திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அன்புள்ள மன்னவனே.. ஆசையில் ஓர் கடிதம்...

கடிதம் எழுதுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் கை வந்துவிடுவதில்லை. வார்த்தை ஜாலங்கள் விளையாட எழுதுவோரும் உண்டு. நீ சௌக்கியமா, நான் சௌக்கியமே போன்ற நலம் விசாரித்தலோடு நின்று விடுவோரும் உண்டு.

தூரத்தைக் கணக்கில் கொண்டுதான் கடிதங்கள் எழுதப்பட்டன. இதில் பிரிவுத்துயர் முக்கியமான இடத்தைப் பிடித்து விடுகிறது. காதலன் காதலிக்கு மட்டுமல்ல, கணவன்-மனைவி, தாய்-பிள்ளை, சகோதரர்களுக்குள், நண்பர்களுக்குள் என்று மிகப்பரந்த எல்லை கொண்டது இந்த கடிதப் பறிமாறல்கள்.


பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை STD CALL போட்டுப்பேசுவதே அரிது. அதிலும் ISD CALL -லோ கேட்கவே வேண்டாம். எனவே அப்போதைக்கு விரிவாய் எல்லா விஷயங்களையும் பறிமாறிக்கொள்ள ஒரே வழி கடிதம் மட்டுமே!

நமக்கு நெருக்கமானவர்கள் மீதுதான் அன்பு, வெறுப்பு, கோபம் என எல்லாவற்றையும் ஒருசேரக் காண்பிக்கிறோம். இதிலேயே கூட முகத்துக்கு நேரே காண்பிக்க விருப்பமில்லாமல் கடிதம் மூலம் தெரிவிப்பதும் ஒரு வகை. நேரிலே பேசத்தயங்கும் எல்லா விஷயங்களையும், பகிர்ந்து கொள்ள கடிதம் ஓர் உற்ற துணைவன் போல செயல்பட்டிருக்கிறது. வார்த்தை வீச்சுகளின் உக்கிரத்தால் அதே கடிதங்களினாலே பிரிந்து போனவர்களும் இருக்கக்கூடும்.

கடிதம் எழுதும்போது இருக்கும் அந்த மனோநிலை கிட்டத்தட்ட தியானம் போல. எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடவேண்டும் என்கிற மனோநிலை அது. அனுபவப்பட்டவர்களுக்கு இது தெரியும். எழுத்தாளர்களுக்கும், இப்படி கடிதம் எழுதுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. எழுத்தாளர்கள் அடுத்தவர்களைப் பற்றி எழுதுகிறார்கள். கடிதம் எழுதுபவர்கள் தங்களைப்பற்றி எழுதிக்கொள்கிறார்கள் அவ்வளவே!

எழுதிமுடித்து அதை படித்துப் பார்க்கிறபோதுதான் நம் மனசிலிருந்து எத்தனை விஷயங்கள் வெளிவந்திருக்கிறது என்பது புரியும். இதற்கப்புறமும் குழப்ப நிலையே! இதை அனுப்புவதா வேண்டாமா? சிந்தனையே செய்யாமல் மடித்து ஒட்டி அனுப்புவோரும் உண்டு.மனநிலை மாறி கடிதத்தைக் கிழித்துப்போடுவோரும் உண்டு. இது எல்லாருக்கும் நேர்ந்த அனுபவமே!


இதில் காதல் கடிதங்கள் அலாதியானது. பண்டைய காலங்களில் ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்த மாதிரி இந்தக் காதல் கடிதங்களைச் சேகரித்திருந்தால் அவையும் பிற்காலத்தில் இலக்கியமாகலாம் யார் கண்டது?! அந்தரங்கம் என்கிற போர்வையில் எல்லா கடிதங்களும் கிழித்தோ, எரித்தோ போடப்பட்டு வருகின்றன. மனித மனம் எப்போது வக்கிரமாக மாறும் என்பது யாரும் அறியாத ஒன்று. உருகி உருகிக் காதலித்தவர்களும் சரி, நட்பாய் பழகியவர்களும் சரி, தங்களுக்குள்ளே பிரச்சனை என்று வந்துவிட்டால் பரம எதிரியாய் மாறி விடுவதுண்டு. அந்த நேரத்தில் அவர்களின் முதல் இலக்கு கடிதங்கள்தான். இதனாலேயே பல கடிதங்கள் அழிக்கட்டுவிடுகின்றன.

அடுத்தவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் ஆர்வம் காட்டுவது அநாகரிகம் என்றாலும் இப்படிப்பட்ட கடிதங்களில்தான் அவர்களின் சுயரூபங்களும், குணாதிசியங்களும், ஆசாபாசங்களும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 'வளைத்தலும் வளைதலுமே காதல்' என்பார் எழுத்தாளர் பாலகுமாரன். ஒன்று சரணாகதி, இன்னொன்று சரண்டைய வைப்பது. இந்த்தப் போட்டா போட்டியை கடிதங்களின் வாயிலாக அறியும்போதுதான் எத்தனை சுவாரஸ்யம். மனிதகுலமே சுயநலங்களால் நிரம்பியதுதானோ என்கிற சந்தேகம் கூட வந்துவிடும்.

