வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2020

உனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்

ஆசிரியர்;        அன்னபூரணி தண்டபாணி

இது குடும்பக் கதையா இல்லை காதல் கதையா? இரண்டும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பெரிய நாவல், வாசித்து முடிக்கப் பல நாளாயிற்று. பழைய மாலைமதியில் வரும் ரமணிசந்திரன் நாவல் படிப்பது போன்றதொரு பிரமை ஏற்பட்டது உண்மைதான்.

கதை எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுவென்று நகர்கிறது. நவநாகரிக மங்கையாகத் திருமணத்தை வெறுப்பவளாக வரும் காவ்யாவுக்குக் கல்யாணம் பண்ணி, காதலிக்க வைத்து சராசரி பெண்ணாக  மாற்றிக் குடும்பக் குத்துவிளக்காக்கி கதையை முடித்திருக்கிறார்.

சாஃட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் சில ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைப்போலக் கதிரும் காவியாவும் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்காக சில நிபந்தனைகளோடு திருமணம் செய்துகொண்டு வாழ முற்படுகிறார்கள். இந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளினால் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு கடைசியில் ஒன்று சேர்கிறார்கள் இது தான் கதை.

கதை சொல்லிய விதம், பாத்திரப் படைப்புகள் எல்லாம் அருமை. குமரன்-மீனாட்சி திருமணத்திலேயே கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார். எல்லோருக்கும் பிடித்தவளாக மீனாட்சி. ஒரு சின்ன விஷயத்துக்காகத் தம்பியுடன் பேசாமலிருக்கும் அண்ணன், கட்டாய திருமணம் செய்துவைக்கும் அப்பா என ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் அழகாகக் காட்டி விடுகிறார். இந்தக்காலத்தில் கல்யாணம் வேண்டாத ஆண்களா? அதுதான் நெருடுகிறது. அதுவும் வெறுமனே சாப்பாட்டுக்காகத்தான் கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆணோ பெண்ணோ ஒரு காலகட்டம் வரைதான் கல்யாணம் வேண்டாம் என்கிற பிடிவாதம் இருக்கும். போகப்போக வெறுமை சூழ்ந்து கொள்ள, உடல் ஒத்துழையாமை செய்ய, மனம் அலை பாய எப்போது கல்யாணம் செய்து வைப்பார்கள் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னரே இவர்களுக்குப் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவிடுவதால் அந்த வேதனையை இந்த இருவருமே அனுபவிக்க வில்லை. முதிர் கன்னிகளாய் இருப்பவர்களும், சரியான வேலை கிடைக்காததால் திருமணம் தள்ளிப் போகிறவர்களும்தான் இங்கு அதிகம்.

இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையின் வெள்ளப் பாதிப்பினை கண்முன்பே கொண்டு வந்த காட்சி, பிரிவில் தோன்றும் பரிவு, அதனால் ஏற்படும் நெருக்கம் எனக் காதல் காட்சிகளையும் அபாரமாக விவரித்திருக்கிறார். இருவருக்கும் மாற்றி மாற்றி உடல்நலப் பிரச்சினை ஏற்பட, அப்போது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை காதலாக மாறுவதும் அருமை.

புரட்சிப் பெண்ணாய் அறிமுகப்படுத்தப்பட்ட காவ்யா கடைசியில் ஸ்லோகம் படித்து கடவுளை வேண்டி, புடவைக்கு மாறி, கிராமத்துக்குப் போய் அன்பு பாசம் என்ற கூட்டுக்குள் அடங்கி, ஆணாதிக்கம் விரும்பும் அடிமையாய் மாறி தன் சுயம் இழந்து போகிறாள். பெரும்பான்மையானவர்கள் இதை ஆதரிக்கக்கூடும். ஏன் இதற்குப் பெண்களின் ஆதரவும் அதிகமிருக்கும். படித்து முடித்ததும் ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை, இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டில’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் கதை நாடகத்தனமாகி விடுகிறது. அதே மாதிரி கதிரும் வேலையை உதறி, அமெரிக்க வாய்ப்பையும் உதறி கிராமத்துக்குப் போய் அண்ணனோடு விவசாயம் பார்ப்பதும் சினிமாத்தனமே!

