உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜூன், 2013

அண்ணிமார் கதை - எனக்குப் பிடித்த கவிதை


அண்ணிகள் என்றாலே
பிரியம் குழைந்த வெட்கமும்
வெட்கம் குழைத்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு!

துவைப்பதற்கு
எடுக்குப்போது
நம் சட்டைப் பையில் இருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
சிகரெட்டையும்
நம்மிடமே
திருப்பித் தந்து
நாணமுறச் செய்கிறார்கள்!

நம் காதல் குறித்தும்
அரியர்ஸ் குறித்தும்
அடிக்கடி
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்

நண்பர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
வீடு திரும்புகையில்
ஒட்டுமொத்தக் குடும்பமும்
ஒன்றாக எதிர்க்க
அண்ணிகள் மட்டும்
ஆதூரமாய்ப் பேசி
அமுது படைக்கிறார்கள்!

தாயைப் போலவே
நம் தவறுகளை
மென்மையாய்க் கண்டிக்கும்
அண்ணிகள்
‘தாயில்லாதவனின்
மணிபர்ஸில்
புகைப்படமாய்
இடம் பிடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு கோபத்தில்
அண்ணனுடன்
தனிக் குடித்தனம்
போய்விட்ட பிறகு
ஏனோ நம்மை
ஒரு பகைவனைப் போல்
பார்க்கத் தொடங்குகிறார்கள்!

அ. நிலாதரன், ஆ.வி.யில்

செவ்வாய், 28 மே, 2013

மனசே மனசே கதவைத்திற!

 (பாலகுமாரன் பக்கம்)



காதல் என்பது காமத்தின் நாகரிகமான வெளிப்பாடு. காதல் என்ற வார்த்தைக்கு காமம்தான் அடிப்படை. உடம்புதான் முதற்பொருள். சுவரை வைத்துதான் சித்திரம். உடம்பை வைத்துதான் உறவுகள். உடம்பு என்பது உணர்வுகளின் மூட்டை. உணர்வுகளை மதிக்க உடம்பையும் மதிக்கவேண்டும்.

என் காதல் தெய்விகமானது என்று எவரும் சொன்னால் அவர் உடம்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாது பேசுகிறார் என்று இங்கே சொல்லப்படுகிறது. இது வெறும் பொய். உடம்பில்லா மனிதனுக்கு எந்த அடையாளமும் இல்லை. காமம் அத்தகைய முக்கியமில்லை என்று சொல்லவே பெரியவர்கள் தெய்விகக்காதல் என்றெல்லாம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

காமத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான் காதல் பற்றிய சிந்தனை வரும். காமத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் காதல் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். தன்னுடைய வேலை பற்றி அதிக கவனமுள்ளவர்களுக்கு காமம் பற்றிய சிந்தனை எழாது. அப்படி காமம் பற்றிய சிந்தனை எழாது போனால் காதல் பற்றிய தாபங்கள் இல்லாது போகும்.


இந்த உடம்பு எத்தனை அழகு. அந்த உடம்பு எத்தனை வெறியை உள்ளே தூண்டிவிடுகிறது. உடம்பையும், மனசையும் அவ்வப்போது படிக்கிற ஆபாசக்கதைகள் முறுக்கேற வைத்து குதியாட்டம் போட பெண்ணைப் பார்க்கும் வரை காதல், காமம் பற்றிய பிரக்ஞையே இல்லாத மனம் நாலா திசைகளிலிருந்தும் நாய்களால் விரட்டப்படும் ஆடுகள்போல் அவஸ்தைப்படுகறது.

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவள் கலைந்த உடையோடு என்ற நினைப்பு ஏற்படுகிறது. தனம் அமைதி இழந்து, சருமத்தில் வறட்சி தோன்றி, முகம் களையிழந்து போய்விடுகிறது.

பெண் கொடுக்கிற உரிமையும், அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், மனசுக்குள் பொங்குகிற காமமும், அதை காதலாக்குகிற புத்திசாலித்தனமும் அதிகமாக மேலெழும்பி பெண்ணை தன்வயப்படுத்த தந்திரம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.

வாழ்க்கையில் எல்லா நட்புகளும், எல்லா உறவுகளும் ஒன்றை ஒன்று எப்படி திண்பது என்பதில்தான் ஆரம்பிக்கின்றன.
- பாலகுமாரன்.


ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

காசேதான் காதலிடா!?.



‘இன்று ரொக்கம், நாளை கடன்’. ‘கடன் உடன் பகை’ என்று நம்மூரில் கடைக்குக் கடை அறிவிப்புப் பலகைகள் இருந்தாலும் கடன் கொடுக்கும் சமாசாரத்தில் நாம் அவ்வளவு உஷாரில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று பாடல் இருந்தாலும் நம்மூரைப் பொறுத்தவரை கடன் வாங்கியவர்கள் யாரும் கலங்குவது இல்லை. கட்ன் கொடுத்தவர்கள்தான் சமயத்தில் கதிகலங்கிக் கலகலத்துப் போக நேரிடுகிறது.

