வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மறக்க முடியாத நண்பர்கள்


 மறக்க முடியாத நண்பர்கள் பட்டியல்ல என் நண்பன் சுப்பிரமணிக்கு முக்கிய இடம் உண்டு. ஏழ்மையிலிருந்து வந்ததால் மிகவும் எளிமையாக இருப்பான். நல்லா விவாதம் பண்ணுவான். எல்லார்கிட்டயும் பழகினாலும் என்கிட்ட பாசமா இருப்பான். விடுதியிலே தங்கி படிக்காம தனியா அறை எடுத்து தங்கி படிச்சதுனால, சாப்பாட்டு ருசிக்காக நான் வீட்டிலிருந்து கொண்டுவரும் டிபன் பாக்ஸை காலிபண்ணிடுவான். அப்பறம் நாங்க அவன் அறைக்கு போய் அவன் செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டை காலிபண்ணுவோம்.


ம்... அதெல்லாம் ஒரு காலம். இதுல ஒரு விஷயம் அவங்க ஊர்ல இருக்கிற நண்பரைப் பற்றி சதா சொல்லிக்கிட்டே இருப்பான். அவர் பேரு பாலசண்முகம். அவருதான் எனக்கு குரு. அவருதான் எனக்கு எல்லாமே அப்படின்னு செல்ல்லுவான். ஊர்ல எந்த பிரச்சனையானாலும் இவர் பெயர் அடிபடுமாம். எனக்குள்ளவும் அதே மாதிரி ஓரு துடிப்பு எப்பவும் இருந்துகிட்டே இருக்கும். நாமும் நம்ம ஊருக்கு ஏதாவது செய்யனும்னு நினைப்பேன்.ஆனாலும் படிக்கிற வயசில்லையா அடக்கி வாசிச்சேன்.

இந்த பாலசண்மும் என்பவரை பார்க்கனும்கிற ஆவல் நிறைய இருந்தாலும் படிப்பு முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கலை. என் நண்பன் சுப்பிரமணியோட கல்யாணத்துக்கு அவன் ஊருக்கு போன பிறகுதான் பார்க்க முடிஞ்சுது. அதோட சரி. நானும் மறந்தாச்சு. அவரும் மறந்தாச்சு. படிப்பு முடிஞ்சி, ட்ரெயினிங் முடிஞ்சு எங்க ஊர் நண்பர் கண்ணன் என்பவர் மூலமா முதன்முறையா பெங்களூருக்கு வேலைக்குப் போனேன்.


இந்தப் பத்திரிகைகளில் வாசகர் கடிதம்னு ஒண்ணு வருமே, அதுமேல எனக்கு ஒரு அலாதி ஈர்ப்பு அப்போ. ரொம்ப பெரிய மேதாவிங்களாட்டம் நாட்டு அரசியல் பத்தி, அரசியல் தலைவர்களைப் பத்தி, நாட்டு நடப்புகள் பத்தியெல்லாம் பலபேரு கருத்து சொல்வாங்க. ஏன் பத்திரிகை தலையங்கமே சரியில்லைன்னு கூட அதே பத்திரிகைக்கு எழுதுவாங்க. வேலூர் மாவட்டத்துல ஒரு சின்ன குக்கிராமத்துல பொறந்த எனக்கு, இதெல்லாம் அப்போ ஆச்சர்யமான விஷயம். எனக்கும் ஆசை துளிர்த்துச்சு. நாமளும் எழுதுனா என்ன?

இதுக்கு முன்னோடி நிச்சயமா திரு. சண்முகம்தான். பெங்களூருல வேலை பார்த்துக்கிட்டு ஊருக்கும் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து போய்க்கிட்டிருந்தேன். அப்பதான் கல்கில எங்க வடார்க்காடு மாவட்டத்து பிரச்சனைகள் பற்றி நாம தெரிவிச்சா, அவங்க அதை பத்திரிகைல வெளியிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்டயும் அதுபற்றி கேட்டு வெளியிடப்போறதா அறிவிப்பு வந்துச்சு. இதுதான் நமக்கு கிடைச்ச சான்ஸ். இதை விடக்கூடாதுன்னு தோணுச்சு. எங்க ஊர்ல இருக்கிற நாலு பிரச்சனையை கல்கிக்கு எழுதிப்போட்டுட்டு என் வேலைய பார்க்க பெங்களூருக்குப் போயிட்டேன்.


அந்த பெங்களூர் கம்பெனில நூலகம் மாதிரி ஒரு அமைப்பு உண்டு. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் வரும். நாம ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டு புக்கை வீட்டுக்கு எதுத்துகிட்டு போகலாம். புதுசா வர்ற வாரப்பத்திரிகைகளை எதுத்துட்டுப் போக போட்டி கூட இருக்கும். அதுல கல்கியும் உண்டு. 

நான் கல்கிக்கு எழுதிப்போட்ட மேட்டர மறந்து போனதால கல்கி புக்குக்கு ஆர்வம் காட்டல. ஆனா யாரும் சீண்டாம கிடந்த புக்கை நாம எடுத்துக்கிட்டு போகலாம்னு கைல எடுத்தா ஆச்சர்யம் தாங்க முடியல. எங்க ஊர் பேரும், போட்டோவும் அட்டையிலே!!!

மறக்க முடியாத நண்பர்கள்னு ஆரம்பிச்சிட்டு எங்க ஊரப்பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டேன் இல்ல. கரணம் இருக்கு, இந்த கல்கி விஷயத்துல இருந்துதான் திரு. பாலசண்முகம் அவர்களும், நானும் ரொம்ப நெருக்கமா ஆனோம். என் நண்பன் லைன்லேயே இல்ல.

இப்படியான சம்பவம் பல நட்பு வட்டங்கள்ல நடந்திருக்கு. நம்மள அறிமுகப் படுத்தினவங்கள ஓரங்கட்டிவிட்டு மத்த ரெண்டுபேரும் க்ளோஸாயிடறது. ஆண்-பெண் நட்பு வட்டத்துல இதனாலேயே பெண்கள் தன் ஸ்நேகிதனை யாருக்கும் அறிமுகப்படுத்தறதே இல்லை.

தொடர்ந்து வாங்க, நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு.

2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள் நண்பரே! எடுத்தவுடனே நல்ல பதிவுகளை போட ஆரம்பித்திருக்கிறீர்கள். மறக்க முடியாத நினைவுகள் எல்லோருக்கும் உண்டு. அவை சுகமானதாகவும் இருக்ககூடும். வேதனையானதாகவும் இருக்கக்கூடும். உங்கள் பதிவுகளைப் பார்ப்போம் எப்படி எழுதுகிறீர்கள் என்று.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வந்து வாழ்த்தியமைக்கும் கருத்து சொன்னதற்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள். ஆலோசனை கூறுங்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!