காரணம் உறவுகள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. அப்பா-மகன், சகோதரர்களுக்குள் என எந்த நேரத்திலும் மனக்கசப்புகள் வரலாம். பொருளாதாரம்தான் இப்போது அத்தனையையும் தீர்மானிக்கிறது. மனிதம் மெல்ல மெல்ல மரணித்து வருகிறது. உறவுகளுக்குள் கொலை சாதாரணமாகியிருக்கிறது. சுயநலம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனித மனங்களைக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த மாதிரிக் ‘கதைகள்’ படிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டிருந்தேன். குழு நண்பர்களுக்காகவே வாசிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் பெரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடவே நினைப்பேன். நாம் அவசரகால யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கை முறையில் சட்டென்று முடிக்கும் வகையிலிருந்தால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையும். ஒருவேளை வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகளைக் குறி வைத்து எழுதியிருந்தால் நீங்கள் அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கொரோனா காலம் என்பதாலேயே இத்தனை வாசிப்பு சாத்தியமாகியிருக்கிறது. மடிக்கணினியில் வாசிக்க முடியாதது பெரும் குறையாக இருக்கிறது. கைப்பேசியில் படித்தால் கண்வலி வந்துவிடுகிறது. எல்லா வகை கருவிகளிலும் படிக்கிற மாதிரியான பாஃர்மேட்டில் மாற்றுங்கள். அதுதான் என்னைப் போன்றவர்களுக்கு வசதி. மற்றபடிக் குறை சொல்ல எதுவும் இல்லாத படைப்பு. வாழ்த்துகள்.

நட்புடன்,

எம். ஞானசேகரன்.

வியாழன், 6 மார்ச், 2014

எழுதாதே படி!



வர வர பல வலைப்பதிவர்கள் பதிவெழுதுவதை விட்டுவிட்டு முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். பதிவுலகம் சற்று தேக்கநிலையில்தான் காணப்படுகிறது. தீவிரமாக இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பக்கம் பிரபல எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் வலைப்பதிவு எழுத்தாளர்களை மொக்கையாக தினசரி டைரிக்குறிப்பு போல எழுதுகிறார்கள் என்று வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வலைத்தளம் வைத்திருப்பவர்களில் இந்த பிரபலங்களும் அடக்கம் என்பதை ஏனோ மறந்துபோகிறார்கள். அல்லது அவர்களுக்கு மட்டும் எழுத உரிமை இருக்கிறது போல பேசுகிறார்கள்.

எழுதுவது என்பது ஒரு ஆத்ம திருப்தி. தன் மனவோட்டங்களை எழுத்தாக்குகின்ற ஆர்வம் எல்லோருக்கமே இருப்பதில்லை. ஆர்வம் இருப்பவருக்கு எழுத்து கைவரப்பெறுவதில்லை. சமுதாயத்தில் அடிமட்டத்து மக்களின் வேதனைகளையும் வலிகளையும் வெறுமனே கேட்டும் பார்த்தும் பதிவு செய்யும் எழுத்தாளனின் படைப்பைவிட அந்த சூழலில் வாழ்பவனின் நிஜமான அனுபங்களின் பதிவு என்பது வீச்சு கொண்டதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

இப்படி சாதாரணமானவர்களும் தங்களது அனுபவங்களை இணையத்தின் வாயிலாக வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தது என்பது ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல எழுத்து என்பது எப்படியும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே தீரும். இந்த சாதாரணமானவர்கள் பிரபலமடைவதைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரபலங்களே வலைப்பதிவர்களை மொக்கையாக எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.