கடன் கொடுக்கலாமா…? கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட யூதர்களிடமும், குஜராத்திகளிடமும்தான் நாம் பாடம் படிக்க வேண்டும்.

தங்களுக்கென்று தனியாக ஒரு நாடுகூட இல்லாத யூதர்கள், பன்னாட்டு நிறுவனங்களை மாத்திரமல்ல… அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள். உலகம் இவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம், இவர்களின் நிதி நிர்வாகத் திறமை. பணத்தைக் கையாள்வது பற்றி இவர்கள் பல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள். பணம் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும்போது அதில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். குஜராத்திகளும் இந்த வகைதான்.
ஒருவருக்கு நாம் கடன் கொடுக்க விரும்பவில்லை என்றாலும்கூட, கடன் கேட்டு வருகிற நபர் கண்ணீர் வடித்தாலோ அல்லது ‘குழந்தைக்கு மருந்து வாங்க வேண்டும்’ என்பது மாதிரி நாடகம் போட்டாலோ உணர்ச்சி வசப்பட்டு சட்டென்று கையில் இருக்கும் காசை எடுத்து நீட்டிவிடுவோம்.
‘இந்தப் பணத்தை நீ எப்போது திருப்பிக்கொடுப்பாய்?’ என்றுகூட பல சமயங்களில் நாம் கேட்காமல் சென்டிமென்டில் விழுந்துவிடுவோம். 

ஆனால் குஜராத்திகள் அப்படியல்ல! ஒருவர் தன்னை நோக்கி நடந்து வரும் தோரணையில் இருந்தே அவர் தன்னிடம் கடன் கேட்கத்தான் வருகிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். இவரிடம் பணம் கொடுத்தால் திரும்பி வராது என்று அவர்கள் முடிவெடுத்து விட்டால், அந்தர் பல்டி அடித்தால் கூட பணம் பெயராது.

‘கடன் கொடுக்க முடியாது!’ என்பதை எதிரில் இருப்பவர்களின் மனம் கோணாமல் சொல்வதில் மாக ஜித்தர்கள் அவர்கள். கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக்கூடாதா? ‘பொண்ணு கல்யாணச் செலவுக்கு வேணும்னு இப்பதான் நம்ம ராமசாமி ஐம்பதாயிரம் கேட்டு வாங்கிட்டுப்போறார்’ என்பார்கள். இல்லையென்றால் கடன் கேட்க வருகிறவர் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே, ‘நீங்க யாருக்கும் கடன் கொடுத்துடாதீங்க சார். காலம் கெட்டுக் கிடக்குது! என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
‘இவருக்கு கடன் கொடுக்காவிட்டால் இவர் நம்மை தப்பாக எடுத்துக்கொள்வாரோ?’ ‘உறவு முறிந்துவிடுமோ?’ என்றெல்லாம் அவர்கள் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ‘பணத்தைக் கடனாகக் கொடுத்தால்தான் இவரின் உறவு நிலைக்கும் என்றால், அத்தகைய உறவு எனக்குத் தேவையில்லை!’ என்று முடிவெடுத்துவிடுவார்கள்.

அதுபோலவே, ‘இந்த ஆளை நம்பிக் கடன் கொடுக்கலாம்!’ என்று ஒரு குஜராத்தி முடிவெடுத்துவிட்டால், ‘இந்தா பணம்’ என்று உடனே எடுத்து நீட்டிவிடமாட்டார். ‘கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணம் தேவையா?’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, ஒரு இடத்திலிருந்து நாளை பணம் வரவேண்டியிருக்கிறது. நீங்கள் நாளைக்கு வந்து பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பிவைப்பார்கள். கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணத்தேவை இருந்தால் அடுத்தநாள் வருவார். 

ஆனால், அப்போதும் அந்த குஜராத்தி அவர் கேட்ட முழு பணத்தையும் எடுத்துக் கொடுத்து விடமாட்டார். பணத்தின் அருமை புரியவேண்டும் என்பதற்காக, அவர் நூறு ரூபாய் கேட்டிருந்தால் என்பது ரூபாய்தான் கடன் கொடுப்பார்!
ஆனால் நம்மூரில் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். யாராவது ஒருவர் நம்மிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் பணம் ‘இல்லை’ என்று எப்படிச் சொல்வது?... அப்படிச்சொன்னால் அது நமக்கு கௌரவக் குறைச்சல் ஆகிவிடுமோ…? என்று ஏதேதோ வேண்டாத கற்பனைகள் எல்லாம் வரும். எனவே பணம் விஷயத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக்கூடாது.

'சுரேஷ் பத்மநாபன்' ஆ.வி.யில்