டு விலக மனமில்லை. இத்தனை ஏமாற்றங்களுக்குப் பிறகும் நான் உங்களை மனமார நேசித்தேன். இந்த நேசிப்புக்குத்தான் காரணம் என்ன?

உங்களின் மனநேர்மை. நியாயத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய விரும்பாத மன உறுதி. அதனால் எத்தனை இழப்புகள், எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம். உண்மையைப் போல் அழகானதும் கம்பீரமானதும் உலகில் வேறொன்றும் இல்லையேநான் உண்மையை நேசிப்பவள். அதனால் உங்களையும் நேசித்தேன்.

அலுவலக வாழ்க்கையில் உங்கள் நேர்மையாலும் கண்டிப்பாலும் பாதிக்கப்படவர்கள் ஒன்றுகூடி எதற்காகவோ நீங்கள் லஞ்சம் கேட்டதாக ஜோடனை செய்து, ஆட்களை நியமித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் உங்களைக் கைது செய்ய வைத்துவிட்டனர். அந்த நேரத்தில் அவமானத்தால் எப்படியெல்லாம் நீங்கள் கூனிக் குறுகிப் போயிருப்பீர்கள் என்று நினைத்து நினைத்து குமைந்து போனேன்.

இருந்தாலும் உங்கள் நேர்மையில் எந்த மாசும் படியவில்லை என்பதை நிரூபிக்க முழுமூச்சில் ஈடுபட ஆரம்பித்தேன். ‘அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்விட்டீர்கள். உங்கள் மிடுக்கான பேச்சும் கம்பீரப் பார்வையும் காணாமல் போய்விட்டன. அதைப் பார்ம்மு என் மனம் கசிந்தது.

இந்த நிலையில், லீவு போட்டுவிட்டு வக்கீல் வீடுகோர்ட் என்று நேரம் காலம் பார்க்காமல் அலைய ஆரம்பித்தேன். நல்லவேளைஅந்த வக்கீல் பாரிஉடம்பெல்லாம் மூளை அவருக்கு. சமயத்தில் கைகொடுத்தார். நிஜத்தை நிரூபிக்க நான் கொடுத்த விபரங்கள்விளக்கிய வழிமுறைகளைக் கண்டு அசந்து போனார். வார்த்தைக்கு வார்த்தை என்னைப் புகழ்ந்தார். என்னைப் பார்த்தாலே அவர் கண்கள் ஜொலிக்க ஆரம்பிக்கும். முகம் மலர்ந்து போகும். வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கும்.

என் அவலட்சண தோற்றம் அவர் கண்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றியது. ‘உங்களை முழுசா எப்படி பாராட்டறதுன்னு தெரியலேவேறொரு பெண்ணா இருந்தா, இன்னேரம் மனசொடிஞ்சு மூலையிலே முடங்கிடுவாங்க. நீங்களோஅடேயப்பா!’ என்று ஒரு நாள் அந்த பாரி சிலிர்த்துக்கொண்டதை நீங்களும் அருகிலிருந்துதான் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

அவரோடு மணிக்கணக்கில் நான் வெளியே செல்லவும் பேசவும் வேண்டியிருந்தது. அந்தச் சந்தரப்பதில்தான் என் கைப்பைக்குள் எனக்காக நீங்கள் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை (எனக்காக நீங்கள் எழுதிய முதல் கடிதம் கூட இதுதான்!) படிக்க நேர்ந்தது.

என் உயிரேசந்திரிகாஎன்னை விட்டு நீ விலகிவிடுவாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. நீயின்றி ஒரு விநாடிகூட என்னால் இருக்க முடியாது. இது சத்தியம். என்றென்றும் மாறாத அன்புடன்உன் பிரபு…’

இதைப் படித்து முடித்ததும் எனக்குள் ஏதோ ஒன்று சடசடவென்று உடைந்து நொறுங்குவது போலிருந்தது. காலமெல்லாம் என்மீது வெறுப்பை மட்டுமே காட்டினீர்கள். அதற்கு என்ன காரணம் என்று என்னிடமே வெளிப்படையாகவே சொன்னீர்கள். மறைக்கவில்லை. நடிக்கவில்லை. நீங்கள் நீங்களாகவே நடந்துகொண்டீர்கள். அந்த நிஜத்தின் ம்பஃபீரமே இதுநாள் வரை உங்களோடு என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஆனால் ஒரு மூன்று வரிக் கடிதத்தில் என் நம்பிக்கையைப் பொய் ஆக்கிவிட்டீர்கள். அடுக்கடுக்காக எத்தனை பொய்கள்! உங்களை இப்படி எழுதவைத்தது எதுவென்று உடனே எனக்குத் தெரிந்து விட்டது. அந்த வக்கீல் பையன்அவர் என்னிடம் காட்டிய அன்பின் நெருக்கம். ‘ஒருவேளை நான் அவரோடு நான் போய்விட்டால்நம் கதி..? என்ற பயம்

ஆக உங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த அளவுக்குக் கீழிறங்கவும் நீங்கள் தயார் என்பதன் நிரூபனம்தான் அந்தக் கடிதம். இதுவரை என்னிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டிருந்தாலும் என் மனசுக்குள் ஜம்மென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தீர்கள். இனி, அந்தச் சிம்மாசனம் இருக்கும். ஆனால் அதில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். ஸாரி மிஸ்டர் பிரபு! - சந்திரிகா.
கதை - உத்தமசோழன்.