பிரபலமானவர்கள் இலக்கியப்பணி செய்தாலும் அதன் வியாபாரமாக்கும் உத்தியோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால் சாதாரணமானவர்களோ பிரதிபலன் எதிர்பாராமல் எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை. சொல்லப்போனால் கொஞ்சம் புகழை எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான். வெகுஜன ஊடகங்கள் இவர்களை தூக்கிவிடத் தயாராக இல்லாதபோது கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த வலையுலகம்.



இந்த வலையுலகத்தில் பிரபலமானால் தன்னலேயே ஊடகங்களும் இவர்களை தாங்கிப் பிடிக்க வந்துவிடுகின்றன. அதே சமயத்தில் தமது எழுத்திற்கு அங்கீகாரம் வேண்டுவோர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்பவர் எனில் வேலை நேரம் தவிர்த்த மற்ற எல்லா நேரங்களையும் இதற்காக தியாகம் செய்யவேண்டியிருக்கிறது. நள்ளிரவு வரை கூட எழுதுவோர் உண்டு. இப்படி எல்லோருமே எழுதுவதில்லை. முடிந்த போது முடிந்தவரை என்பதாகத்தான் பலரும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ இந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு பலரால் பலவிதங்களில் பதிவு செய்யப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாளிதழ்கள், கட்டுரையாளர்கள் என இவர்களால் மட்டுமே அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்த காலம் போய் சாதாரணமானவர்களும் பதிவு செய்யக்கூடிய காலம் வாய்த்திருப்பது நமது அதிர்ஷ்டம்தானே.

மேலும் இதில் பிரபலங்கள் வயிற்றெறிச்சல் பட என்ன இருக்கிறது? இவனுங்க எல்லாம் இலக்கியம் எழுத வந்துட்டானுங்க என்கிற அங்காலாய்ப்பு எதற்கு? எழுத்தும் தவம் போலத்தான். தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்தால் கைகூடுவது இயல்புதானே. சமீப காலங்களில் நான் விரும்பி வாசிக்கும் தளங்களில் ஜோதிஜியின் பதிவுகளும், வா. மணிகண்டனின் பதிவுகளுமே இதற்கு முக்கியமான சாட்சிகள்.

இவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டுஎதையும் யாரையும் வாசிக்காமல் வந்துவிடுகிறார்கள் என்பதுதான். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்வது சரியல்ல. உண்மையில் வாசிப்பு பழக்கமோ, விஷய ஞானமோ இல்லாமல் யாராலும் தொடர்ந்து எழுத முடியாது. அதே போல தங்களின் அனுபவங்களை எழுத்தாக்குவதில் தவறென்ன?

பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து வரும் சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக பணி செய்வது ஒரு புறமும், இலக்கிய மற்றும் எழுத்தார்வத்த்திற்காக இப்படி வலையுலகில் இயங்குவதுமாகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். வலைப்பதிவில் இயங்குபவர்கள் எல்லோருமே நுனிப்புல் மேய்கிறவர்கள் அல்லர். அவர்களும் வாசிப்பவர்களே!

வாசிப்பவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பது உண்மையில்லை. புத்தகங்களை வாசித்தவர்கள் இப்போது இணையங்களில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவிகிதம் மிகக்குறைவு. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காசு செலவழிப்பதில் தமிழர்கள் கஞ்சத்தனமானவர்கள். அதுவும் புத்தகத்திற்காக செலவழிப்பதென்றால் சொல்லவே வேண்டாம்.

இதற்கு தீர்வு வந்து பல நாட்களாகிவிட்டது. மின்னூல்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. போதாக்குறைக்கு திரு. இரவி, திரு. சீனிவாசன் போன்றவர்களின் அரிய முயற்சியால் பல பதிவர்களின் பதிவுகளை, எழுத்துக்களை இலவச மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். (அந்த தளத்திற்கான சுட்டி). புத்தகங்களை பல்வேறு வகையான கையடக்க கருவிகளிலும் படிக்கும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள். எனவே என்னைப்போல வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் எழுதுவதை குறைத்து படிக்கத்துவங்குங்கள். 

ஆம்! எழுதாதே! படி! இது எனக்கும் பொருந்தும்!?