ஜென்ஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜென்ஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜனவரி, 2013

முத்து முத்தான வரிகள்!



அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது. வாழ்த்து அட்டை மற்றும் உங்கள் குடும்ப புகைப்படம் இரண்டும் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். உங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கு என் நன்றியை முதலில் அர்பணித்துக்கொள்கிறேன். காரணம் எனக்கு யாருமே வாழ்த்து அனுப்பவில்லை. உங்களுடைய வாழ்த்தும், கவிதாவுடைய வாழ்த்தும் மட்டும்தான் எனக்கு வந்தது.

உங்களின் நட்பு கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களோ, ஏன் என் கணவர் கூட எனக்கு ஒரு கடிதம் போடுவதில்லை. ஒரு அனாதை போலத்தான் நான் இங்கு ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு வந்தேன். உங்களின் கடிதம் வரத்தொடங்கியதிலிருந்துதான் நான் சற்று ஆறுதலாக உள்ளேன். உங்களின் கடிதம் உண்மையிலேயே ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. காரணம் எனக்கு மூன்று அண்ணன்கள். இரண்டு அக்காமார்கள். இருந்தும் யாருடைய கடிதமும் இந்த இரண்டு வருடத்தில் வந்ததில்லை! என் குடும்பத்திலிருந்து இப்படி யாரும் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. ஆனால் உங்களை நான் பார்த்ததே இல்லை. கடிதம் மூலம்தான் அறிமுகம். அப்படி இருந்தும் என் கடிதத்திற்கு பதிலும் எழுதி எனக்கு நல்ல அறிவுறையும் ஆலோசனையும் சொல்லி எழுதியிருப்பது உண்மையிலேயே எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

கடிதத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்தேன். அவ்வளவு முத்து முத்தான வரிகள். எனக்கு கடிதம் எழுதுவதற்கு உங்களுக்கு பலகோடி நன்றிகள்! நான் தற்சமயம் சில மனவேதனைகளோடுதான் உள்ளேன். எல்லாவற்றிற்கும் காரணம் என் கணவர். இதுவரைக்கும் அவருக்கு பொறுப்பு என்பதே கிடையாது. என்னால் முடிந்த அளவு சம்பாதித்தேன். ஆனால் எல்லாமே நஷ்டமாயிற்று. நான் சம்பாதித்து ஒன்றரை லட்சம் பணம் கட்டி வேலை வாங்கிக்கொடுத்தேன். அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் இந்தியா வந்துவிட்டார். தற்சமயம் ஆட்டோ வாங்குவதற்கும் பணம் அனுப்பிக்கொடுத்து வண்டியும் வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அங்கு வந்துவிடு என்று அழைக்கிறார். அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டவள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டேன். மறுபடியும் இரண்டு வருடம் வேலை செய்யலாம் என்று தீர்மாணித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் பணம் இருந்தால்தான் மதிப்பு என்பது உங்களுக்கே தெரியும்.


என் குடும்பத்திற்கு முன்னால் நான் நல்லபடியாக வாழ்ந்து காட்டவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் என் கணவர் அதற்கு ஆதரவாக இல்லை. தற்சமயம் அவர் ஆட்டோ ஓட்டுவதால் எனக்கு ஒரு கடிதம் போடவோ அல்லது என்னைப்பற்றி நினைப்பதற்கோ நேரம் இல்லை. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பணம் வேண்டும் என்றால் மட்டும்தான் எனக்கு ஃபோன் செய்வார் அல்லது கடிதம் போடுவார். என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி. இவை எல்லாவற்றையும் நான் சகித்துத்தானே ஆகவேண்டும். காரணம் நானே தேர்வு செய்த மாப்பிள்ளை! அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்கிறேன்.

புதுவருடம் (டிசம்பர்31 இரவு) 12 மணிக்கு என் கணவரிடம் பேசலாம் என்று ஃபோன் செய்தேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. என் மகளிடம் மட்டுமே பேசினேன். மகளோ 'மம்மி' உடனே ஊருக்கு வாருங்கள் என்கிறாள். எப்படியும் கூடிய சீக்கிரம் நான் சென்னை வருவேன். ஆனால் மீண்டும் இங்கு வருவதாகத்தான் முடிவு.

