அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 செப்டம்பர், 2015

விதியை மீறினாலும் விதி மீதுதான் பழியா?

விதி மீறலில் நம் நாட்டை வெல்ல எந்த நாடும் கிடையாது. எல்லாவற்றிலும் அலட்சியம். மாமூல் லஞ்சம், செல்வாக்கு, அதிகாரம் இவை எல்லாவற்றையும் பிரயோகித்து எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற சாமர்த்தியம் நம்மவர்களுக்கு அதிகம். மரபு, வழிமுறை, சட்டம் இதையெல்லாம்விட தன்னுடைய சுயநலம் ஒன்றே முக்கியம் என்ற நிலைதான் இன்று எங்கும்.

இந்த விதி மீறல் தலைப்புக்குக் காரணம் இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட இன்னலும்தான். சாலைப் போக்குவரத்து விதிகளை நாம் எல்லோரும் முறையாக கடைபிடிக்கிறோமா என்ன? இரு சக்கர வாகனத்தில் போகும்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் அணியாமல், அளவுக்கு மீறி ஆட்களை, சுமைகளை ஏற்றிச்செல்வது, ஒரு வழிப்பாதையில் குறுக்கே செல்வது, அதிவேகமாக செல்வது என்று ஏகத்துக்கும் அடுக்கலாம்.

 அடைபட்ட இரயில்வே கேட்டுக்குள் வாகனம்
 அடுத்தது இரயில் பாதைகளைக் கடக்கும் பகுதிகள். எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்ற போதும் இரயில் பாதைகளை பாதுகாப்பாக கடந்து செல்லப் பயன்படும் யலெவல் கிராசிங்'குகளை நம்மவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.  பொதுவாக ஆளில்லாத லெவல் கிராசிங்கில்தான் விபத்துக்கள் அதிகம் நடப்பது வழக்கம். தொலைவில் இரயில் வண்டி வரும்போது அதற்குள்ளாக கடந்து விடலாம் என்றெண்ணியே பலரும் தவறு செய்கின்றனர்.

தண்டவாளத்தை மனிதர்கள் கடக்க 5 வினாடிக்கு மேல் ஆகும். 110 கி.மீ. வேகத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்து பலி வாங்கிவிடும். ஆளில்லா லெவல் கிராசிங்கில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ரயில் வந்தால், பொறுமையாக இருந்து, ரயில் போன பிறகு கடந்து செல்வதே சரியான செயலாகும். பேருந்து, மகிழுந்து போல ரயிலை நினைத்த மாத்திரத்தில் திடீரென்று நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் தடம் புரளும் அபாயம் உண்டு. அப்படியே பிரேக் பிடித்தாலும் 300 அல்லது 400 மீட்டர் தொலைவு போய்த்தான் நிற்கும். பலர் இப்படிப்பட்ட அலட்சிய மனப்பான்மையுடன் விபத்தைச் சந்திக்கின்றனர். 

ஆனால் லெவல் கிராசிங் உள்ள இடங்களில் கேட் மூடப்படுகின்ற நேரத்திலும், மூடப்பட்டபின்பும் சிலர் காட்டும் அவசரம், அவசர அவசரமாய் எமலோகத்துக்குப் போகக் கூடியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாய் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்போர் காத்திருக்கப் பொறுமையில்லாமல் அந்தச் சிறிய இடைவெளியில் வாகனத்தை சாய்த்து நுழைத்து சர்க்கஸ் வேலைகளையெல்லாம் காண்பித்து கடந்து செல்வர்.

இப்படி கேட் மூடப்படுகின்ற நேரத்தில் அவசரமாக நுழைந்த ஒரு வாகனத்தின் மேல் 'கேட்' விழுந்து மொத்தமாக வளைந்து போனது. அடுத்த பக்கத்தை வாகனம் கடந்து போவதற்குள் அந்தப் பக்கமும் அடைப்பட்டு விட்டது. இரயில் கடந்து போனபின்பும் வாகனம் நுழைந்த பகுதியில் 'கேட்' சேதமானதால் அதை விலக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் உள்ளிருந்த வாகனமும் வெளியே வரமுடியவில்லை. இரண்டு பக்கமும் காத்திருந்த வாகனங்களும் இரயில் பாதையைக் கடக்க முடியவில்லை.