காரணமே இல்லாமல் பிரிந்து போன நட்புகளும் உண்டு. தொடர்பே இல்லாமல் வேறு இடங்களில் குடி பெயர்ந்து போய்விடும்போது அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்பு தானாகவே அறுந்து போய்விடுவதுண்டு. ஒத்துவரவில்லையென்றால் விலகிவிடுவதும், ஏதும் காரியம் ஆகவில்லை என்றாலும் விட்டுப்போன நட்புகளும் உண்டு.


புதிய இடம், புதிய பணிச்சூழல், புதிய நட்புகள் என்ற பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் கடித்தொடர்பு என்பது அறவே இல்லாமற் போய்விட்டது. எல்லாமே கைத்தொலைபேசியில் நிமிடத்தில் முடிந்து விடுகிறபோது கடிதம் என்பது இன்று அநாவசியமாகிப் போய்விட்டது. இணையமும் இப்படிப்பட்ட நட்புப் பறிமாறல்களில் முக்கிய அங்கமாய்ப் போய்விட்டது அல்லது வேறு ரூபம் எடுத்துவிட்டது என்றும் சொல்லலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது வீட்டின் ஒரு மூலையில் கம்பியைக் கட்டிவைத்து படித்து முடித்த கடிதங்களை அதில் குத்தி கோர்த்து வைப்பது வழக்கம். என் சித்தப்பா, பெரியப்பா வீடுகளிலும் இந்த வழக்கம் இருயந்தது. நானும் பின்பு இதே முறையில் கடிதங்களைக் கோர்த்து வந்தேன். ஆனால் இதில் ஒரு சங்கடம் இருந்தது. ஏதாவது பழைய கடிதங்களை மீண்டும் படிக்கவோ இல்லை அதில் உள்ள முகவரியைத் தேடவோ வேண்டுமென்றால், கடிதத்தின் நடுவில் குத்தி வைத்திருப்பதால் அதை எடுக்கும் போது கிழிந்து போக வாய்ப்புண்டு. எனவே ஒரு அட்டைப் பெட்டியில் சேகரிக்கத் தொடங்கினேன்.

நாளாக நாளாக அதிகம் சேர்ந்துவிட்ட காரணத்தால் முக்கியத்துவமில்லா கடிதங்கள், வாழ்த்து அட்டைகளைக் களைவதும் வாடிக்கையாய் இருந்தது. சரி இப்படி எத்தனை நாளைக்குத்தான் பாதுகாப்பது? அதன் முக்கியத்துவம்தான் என்ன? என் மனத்திருப்திக்காகவும், மறக்கமுடியாத அந்த பழைய நினைவுகளுக்காகவும் சில கடிதங்களை பாதுகாக்க நினைத்தாலும் என் மரணத்திற்குப் பிறகு அவை என்னவாகும்?! நிச்சயம் சபித்தலோடு அத்தனை கடிதங்களும் குப்பைக்கூடைக்குத்தான் போகும். அதைப் பிரித்துப் படிக்கக்கூட எதிர்காலத் தலைமுறையினருக்கு பொறுமை இருக்காது என்றே நினைக்கிறேன்.

எனவேதான் இந்த வலைப்பதிவு. இந்தக் கடிதங்கள் என் வாழ்வோடு பிணைந்த அந்தக் காலக்கட்டத்தின் வரலாறு. பெரிய மனிதர்களுக்கு மட்டுமே வரலாறு இருக்க வேண்டுமா என்ன? நான் சாமான்யன். ஆனாலும் என் இருப்பும் வாழ்வும் வரலாறாக்கப்படவேண்டும் என்று விரும்புபவன். அதன் சிறு முயற்சியே இது. இதற்கு ஊக்கமும் உற்சாகத்தையும் கொடுக்க எல்லா வலைப்பதிவர்களிடமும் வேண்டுகோள் வைக்கிறேன்.

கடிதம் குறித்த இன்னொரு இடுகை 'சார் போஸ்ட்'. கோவை அ.ராமநாதன் அவர்களின் 'இது ஒரு தமிழ் உலகம்' என்கிற வலைப்பதிவில் பார்க்க நேர்ந்தது. அதையும் படித்துப் பாருங்களேன்.

6 கருத்துகள்:

ஆறு சொன்னது… [Reply]

பார்ட்டி இன்னும் எத்தனை புனை பெயரில் கடிதங்கள் எழுதுவாயோ .கடிதம் மிக அருமை . வாழ்த்துக்களுடன் ஆறு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஆறுமுகம். நீங்கள் மட்டும் 'ஆறு' முகத்தோடு இருக்கலாம். நான் கூடாதா?

பெயரில்லா சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள்! உங்கள் கடிதங்களைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்து கூறியமைக்கும் நன்றி உயிர்த்தோழி அவர்களே! தொடர்ந்து வாருங்கள்!

RAJESH9019 சொன்னது… [Reply]

this letter is very nice... i like this...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜேஷ்! தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!