என் கதையைப் பற்றியே நிறைய எழுதிவிட்டேன். உங்களுடைய குடும்ப புகைப்படம் மிக அழகாக உள்ளது. பிள்ளைகளும் அழகு. இரண்டு கண்மணிகள் என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள். புது வருடத்தில் கடவுள் நல்ல அனுக்கிரஹம் தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். மற்றபடி கவிதா பெயரில் நீங்கள் அனுப்பிய வாழ்த்தும் கிடைத்தது. கவிதா வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாளா? நான் கேட்டதாகச் சொல்லவும். மறுபடி அந்த ஜகந்நாதனைப் போய் பார்த்தீர்களா? ஏதாவது விபரம் தெரிந்ததா?


மற்றபடி நீங்கள் எழுதினது போலவே சிங்கப்பூரில் மிகப் பிரமாண்டமாக புத்தாண்டு விழா கொண்டாடப்ப்பட்டது. 5 லட்சம் பேர் கலந்துகொண்ட விழா அது. நான் போகவில்லை. தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பியதால் நான் வீட்டிலிருந்தபடியே விடிய விடிய கண்டுகளித்தேன். விடியற்காலை நான்கு மணிக்குத்தான் தூங்க்கப்போனேன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்தில் மிக அருமையாக ஓவியம் வரைந்த உங்கள் குடும்ப நண்பர் ஜெயந்திக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மனைவியையும் நான் ரொம்பவே விசாரித்ததாகச் சொல்லவும். கூடிய சீக்கிரம் சென்னை வருவேன். உங்களைக் காண ஆவலோடு வருவாள் இந்த ஜென்ஸி. இன்னும் எனக்கு தொடர்ந்து மடல் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த மடலை முடிக்கிறேன்.

WISH YOU A HAPPY NEW YEAR 2000

MAY GOD BLESS YOUR FAMILY, PLEASE PRAY FOR ME.

இப்படிக்கு,

என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.


செவ்வாய், 1 ஜனவரி, 2013

வாழ்ந்து காட்டவேண்டும்... தொடர்ச்சி


திரைப்படங்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள் அல்லவா? நான் சிறுவயதில் டி.வி.சினிமா போன்றவற்றை பார்த்ததே கிடையாது! காரணம் எங்கள் கிறித்துவ முறைப்படி டி.வி.,சினிமா பார்க்கக்கூடாது. என்னுடைய 18-வது வயதில் என்னுடைய கணவரை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். தற்சமயம் சிங்கப்பூரைப் பொறுத்தவரை சன் டிவி பார்க்க முடியும். சிங்கப்பூர் டி.வி.யிலும் (பிரைம் 12) தமிழ்ப்படம் பார்க்க முடியும். பொதுவாக நல்ல படம் என்று அறிந்தால் மட்டுமே நேரம் செலவழித்துப் பார்ப்பேன். இல்லையென்றால் அதற்காக நிறைய நேரம் செலவழிப்பதில்லை. சிங்கப்பூர் வந்து இதுவரை திரையரங்கில் போய் பார்த்த படங்கள், ஜீன்ஸ், நிலாவே வா, படையப்பா.

மற்றபடி சிங்கப்பூரைப்பற்றி நிறைய அறிய ஆவல் உண்டு என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு பாக்கியம் இருந்தால் நிச்சயம் சிங்கப்பூர் வருவீர்கள். அப்பொழுது முழுமையாக அறியலாம். என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறேன். என்னிடம் பணப்பற்றாக்குறை இல்லாதிருந்தால் நானே ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேன். பணம் மட்டும் ரெடியாக அதாவது ஒன்றரை லட்சம் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் சிங்கப்பூர் வரலாம். இது ஒன்றுதான் பயங்கர கொடுமை. காரணம் இங்குள்ள ஏஜன்ட்டுகள் இதன் மூலம் நன்றாக சம்பாதிப்பதுதான்.

இன்னொரு விஷயம், பெண்களுக்கு சிங்கப்பூரில் நல்ல மதிப்பும் மரியாதையும் எங்கு சென்றாலும் கிடைக்கும். வேலை பார்க்கின்ற இடமாக இருந்தாலும் சரி, அல்லது வீடாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் சம உரிமை சிங்கப்பூரில்! மற்றவற்றை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். மற்றபடி கவிதாவிற்கு நல்ல ஆலோசனை சொல்லுங்கள். நன்றாக யோசித்து ஒரு முடிவு எடுக்கச்சொல்லுங்கள். அவளுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

உங்கள் மனைவி, குழந்தைகளைக் நான் நிறையவே விசாரித்ததாகச் சொல்லுங்கள். குழந்தைகள் இருவருக்கும் அன்பின் முத்தங்கள். என்னை யார் என்றே அவர்களுக்குத் தெரியாது. பரவாயில்லை. நான் சென்னை வந்தால் நிச்சயம் உங்களை வந்து பார்க்கிறேன். தற்போது என்னுடைய புகைப்படம் ஒன்றை அனுப்புகிறேன். அதை அவர்களிடம் காட்டுங்கள். மற்றபடி எல்லா நலனும் பெற்று, வாழ்வில் வெற்றிநடை போட உங்கள் குடிம்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.

