சனி, 22 டிசம்பர், 2012

பாலகுமாரன் - பதில்கள்



இந்தியாவில் எது செய்வது மிகவும் தவறானது?

அதிகப் பணம் சம்பாரிப்பது இந்தியாவில் தவறானது! பணம்தான் சந்தோஷம் என்று அதிகப் பணம் சம்பாதித்து பலபேர் சந்தோஷத்தை முற்றிலுமாய் இழக்கிறார்கள். ரௌடிகளாலும், ஆரசியல்வாதிகளாலும் எந்தக்காரணமுமின்றி மிரட்டப்படுகிறார்கள். பிச்சை எடுப்பவர்களும், தானம் கேட்பவர்களும் பணக்காரர்கள் காசு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தராது போனால் இழிவாகப் பேசுகிறார்கள். எல்லோராலும் எளிதாக பணம் சம்பாதித்துவிட முடியவில்லை. கடும் உழைப்பு பணம் சம்பாதிக்கத் தேவையாக இருக்கிறது. பல்வேறு தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய தர, மேல் மத்திய தர வாழ்க்கையே இந்தியாவில் இப்போதைக்குச் சிறந்தது. அமேரிக்கா போன்ற நாடுகளில் பணக்காரர்களை மனிதர்களாக மதிக்கின்ற தன்மை உண்டு. பணக்காரர்களுக்கும் மற்றவர்களை மனிதர்களாக பார்க்கும் எண்ணம் உண்டு. இங்கு அது இல்லாமல் போகிறது.

இப்போழுது தமிழ் இலக்கியத்தின் தேவைகள் என்ன?

நல்ல கட்டுரைகள். உலகளாவிய சிந்தனைகள் பற்றிய விளக்கங்கள். அடுத்தடுத்த தேசங்கள் பற்றிய அரசியல் சரித்திர வரலாறுகள். நண்பர் பா.ராகவன் இம்மாதிரி விஷயங்களை அற்புதமாகச் செய்து வருகிறார். வாரப்பத்திரிகையில் அவர் எழுதுகின்ற 'நிலமெல்லாம் ரத்தம்' என்கிற இஸ்ரேல் நடத்திய சண்டையும், அராபியர்கள் குணங்களும், ஒரு புது ஜன்னலை நமக்குத் திறந்து விட்டிருக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைத்தொடர். எந்தவித ஆரவாரமுமில்லாமல், எந்தவிதமான கட்சியையும் சாராமல், எந்தவிதமான இயக்கத்தையும், மதத்தையும் நம்பியிராமல், ஒரு இந்து என்கிற காழ்ப்புணர்ச்சியில்லாமல் பல விஷயங்களை மிகத்தெளிவாகப் பேசுகிறார்.

ஆனால் இங்குள்ள பண்டிதர்கள் தேவையற்ற விவாதங்களில், தேவையற்ற காழ்ப்புக் கட்டுரைகளில் மனம் செலுத்தி பத்திரிகையின் பக்கங்களை வீண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்டை நாட்டு இலக்கியமும், தேசம் பற்றிய அரசியல் சமூக வராலாறு கட்டுரைகளும் அதிகம் தேவைப்படுகிற நேரம் இது. மக்கள் படிக்கத்தயாராய் இருக்கிறார்கள். இதற்கு பா. ராகவனின் கட்டுரையே சாட்சி. அது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து பலரும் முயற்சி செய்ய வேண்டிய இந்த விஷயத்தில் இவர் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!