சரி செய்ய எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரம் வரை வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடந்தன. ஓரிருவர் செய்கின்ற தவறினால் எத்தனை பேருக்கு இதனால் இன்னல்கள். ஒருவேளை இந்த விபத்தினால் உயிர்ப்பலி ஏற்பட்டிருந்தால் விதியின் பேரைச்சொல்லி சமாதானம் செய்துகொள்வார்களோ? விதி மீறலுக்கும் விதியின் மீதுதான் பழியா?

புதன், 23 செப்டம்பர், 2015

கோவிலுள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்!

"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" - இந்தப் பொன் மொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதென்னடா 'கோவில் உள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்கிறேனே என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம் அனுபவம்தான். என்னைப்போல பிரச்னையை எதிர்கொண்டவர்களுக்குத்தான் தெரியும் இதன் உண்மை நிலவரம்! கடவுள் பக்தி மிகுந்தவர்கள் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்.

ஒடிஸாவை விட்டு சென்ற மாதம்தான் மத்தியப்பிரதேசம் வர நேர்ந்தது. இப்போதைய நிலவரப்படி ஆறு மாதங்கள் இங்கிருக்க வேண்டும். அப்புறம் எந்த ஊரோ தெரியாது. வந்த புதிதில் நிறுவனம் அளித்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். மாதக்கணக்கில் தங்கியிருக்க அங்கே அனுமதி இல்லை என்பதால், நிறுவனமே எங்களுக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, அங்கே தங்கிக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். பக்கத்திலேயே ஒரு கோவில்!

கோவில் என்றாலே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும்தானே. வருகிறவர் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவது கூட தெரியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கோ 'இவனுங்களுக்கு வேற இடத்துல வீடே கிடைக்கலையான்னு' என்று கோபம். 

 எங்கள் கிராமத்து பிள்ளையார் கோவில்

சுமார் 30 வருஷத்துக்கு முன்னால எங்க கிராமத்துல கோவில் திருவிழான்னா ஊரே கோலாகலமா இருக்கும். ஊர்ல திருவிழாங்கறதுக்கு அறிகுறி ஒண்ணு எல்லோர் வீட்டு முன்னாடியும் சாணத்தால் மெழுகி கோலம் போட்டு, வாசற்படிகளில் மாவிலைத்தோரணம் கட்டி ஊரே மங்கலகரமாக இருக்கும். இரண்டாவது, விடியற்காலை 4 மணியிலிருந்து ஒலி பெருக்கியில் சினிமாப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என்று கலந்து கட்டி இரவு 10 மணி வரைக்கும் இடைவிடாது அலறிக்கொண்டே இருக்கும். இதில் எனது பங்களிப்பும் கனிசமாக இருக்கும். காரணம், அப்போதைய இளவட்டங்களில் நான் இளைஞர் நற்பணி மன்ற தலைவர், செயலாளர் போன்ற பொறுப்புக்களில் இருந்ததே.

அப்படி ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தாலும் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். அதாவது அது ஒரு தொல்லையாகத் தெரியாது. காரணம் எப்போதோ ஒரு முறை கொண்டாடப்படும் ஊர்த்திருவிழா என்பதால் அதை மகிழ்ச்சியுடனே அனுபவித்தார்கள்.

 பினா - கட்ரா மந்திர்
இப்போது அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. அதைப் பயன்படுத்தவும் தடை வந்து பல வருடங்களாகிறது என நினைக்கிறேன். நகரமல்லாத குக்கிராமங்களில் இருக்கலாமோ என்னவோ?  நாகரிகம் கருதி, அரசியல் மேடை, திருமண மண்டபங்கள், கோவில் திருவிழாக்கள் என எல்லா இடங்களிலும் பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டிகளை (SOUND BOX) வைப்பதுதான் இப்போது வழக்கம்.

