வெள்ளி, 12 ஜூலை, 2013

நாத்திகர் எம்.ஜி.ஆர் ஆத்திகர் ஆன போது…


எம்.ஜி.ஆர். தி.மு..வில் சேரும் வரை (1952) காந்தியவாதியாக கதர் உடை அணிந்து கழுத்தில் துளசி மாலை அணிந்து நெற்றியில் பட்டையாக சந்தனம், குறுக்காக குங்குமக் கோடிட்டு பக்திப் பழமாக இருப்பாராம்.

முருகக் கடவுள், அம்மனின் மீது அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோவில்களுக்கு தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் அன்னை சத்தியபாமா அடிக்கடி தன் உறவினர் வேலு நாயர் துணையுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவாராம். சில சமயம் எம்.ஜி.ஆரும் தாயுடன் சென்று வந்திருக்கிறார்.

தி.மு..வில் சேர்ந்த பின் எம்.ஜி.ஆர். நாத்திகவாதியாக மாறினார். கோவில்களுக்குச் செல்வதை நிறுத்தினார். கதர் உடை பட்டுத் துணியாக மாறியது. திரைப் படங்களிலும் நாத்திக உணர்வுடன் நடித்தார். நடிப்புக்காகக் கூட நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளமாட்டார். ஆனாலும் வீட்டில் ஏசுவின் படத்தை மாட்டி வைத்திருக்கிறார். துன்பம் நேரிடும் சமயங்களில்முருகாஎன்றும் ஏசுவே என்றும் கூறுவதை அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புராணப் படங்களே அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில்புராணப் படங்களில் நடிப்பதில்லை. சமூக கதைப் படங்களில்தான் நடிப்பது என்ற சபதத்தோடு இரண்டு நடிகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும். ஆனாலும் இருவருமே அதை கடைபிடிக்க முடியவில்லை. இதற்கான காரணம் பற்றி 1949-ல் வெளிவந்த சினிமா இதழ் ஒன்றில் இப்படி சொல்லப் பட்டிருந்தது.

படத் தொழிலில் ஈடுபட்ட உடனேயே ராமச்சந்திரன் சமூகப் படங்களில்தான் நடிப்பதுஎன்று தீர்மானம் செய்து கொண்டார். முதல் மூன்று படங்களையும் அவற்றில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும் கவனித்த பின்னர்இந்த தீர்மானத்தை முதலில் பறக்க விடவேண்டும். இல்லாவிட்டால் நாமே சினிமா உலகில் இருந்து பறந்து விடவேண்டும்என்பதை அறிந்து கொண்டார். சூழ்நிலை கருதி தன் தீர்மானத்தை கைவிட்டு விட்டார்.’

இதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த புராணப் படங்கள் தட்சயக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதா ஜனனம் (இந்திரஜித் வேடத்தில்), ஜோதி மலர் (சிவன் வேடம்), தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, ஸ்ரீமுருகன் (சிவன் வேடம்), அபிமன்யூ (அர்ச்சுனன் வேடம்). இதெல்லாம் தி.மு..வில் சேருவதற்கு முன்.

சேர்ந்த பின் புராணம் சம்பந்தப்பட்ட படங்களை அறவே தவிர்த்திருக்கிறார். மாயாஜாலம், பக்தி சம்பந்தப்பட்ட படம் என்பதற்காக ராமண்ணா டைரக்ஷனில் காத்தவராயன் படத்தில் நடிக்க மறுத்தார். ராமண்ணாவை தன் விருப்பப்படி சம்மதிக்கச் செய்து விடலாம் என்று முதலில் காத்தவராயன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு செட்டுக்குப் போன எம்.ஜி.ஆர்- அங்கு மந்திரக் காட்சிகளை தந்திரத்தால் வெல்வது போன்ற காட்சிகளாக மாற்ற வேண்டும் என்று யோசனை தர, ராமண்ணா மனுத்துவிட்டார். அதனால் அந்த படத்தில் இருந்தே எம்.ஜி.ஆர். பின் வாங்கியதால் பிறகு சிவாஜி நடித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேவரின் தனிப் பிறவி படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஜெயலலிதா வள்ளிக் குறத்தியாக, எம்.ஜி.ஆர். முருகக் கடவுளாக நடித்தார். அதுவும் கனவுக் காட்சி என்ற பெயரில். முருகன் எம்.ஜி.ஆரின் இஷ்ட தெய்வம் வேறு.

ஏசு படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த தலைவன் படத் தயாரிப்பாளர் பி..தாமஸ் ஒரு யுக்தி செய்தார்.

தலைவன் படம் தொடங்கி நீண்ட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ் எம்.ஜி.ஆர். விருப்பப்படி ஏசுநாதர் படத்தை துவக்கினார். ஆனால் கதையின் முடிவில்ஏசுவைச் சிலுவையில் அறைவதுபோன்ற காட்சியில் நடிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம் என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க படம் பூஜையோடு நின்றது.

ஆனால் தாமஸ் அதை ஜீஸஸ் என்ற பெயரில் மளையாளத்தில் எடுத்து தமிழிலும் வெளியிட்டார். ஜெயலலிதா அதில் நடனக்காரியாக நடித்தார்.
1976-ல் வெளிவந்த உழைக்கும் கரங்கள் படத்தில் எம்.ஜி.ஆர். சிவன் வேடத்தில் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தார்.

எம்.ஜி.ஆரின் பல படங்களை டைரக்ட் செய்திருப்பவர் கே.சங்கர். அவர் மூகாம்பிகை கோயிலுக்கு வருடம் தவறாமல் சென்று வந்தவர். அந்த கோவிலின் மகிமையைப் பற்றி எம்.ஜி.ஆரிடமும் பலமுறை கூறியிருக்கிறார்.

1976 நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் மீனவயண்பன் படப்பிடிப்பு நடந்தது. பட்ப்பிடிப்பு முடிந்தபின் ஒருநாள் டைரக்டர் கே.சங்கருடன் அதிகாலை ஐந்து மணிக்கு கொவிலுக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பி விட்டார்.

1977-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒருமுறை சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் தன் மனைவி வி.என்.ஜானகியுடம் (மதுரையில் நாடோடி மன்னன் வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளை கொடுத்து அனுப்பினார்.

உறையுடன் சேர்த்து முக்கால் கிலோ தங்கம் உள்ள அந்த வாளின் மொத்த எடை இரண்டரை கிலோ. தங்க வாளை இரவு மூகாம்பிகைக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள். மூகாம்பிகை கோவில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள கோவில்களில் உள்ள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி ஆண் பக்தர்கள் தங்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.ஜி.ஆரும் ஒவ்வொரு முறையும் தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றி கோவிலுக்குள் சென்று வந்திருக்கிறார்.


6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

காத்தவராயன் படத்தகவல் உட்பட தலைவரின் பல தகவல்கள் அறியாதவை... நன்றி...

Jayadev Das சொன்னது… [Reply]

good

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே!

வே.நடனசபாபதி சொன்னது… [Reply]

எம்.ஜி‌.ஆர் உடுப்பி வந்தபோது நான் அங்கு பணி புரிந்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் எங்களுடைய மணிப்பால் - உடுப்பி தமிழ் சங்கத்திற்கு வந்து பேசியது இன்னும் நினைவில் உள்ளது.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வே. நடனசபாபதி அவர்களே உங்களுக்கும் அது மறக்க முடியாத நினைவாகத்தான் இருக்கும். தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!