குறிப்பு; இந்த கடிதம் எழுதி முடித்தபிறகு எனக்கு ஒரு தகவல் ஒரு நண்பர் மூலமாகக் கிடைத்தது. மாம்பலத்தில் ஒரு ஏஜன்ஸி உள்ளது. அதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். அந்த முகவரியை எழுதுகிறேன். நீங்கள் உங்களுடைய எல்லா விபரங்களையும் எடுத்துக்கொண்டு அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கு தேர்வானால் விமானப் பயணத்திற்கான கட்டணம் மட்டும்தான் செலவாகும். கண்டிப்பாக அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கிருந்து நிறைய பேரை சிங்கப்பூருக்கு அனுப்புகிறார்கள். அதிர்ஷடம் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வாழ்ந்து காட்ட வேண்டும்! – சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்



ஹலோ ஃபரண்ட்,                                         28.12.1999
உங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். பதில் எழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். அதுபோலவே நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.

மற்றபடி என் கணவருடன் பேசினேன். அவர் என்னை மார்ச் மாதம் கட்டாயம் மெட்ராஸ் வரவேண்டும், மறபடியும் சிங்கப்பூர் போகவேண்டாம் தற்சமயம் ஆட்டோ உள்ளது. அதை வைத்து சமாளித்து விடலாம். கண்டிப்பாக ஊருக்கு வா என்கிறார். காரணம் மகளைப் பார்க்கவும் ஆளில்லை. நான் உங்களுக்கு முன்னமே எழுதியபடி தற்சமயம் என் சொந்தமல்லாத ஒரு ஆன்டிதான் அவளைப் பார்த்துவருகிறார்கள்.

என்னுடைய லட்சியம் நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகுதான், அதாவது இன்னும் 2 வருடம் வேலை செய்த பிறகு சென்னை வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். எப்படியும் நான் முயற்சி செய்கின்ற வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அது கிடைத்தால் நான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழலாம். காரணம் என் தாய், சகோதரர்கள், சகோதரிகள் முன்னிலையில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளேன். ஆனால் என் ஆசைகள் நிறைவேறுமா தெரியவில்லை?!

காரணம், என் கணவர் அங்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அப்படி நான் வரவில்லை என்றால் அவர் இஷ்டத்துக்கு நடப்பாராம். நான் முன்பே இங்கு இன்னும் 2 வருடம் வேலை செய்வதைப்பற்றி எழுதியிருந்தேன். அதற்கு கோபப்பட்டுத்தான் எனக்கு கடிதமே போடாமல் இருந்தார். அவர் அவரது வீட்டில் தாய் தந்தையுடன் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை. மொத்தத்தில் குழம்பிப்போய் உள்ளேன்.

இனி கவிதா விஷயத்துக்கு வருவோம். 21 -ம் தேதி அவளும் சரவணனும் ஃபோனில் பேசினார்கள். உண்மையில் கவிதாவிடம் பேசியதில் சந்தோஷப்பட்டேன். கடைசியாக 1998 மார்ச் 18 ம் தேதி நான் வருகின்ற சமயம் ஏர்போர்ட்டில் பேசியதோடு சரி, அப்புறம் பேசவேயில்லை. அதனால்தான் அந்த சந்தோஷம். நான் அவளுடைய விருப்பத்தைக் கேட்டேன். அவளுக்குள் ஆசை உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக முடியாது என்று சொல்கிறாள் என்று நினைக்கிறேன். சரவணனும் கவிதா ஒத்துக்கொண்டால் நான் காத்திருக்கிறேன் என்கிறார். அவள் வீட்டில் இதைப்பற்றிச் சொல்ல பயப்படுகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். எப்படியோ நீங்கள் சொல்வது போலவே அவரவர் இஷ்டத்துக்கு விட்டுவிடுவோம். காலம் பதில் சொல்லட்டும்.

மற்றபடி, நம்முடைய MEPZ -ல் உள்ள கம்பெனிகள் எல்லாம் முதலில் பெரிய அளவில் செயல்படுவார்கள். திடீரென ஒட்டுமொத்தமாக மீடிவிட்டு ஓடிவிடுவார்கள். J.T.S. கம்பெனியின் அனுபவம் ஒன்றே சான்று. இது பற்றி உங்களுக்கும் தெரியும்தானே! அதனால்தான் அதைப்பற்றி அதிகம் எழுதவில்லை. இந்தியாவில் இப்படி நிறைய கம்பெனிகள். என்ன செய்வது?