 

ஆனால் இப்போது நாங்கள் குடிவந்திருக்கிற வீட்டுக்கு அருகே உள்ள கோவிலில் அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை திசைக்கு ஒன்றாக வைத்து அலற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவில் என்றால் அமைதி, பக்தி என்றால் இறைவனை நினைத்து மனமுருக பிரார்த்திப்பது என்பதுதான் இத்தனை வயதில் எனக்கேற்ப்பட்ட புரிதல். இத்தனைக்கும் எனக்கும் கடவுளுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் பெரியார் புத்தகங்களின் சகவாசம்.

கோவிலுக்கு வந்து அமைதியாய் பிரார்தனை செய்பவர்களே இங்கு (BINA - MADHYA PRADESH) இல்லை போலிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வந்து சற்று ஓய்வெடுக்க வாய்யபே இல்லை. ஒலிபெருக்கியின் துணையோடு பூஜை, பஜனை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே பேசிக்கொள்ளவே முடியாது. உடல் நிலை சரியில்லாதவர்கள், படிக்கின்ற மாணவர்கள் என எல்லோருக்கும் சிரமம்தான். ஆனால் இவர்களோ சகஜமாக சகித்துக்கொள்கிறார்கள்.


விஷேஷ நாட்களில் ஒரு குறிப்பிட்ட நேரம் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு பனிரெண்டு மணி வரை இந்த பஜனை சத்தமும், அலறல் சத்தமும் ஓயவே ஓயாது. என்னதான் செய்வது என்று புரியவில்லை. காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டாலும் சத்தம் மண்டைக்குள் இறங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இரவு நிம்மதியாய் தூங்கினால்தானே மறுநாள் வேலைக்குப் போக முடியும்! சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? இப்படிப்பட்ட காட்டுக்கத்தலில்தான் கடவுள் மனமிறங்குவாரா என்ன? இதைப்பற்றி எல்லாம் இங்கு வாய் திறக்கவே முடியாது. எல்லாரும் பக்தியில் ஊறிய பழங்கள்.


இப்படி பக்தி முத்திப் போவதால்தான் பிரேமானந்தாக்களும் நித்தியானந்தாக்களும் உருவாகி, சுகபோக கார்ப்பரேட் கோவில் முதலாளிகளாக வலம் வருகிறார்கள். சமீபத்தில் மகாராட்டிராவில் 'ராதேமா' என்ற போலி பெண் சாமியாரின் லீலைகளும் இப்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருக்கின்றன. (பொது நிகழ்ச்சிகளில் 'ரெக்கார்டு டேன்ஸ்' ஆடிக்கொண்டிருந்தவரை முன்னேற்பாட்டுடன் ஒரு கும்பல் மைடையிலேயே சாமியாடவைத்து, பாதபூஜை செய்யத்தொடங்கி, மக்களும் மதி மயங்கி ஒவ்வொருத்தராக காலில் விழ, பத்தே ஆண்டுகளில் 'ஸ்டைலிஷ் ராதேமா'வாக மாறிவிட்டார்).  


ஒடிஸாவில் கூட ஒரு பாபாவும் இப்படி மாட்டியிருக்கிறார். (பெயர் சாரதி பாபா). இந்த ஒடிஸா பாபா கிருஷ்ண ஜெயந்தியன்று பால கிருஷ்ணனாக மாறி குழந்தை போல தரையில் தவழ்ந்து சென்று கோவிலுக்கு வந்திருக்கிற ஒவ்வொரு தாய்மார்களின் (தாய்ப்)பாலை குடிக்கும் நிகழ்ச்சி பற்றிக்கூட இப்போது செய்தி கசியத் தொடங்கியிருக்கிறது. நமது தாய்மார்களோ கிருஷ்ண பகவானே குழந்தையாய் பாபா வடிவில் வந்து பால் குடிப்பதாய் நினைக்கும் மடத்தனத்தை என்னவென்று சொல்வது?!

செவ்வாய், 30 டிசம்பர், 2014

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

சென்ற மாதம் கடவுச்சீட்டு பெறுவது சம்பந்தமாக சொந்த ஊர் செல்ல நேரிட்டது. எப்போதுமே இரயிலில் முன்பதிவு செய்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். வாராந்திர இரயிலான சந்திராகாச்சி-திருவணந்தபுரம் இரயிலில்தான் எனக்கு இடம் கிடைத்தது. பொதுவாக இரயில் பயணங்களில் யாருடனும் பேசுவதும் பழகுவதும் கிடையாது. பக்கவாட்டு மேல் படுக்கையத்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஏனென்றால் சாப்பட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டோ/தூங்கிக்கொண்டோ  செல்லலாம்.