புதிய வருடம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளது. என்னைப் பொருத்தவரை நாட்கள் வெகு சீக்கிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த 1999 -ம் ஆண்டு பல துயர சம்பவங்கள், பல பயங்கர விபத்துக்கள் எல்லாம் நடந்துள்ளன. இனி 21-ம் நூற்றாண்டு பிறக்கப்போகிறது. ஹூம்... இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ நாம் அறியோம். இனி வருகின்ற நாட்களாவது நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

வெள்ளி, 13 ஜூலை, 2012

எப்படி அந்த முடிவை எடுப்பது? சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்


                                                              God is Love                   02.05.2000
அன்புள்ள கவிப்ரியன் அவர்களுக்கு, ஜென்ஸி எழுதுவது. நான் நலமாக உள்ளேன். உங்களுடைய கடிதத்திற்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். 27-ம் தேதி உங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். கடிதம் வரவில்லை என்றதும் பயந்துவிட்டேன். காரணம் நான் ஏதாவது தவறாக எழுதிவிட்டேனா என்று!

உங்கள் கடிதம் படித்து உங்களின் சூழ்நிலைகளை அறிந்துகொண்டேன். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். மற்றபடி நான் போன தடவை உங்களுக்கு கடிதம் அனுப்பியபோது கவிதாவிற்கும் லெட்டர் அனுப்பியிருந்தேன் அல்லவா? அந்த கடிதத்திற்கு கவிதா உடனே பதில் அனுப்பியிருந்தாள். நீங்கள் எழுதியபடியே கவிதா அவளது வீட்டு சூழ்நிலைக்காகத்தான் சரவணனை திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று சொல்லியிருக்கிறாள். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

மற்றபடி என் கணவர் இதுவரை எனக்கு ஒரு லெட்டர் கூட போடவில்லை. அவருக்கு பணம் அனுப்பிக்கொடுக்கவில்லை என்று கோபம். மாதம் 3000 ரூபாய் வண்டிக்கு கட்டவேண்டும். அதைக்கூட ஒழுங்காக கட்டுவதில்லை. வண்டியில் வருகிற வருமானத்தை என்னதான் செய்கிறார் என்று தெரியவில்லை. என் மகளிடம் ஒருநாள் ஃபோனில் பேசியபோது, வண்டிக்கு இன்னும் DUE  கட்டவில்லையாம், அப்பா உங்களிடம் சொல்லச்சொன்னார் என்றாள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் இப்படி சிங்கப்பூர் வராமலிருந்திருந்தால் இவர் எப்படி வண்டிக்கும் தவணை கட்டி எங்களையும் காப்பாற்றுவார்? எல்லோர் முன்னாலும் வேஷம் போட்டார். அந்த சமயத்தில் நான் மட்டும் அங்கேயே இருந்திருந்தால் என் நிலைமை என்னவாயிருக்கும். இதெல்லாம் தெரிந்துதான் நான் மறுபடியும் சிங்கப்பூர் வந்தேன்.

இன்னும் இவருக்கு ஒரு பொறுப்பும் வரவில்லை. நான் இவரைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தேன். எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இனி அந்த மனிதனை நம்பினால் வேஸ்ட்தான். என் மேல் பாசம் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார். கடவுள்தான் இவரை திருத்தவேண்டும். நீங்கள் எழுதினபடியே என் அண்ணன்மார்கள் எல்லோரும் சொன்னார்கள். அவரை விவாகரத்து செய். உன்னையும் உன் மகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் காதல் திருமணம் செய்த நான் எப்படி அந்த முடிவை எடுப்பது என்றுதான் குழம்பிப்போய் உள்ளேன்.

என் மகளுக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போனமுறை நான் இந்தியா வந்தபோது, என் கணவரிடம் உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு அதற்கு முழு சம்மதம். நானும் என் மகளும் எப்படியாவது வாழ்ந்துகொள்கிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர் விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளமாட்டாராம். என் மகளையும் கொடுக்கமாட்டாராம். என்னை வாழவும் விடமாட்டாராம், சாகவும் விடமாட்டாராம். நீ சிதரவத்தைப்படவேண்டும் என்று சொல்கிறார். இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்?


உணமையிலேயே என் வாழ்க்கை நரகமாகிவிட்டது. இதைவிட நல்ல வசதியானவர்கள், படித்தவர்கள் எல்லாம் என்னை விரும்புவதாகச் சொன்னார்கள். அதற்க்கெல்லாம் நான் ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் எப்படியோ இவரிடம் வந்து மாட்டிக்கொண்டேன். சிலவேளை நினைப்பேன்... என் சொந்த மாமாவின் மகன் என்னை அதிகமாக நேசித்தான். என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தான். ஆனால் நான்தான் சம்மதிக்கவில்லை. அவனை மட்டும் திருமணம் செய்திருந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும். என் தலையெழுத்து இவரை திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படவேண்டும் என்று உள்ளது! என்ன செய்வது அவரவர் விதியை மாற்ற முடியுமா?


அதனால் என் வாழ்க்கை இனி சந்தோஷமாக மாறுமா என்று சொல்ல முடியாது. என் மகளுக்காக வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் இனி என் கணவருக்கு லெட்டரோ, பணமோ அனுப்ப மாட்டேன். கடவுள் அவரை திருத்தட்டும், அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். மற்றபடி உங்கள் கடிதம் வந்ததில் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதாவது எனக்கு நல்ல ஆலோசனையும் ஆறுதலும் சொல்ல உங்களைப் போன்ற ஒரு நண்பர் கிடைத்ததில் சந்தோஷப் படுகிறேன். உங்களுடைய ஒரு லெட்டர் வந்து, அடுத்த லெட்டர் வரும்வரை வந்த அந்த பழைய லெட்டரை எடுத்து படித்துக்கொண்டே இருப்பேன். மனதிற்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது உங்கள் கடிதம்.

யாருமில்லாமல் அனாதையாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கும் அன்பு காட்ட ஒரு குடும்பம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றபடி தற்சமயம் தலைவலி பராவாயில்லை. மருத்துவமனைக்குச் சென்றுவந்தேன். அதன் பிறகு தலைவலி இல்லை. ஆனாலும் தனிமையில் உட்கார்ந்து ஏதாவது நினைத்து அழுதுவிட்டால் உடனே தலைவலி வந்துவிடும். மாத்திரை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் ஃபேமிலி ஊருக்கு போனதாக எழுதியிருந்தீர்கள். தனிமையில் எப்படி சமாளிக்க முடிகிறது. காரணம் இரண்டு இடத்தில் வேலை செய்து களைத்துப் போய் வரும் உங்களுக்கு வீட்டில் ஆள் இல்லை என்றால் இன்னும் கஷ்டம் இல்லையா? எல்லாவற்றையும் சமாளிக்க தைரியம் உள்ளது அப்படித்தானே! நான் எழுதியது சரிதானே! மற்றபடி ஊருக்குப் போனால் அவர்களையும் கேட்டதாகச் சொல்லவும்.

மற்றபடி உங்கள் வேலை விஷயம்.... தொடர்ந்து ஜகந்நாதன் அவர்களிடமே முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம். நான் இங்கு பல இடங்களில் விசாரித்துவிட்டேன், பணம் இல்லாமல் யாரிடமும் நெருங்க முடியாது. என்ன செய்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கடவுள் நிச்சயம் ஒரு வழி காட்டுவார் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

கவிதா உங்கள் வீட்டிற்கு வரும்போது அவளிடம் என் விபரங்களைச் சொல்லுங்கள். மற்றபடி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது கடிதம் எழுதுங்கள். நானும் கண்டிப்பாக கடிதம் எழுதுகிறேன்.

தற்சமயம் இந்த மடலை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த மடலில் என் சோகக் கதையைத் தொடர்கின்றேன்.

By,
Jensy Singapore




வியாழன், 26 ஏப்ரல், 2012

நண்பர்கள் மட்டுமே ஆறுதல்!


GOD IS LOVE

Hello Brother,

உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் போட தாமதம் ஆனதில் மன்னிக்கவும். கடவுள் அருளால் நான் நல்லபடியாக உள்ளேன். என் மகளும் நல்லபடியாக உள்ளாள். எல்லா வாரமும் ஒருமுறை அவளுடன் ஃபோனில் பேசுவேன். மற்றபடி என் கணவர் இதுவரை லெட்டர் போடவில்லை. காரணம் ஏன் தெரியுமா? இந்த முறை வந்து அவருக்கு பணம் ஏதும் அனுப்பிக் கொடுக்கவில்லை, அதனால்தான்.