தமிழர்கள் என்றாலும் கூட நான் பேசுவதில்லை. வெட்டி அரட்டையோ பயனில்லாத பேச்சுக்களையோ நான் விரும்பாததும் ஒரு காரணம். அரிதாக சிலரிடம் பேசுவதுண்டு. அப்படித்தான் அன்று ஒரு தமிழரைப் பார்க்க நேர்ந்தது. சுமார் 55 வயதிருக்கும். சரளமாக ஹிந்தி பேசினார். எங்கே போகிறீர்கள் என்று பேச்சு கொடுத்து தன்னைப் பற்றி விவரிக்கலானார். அருகிலுள்ள பாலாசூர் என்ற இடத்தில் துணி வியாபாரம் செய்கிறாராம். ஒவ்வொரு இடமாகச் சென்று 'ஆர்டர்கள்' எடுத்து பின்பு தமிழ் நாட்டலிருந்து மொத்தமாக சரக்கை அனுப்புவதாகச் சொன்னார். இப்போது ஈரோடுக்கு பயணமாகிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நிலையத்திலும் இரயில் நிற்கும் போதெல்லாம் அவருடைய உடைமைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எதையாவது வாங்கப்போவார். தமிழ்நாட்டிலிருந்து இப்படி பலர் கூட்டமாக சேர்ந்து துணிமணிகளை மொத்தமாக கொண்டுபோய், அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வருவதாகச் சொன்னார். வியாரம் என்றால் கடை வைத்து அல்ல. ஆளுக்கு ஒரு சைக்கிளில் துணிகளை எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாக கிளம்பி விடுவார்களாம்.

ரொக்கமாக விற்காமல் தவணை முறையில்தான் அவர்களின் வியாபாரம் இருக்குமாம். கிராமத்து வாசிகள் எல்லாருமே மிகவும் நாணயமானவர்கள் தானாம். பணம் ஒழுங்காக வசூலாகிவிடுமாம். இரண்டு மூன்று மாதம் இப்படித் தங்கி வியாபாரம் செய்துவிட்டு, ஊர்ப்பக்கம் வந்து கொஞ்சம் தலை காட்டி விட்டு மீண்டும் கிளம்பி விடுவார்களாம். கிட்டத்தட்ட மாதம் நாற்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்று சாதாரணமாகச் சொன்னார். நம்மவர்களின் உழைப்பையும், எங்கிருந்தோ வந்த வேற்று மொழிக்காரர்கள்தானே என்ற பாகுபாடில்லாமல், ஏமாற்ற நினைக்காமல் பணத்தை ஒழுங்காக திருப்பிக்கொடுக்கும் மக்களையும் நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் ஒன்று அன்று நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இரயில் நின்றதும் பலர் நானிருந்த பெட்டிக்குள் ஏறி காலியாக இருந்த இருக்கைகளை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டனர். என்னுடைய இருக்கைக்கு அருகே ஒரு முப்பந்தைந்து அல்லது நாற்பது வயதான பெண்மணியும் அவரது தாயாரும் அமர்ந்தனர். பின்னர் ஆளுக்கு ஒரு இருக்கையில் படுத்துக் கொண்டனர். பின் என்ன நினைத்தாரோ எழுந்து என்னிடம் இந்த ரயில் சென்னைதானே போகுது என்று தெலுங்கில் கேட்டார்.