உங்கள் லெட்டர் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் என்னுடைய சூழ்நிலைகளை எல்லாம் அறிந்துகொண்டு மனப்பூர்வமாக பதில் அனுப்பி உள்ளீர்களே அதை நினைத்துதான். நீங்கள் எழுதிய அனைத்து விஷயங்களும் சிந்திக்கக்கூடிய விஷயங்கள்தான். காரணம் என் திருமணம் முடிந்து வருகின்ற ஜூன் 7 ம் தேதியோடு 14 வருடங்கள் முடிகின்றது. ஆனால் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்த காலம் வெறும் 5 வருடம் மட்டும்தான். அப்புறம் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அன்றைய தினத்திலிருந்து என் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஏன் காதலித்து திருமணம் செய்தேன் என்று இப்போது நினைக்கிறேன்.

நீங்கள் எழுதினீர்கள், ஏன் இன்னொரு துணைவரைத் தேடக்கூடாது என்று! உண்மையிலேயே எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நினைக்கும்போது, இனி எனக்கு ஒரு துணை வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். என் மகளுக்காக மட்டும் இந்த உலகத்தில் வாழ வேண்டும், அவளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட மாதிரி அவளும் படக்கூடாது. 


நான் வாழ வேண்டிய வயதில் சரியாக வாழவில்லை. இனி எனக்க்கென்று யார் வாழ்வு கொடுக்க வருவார்கள்? பெண்களைப் பற்றி எழுதினீர்கள், தியாகிகள் என்று. அந்த தியாகத்தைக் கடைபிடித்துக் கொண்டுதான் இவ்வளவு நாட்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பெண்களால் அப்படி வாழ முடியும். ஆனால் ஏனோ ஆண்கள் அப்படிப்பட்ட பெண்களுக்கு துரோகம் செய்து விடுகிறார்கள். என் வயது சரியாக 32. இனியும் யார் என்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்? 

என்மேல் பாசமுள்ள கணவராக இருந்திருந்தால், இரண்டு வருடம் பொறுத்து வந்த என்னை ஏமாற்றி இருக்க மாட்டாரே! அவருக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க ஆள் இருந்திருக்கும். அதனால்தான் என்னை அவர் அலட்சியப்படுத்தினார். என்னைப் பொருத்தவரை அந்த சந்தோஷத்தைவிட உண்மையான அன்பு பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். செக்ஸ் இல்லாமல் என்னால் எத்தனை வருடம் வேண்டுமானாலும் வாழ முடியும். காரணம் நான் அனுபவித்த வேதனைகள் அவ்வளவு. பல வருடத் தனிமையினால் பழகிவிட்டேன்.

நான் இப்படி எழுதிவிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். நீங்கள் வெளிப்படையாக எழுதினது போலவே, நானும் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். என்னைப் பொருத்தவரை இனி என் கணவருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளமாட்டேன். வெளி உலகத்துக்கு வேண்டுமானால், கணவன் மனைவியாக வாழ்வேனே தவிர இனி எந்த உறவும் இருக்காது. காரணம் என் மகளுக்கு தந்தை என்று சொல்ல ஒரு ஆள் வேண்டும் அல்லவா?

நான் போனமுறை அவரிடம் கேட்டதற்கு, ‘உன்னை வாழவும் விடமாட்டேன், சாகவும் விடமாட்டேன் என்று சொன்னார். அதாவது என்னை சந்தோஷமாக வைத்து குடும்பம் நடத்தமாட்டாராம். இந்த அர்தத்தில் இப்படிப் பேசினார். என்னை இந்த அளவிற்கு துன்பப் படுத்துவதற்கு நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எந்த துரோகமும் செய்யவில்லை. அவர் முழுமையாக தவறு செய்துவிட்டார் என்று தெரியும். அதே போல நானும் தவறு செய்திருப்பேனா என்ற சந்தேகம்தான்.

அதனால்தான் ஃபிரண்ட்ஸ் என்று பேசினாலே வீணாகக் கோபப்படுவார். ஒருமுறை சபாபதி சார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரை ரொம்பவும் இன்சல்ட் பண்ணிவிட்டார். இந்த மாதிரி சுபாவம் திருமணம் ஆன புதிதில் இல்லை. என் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருந்த அவரை யார் தான் இப்படி மாற்றினார்களோ அந்த கடவுளுக்குத்தான் தெரியும். 

வார்த்தைகளாலே என் மனதை அதிகமாய் வேதனைப் படுத்தி உள்ளார்.
உண்மையிலேயே அவர் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தேன். ஆனால் என் பாசத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இப்பொழுது அவர் இல்லை. என் வீட்டில் உள்ளவர்கள் எத்தனையோ தடவை அவரை விவாகரத்து செய் என்று சொன்ன நேரங்கள் உண்டு. நான் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டேனே, நாளை இப்படி ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் ஊர் உலகம் என்ன பேசுவார்கள் என்று யோசித்தேன். அதனால்தான் இன்னும் வேதனைகளை அனுபவித்து வருகிறேன்.

எத்தனையோ கிலோமீட்டருக்கு அப்பால் நான் உள்ளேன். சொந்தங்கள், அம்மா, அண்ணன்கள், அக்கா எல்லோரும் இருந்தும் ஒரு அனாதை போலவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உண்மையிலேயே என்னை ஆறுதல்படுத்த உங்களைப் போன்ற நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தத்தில் நண்பர்கள்தான் இப்போது சொந்தங்களைப் போல! மற்றபடி 
கவிதா வீட்டிற்கு வந்த பொழுதே உங்களுக்கு என் கணவரைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடும்.

அவருடைய சுபாவத்தினால்தான் சென்னை வந்த சமயம் கூட அவருக்கு தெரிவிக்காமல் வந்தேன். தெரிவித்திருந்தால் உங்களையோ, சபாபதி சாரையோ யாரையுமே பார்த்திருக்க முடியாது.
நான் இந்த தடவை வந்து நான்கு மாதம் முடியப்போகிறது. இதுவரை ஒரு லெட்டர் கூட எனக்கு என் வீட்டிலிருந்தோ, என் கணவரிடமிருந்தோ எனக்கு வரவில்லை. உண்மையிலேயே உங்கள் நட்பு கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். 

இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போதே (இன்று) கவிதாவின் லெட்டர் வந்தது. எனக்கென்று நீங்களும் கவிதாவும்தான் கடிதம் எழுதுகிறீர்கள். வேறு யாருடைய கடிதமும் எனக்கு வந்ததில்லை. மற்றபடி எழுதிக்கொண்டே போனால் நிறைய எழுதலாம்...

இனி, உங்களுடைய விஷயத்திற்கு வருகிறேன். உங்கள் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் நலம்தானே! நான் ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லுங்கள். உங்களுக்கு ஏதேனும் இன்டர்வியூ வந்ததா? அந்த ஜெகன்நாதனைப் போய் மீண்டும் பார்த்தீர்களா? என்ன சொன்னார்.

மற்றபடி இதில் ஒரு பேப்பரில் கவிதாவிற்கும் எழுதியுள்ளேன். கவிதாவின் முகவரியையும் எழுதுகிறேன். சிரமம் பாராமல் அவளுக்குப் போஸ்ட் செய்யுங்கள். மறக்காமல் எனக்காக இந்த உதவியைச் செய்யவும். இனியுள்ள விஷயங்களை அடுத்த மடலில் எழுதுகிறேன். 

நேரம் கிடைக்கும் போது எனக்கு கடிதம் எழுதுங்கள். நானும் தொடர்ந்து எழுதுகிறேன். என் கையெழுத்து சரியாக இருக்காது. காரணம் இரவு தூக்கக் கலக்கத்தில் அவசர அவசரமாக எழுதியது. அதனால் மன்னிக்கவும்.

By
உங்கள் அன்புச்சகோதரி மற்றம் தோழி!
ஜென்ஸி.
சிங்கப்பூர்.
Please pray for me.

‘மலர்கள் மலர்வதற்காக இயற்கை செய்யும் உதவிகள் வெளியே தெரியாது. அதைப்போலத்தான் நண்பர்கள்



செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சிங்கப்பூரிலிருந்து ஜென்ஸி ...


சென்னையில் நான் வாடகை வீட்டில் வசித்தபோது பக்கத்து வீட்டில் கவிதா என்ற பெண்ணும் அவள் சகோதரி ஒருத்தியும் அவளது அம்மா என மூன்று பேர் வசித்து வந்தார்கள். கவிதா என்னிடம் கொஞ்சம் கலகலப்பாக பேசுவாள். ஏதாவது விபரம் தேவை எனில் என்னைத்தான் கேட்பாள். சென்னையிலுள்ள பிரபல கார் கம்னியிலிருந்து அவளுக்கு இன்டர்வியூ வந்தபோது என் வழிகாட்டுதலினால்தான் வேலை கிடைத்தது 

அந்த நேரத்தில் நான் வேலை செய்த நிறுவனம் மூடும் நிலையில் இருந்ததால் வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
அப்போது இந்தக் கவிதா, எனக்கு ஜென்ஸி என்ற ஸ்நேகிதி (அக்கா) இருப்பதாகவும், அவர்கள் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் சொன்னாள். வேண்டுமானால் நான் முகவரி தருகிறேன், நீங்கள் வேலைக்காக அவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒருவேளைஉங்கள் நல்ல நேரம் வேலை கிடைத்தாலும் கிடைக்குமில்லையா? முயற்சிதான் செய்து பாருங்களேன்என்றாள்.

ஆனால் அறிமுகமில்லாதவர்களிடம் எப்படி திடீரென்று கடிதம் எழுதுவது? அதனால் ஒருஏரோகிராம்வாங்கி வந்து, முதல் பாதி கடிதத்தை கவிதாவை எழுதச்சொல்லி, மறுபாதியில் நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு கடிதம் எழுதினேன். பத்தே நாளில் பதில் வந்தது. எனக்காக முயற்சி செய்வதாகவும், என்னை நண்பனாகவும், சகோதரனாகவும் ஏற்றுக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். எனக்கோ ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம், எப்படியும் சிங்கப்பூருக்குப் போகப் போகிறோம் என்ற சந்தோஷம் மறுபுறம்.

ஒரு கட்டத்தில் இந்தக் கவிதா காணாமல் போய்விட்டாள். கார் கம்பனிக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு போனவள் என்ன ஆனாள் என்று தெரியாது. ஆனால் இந்த ஜென்ஸியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தன் எல்லா மனக்குமுறல்களை எல்லாம் கொட்டித்தீர்த்தார் இந்த ஜென்ஸி. நான் என்ன எழுதினேன், எதைப் பகிர்ந்து  கொண்டேன் என்று நினைவில்லை.

மனிதர்கள் எல்லோருமே ஆதரவான உறவுக்கு ஏங்குகிறவர்களாகவும், தன் துயரங்களை நம்பிக்கையானவர்களோடு பகிர்ந்து ஆறுதல் அடைகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் காதலன், கணவன், நண்பன் என்று ஏதோ ஒரு துணையின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அது எதிர்பார்த்தவர்களிடம் கிடைக்காதபோது, யார் அப்போது நம்பிக்கையானவர்கள் கிடைக்கிறார்களோ அவர்களிடம் தன் மனத்துயர்களை பகிரத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதுவும் ஒரு காலகட்டத்தில் சூழ்நிலைகளினாலோ, கருத்து வேறுபாடுகளினாலோ, இடம் பெயர்தல்களினாலோ தொடர்பற்றுப் போய்விடுகிறது. ஆனாலும் பழைய நினைவுகளை, நண்பர்களை மறந்து விட்டார்கள் என்று நினைக்க முடியுமா? நான் இப்போது நினைத்து இங்கே எழுதிக் கொண்டிருப்பதைப்போல, அவர்களும் என்னை எப்போதாவது நினைத்துப் பார்க்கலாம்!

யாரோ ஒரு பக்கத்து வீட்டுப் பெண்ணின் அறிமுகத்துடன் தொடர்ந்த இந்த நட்பின் பரிமாணங்கள் என்னை அந்தக் காலகட்டத்தில் மிக மகிழ்ச்சியாக வைத்திருந்தது. எனது நட்பின் தேவையும், ஆறுதலும் ஜென்ஸியையும் சந்தோஷப்படுத்தியது. அவர் மூலம் வேலை கிடைத்ததோ இல்லையோ அவரின் நட்பு கிடைத்ததே பெரிய விஷயமாய்க் கருதினேன்

விடுமுறையில் அவர் இந்தியா வந்தபோது, எனக்காகவும், என் மனைவி குழந்தைகளுக்காகவும் துணிமணிகள் சாக்லெட் என்று கொண்டுவந்து அசத்தினார். இந்தியா வந்தபோது விமான நிலையத்தில் வரவேற்க நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியிருந்தார்.  

எத்தனையோ முறை சென்னை விமானநிலையம் வழியே நான் சென்றிருந்தாலும், முதன்முறையாக, விமான நிலையத்தினுள், அதுவும் உறவினரல்லாத ஒருவரை வரவேற்க நான் சென்றது இன்றுவரை மறக்கமுடியாத நிகழ்வாகும். கணவர், உறவினர்களுக்குக் கூட அவர் வருவதைத் தெரிவிக்கவில்லை.

அவரின் கடிதங்களில் ஒரு பெண்ணின் மனத்துயரங்கள், அவரின் குடும்பச்சுமை, குழந்தையின் பிரிவு, அன்பு, பாசத்திற்கான ஏக்கம், வெளிநாட்டில் பணிபுரியும் சூழல் என எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம். அவரின் கடிதங்கள் அடுத்த பதிவிலிருந்து... தேதிவாரியாக இல்லாமல் முன்பின் இருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துரைகளைச் சொல்லுங்கள்.