நான் இல்லை, இது கேரளா போகும் வண்டி. சென்னை போகாது என்றேன். என்னை ஏளனமாகப் பார்த்து, (என்னை ஏமாத்தப் பார்க்கிறியா? என்கிற ஏளனம்...) இது சென்னை போகிற வண்டிதான் என்று பதில் போடு போட்டார். நான் மீண்டும் சொன்னேன், இது சென்னை போகாது, கூடுரில் பாதை மாறி ரேணிகுண்டா, காட்பாடி வழியாக திருவணந்தபுரம் செல்கிறது என்றேன். அவர் இதை நம்பத் தயாராக இல்லை. என்னை நோக்கி... நீங்க எங்க போறிங்க என்றார். நான் காட்பாடி என்றேன். காட்பாடி எங்கே இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

எந்தக் கவலையுமின்றி மீண்டும் தாயும் மகளும் படுத்துத் தூங்கத் தொடங்கினர். 'சாய்வாலா' ஒருவன் வந்தான். எழுந்து டீ வாங்கிக் குடித்துக் கொண்டே அவனிம் இந்த வண்டி சென்னை போகிறதா? என்று அவனிடமும் கேட்டனர். நிற்கிற வண்டியிலெல்லாம் ஏறி வியாபாரம் செய்கிறவனுக்கு எந்த வண்டி எங்கே போகிறது என்ற விவரமா தெரியும்?! அடுத்த ரயிலைப் பிடிக்கிற அவசரத்தில் ம்... போகுது, என்ற ஒன்ற்றைச் சொல்லோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அந்தப் பெண்மணியோ நான் பொய் சொல்லி விட்டதாக என்னைப் பார்த்து முறைப்போடு ஒரு பார்வை பார்த்தார். நான்  நம்பாவிட்டா போயேன்... என்று பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அரை மணி நேர பயணத்திற்குப்பின் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தார். ஒவ்வொருவரிடமும் பயணச்சீட்டைப் பரிசோதித்த அவர், அவர் இறுதியில் அந்த தெலுங்குப் பெண்மணிகளிடமும் விசாரித்தார். அவர்களிடம் இருந்தது முன்பதிவு செய்த சீட்டு அல்ல. சாராரண வகுப்பில் பயணம் செய்யும் சீட்டை வாங்கிவிட்டு முன்பதிவு செய்த இருக்கையில் அட்டகாசமாக அமர்ந்து வந்த அவர்கள் அப்பாவியாய் பரிசோதகரிடம் சீட்டை நீட்டினர். அப்போது அவர் எங்கே போகிறீர்கள்? ஏனிந்த பெட்டியில் ஏறினீர்கள் என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார்.

சென்னை போகிறோம் என்று சொன்னதும் இது சென்னை போகாது. கூடூரில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி முன் பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்ததற்கான அபராதமாக நூறு ரூபாயும் (ரசீது இல்லாமல்தான்) வசூலித்துக் கொண்டார். அவர் போனதும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! எனக்கோ பரிதாபம் ஒரு பக்கம் சிரிப்பு ஒரு பக்கம். என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார்கள். இரயில் நெல்லூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன் சிக்னலுக்காக நின்றது. இந்த இரண்டு பெண்மணிகளும் என்ன நினைத்தார்களோ தீடீரென ரயிலிருந்து கீழே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டனர்.

அவர்களுக்கு அவமானமாகப் போயிருக்கும் என நினைக்கிறேன். பயணங்களில் யாரையும் நம்பக் கூடாதுதான். அதற்காக இப்படியா? சரியாக விசாரிக்காமல் இந்த ரயிலில் ஏறியது முதல் தவறு. அதில் பயணம் செய்பவர்கள் எங்கே போகிறது என்று சொன்ன பிறகும் நம்பாதது இரண்டாவது தவறு. ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்காமல் இப்படி நடு வழியில் இறங்கியது மூன்றாவது தவறு.

ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு நேரத்தோடு சென்னை சென்று சேர வேண்டிய இவர்கள், இப்படி தவறுக்கு மேல் தவறு செய்தும் அதை உணராமல் மாலை மங்கிய நேரத்தில் நடு வழியில் இறங்கி அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கோ அல்லது இரயில் நிலையத்திற்கோ நடந்து சென்று அடுத்த இரயிலைப் பிடித்து எப்போது எத்தனை மணிகு சென்னை போய்ச் சேர்வார்கள்? என்ன மனிதர்கள் இவர்கள்? சக மனிதனை, சக பயணியை நம்பாதவர்கள்!?

வீடு போய்ச்சேரும் வரை இவர்கள் நினைப்பாகவே இருந்தது. என்னை இவர்கள் ஏன் நம்பவில்லை என்பது புதிராகவே இருந்தது! உறவினர்களும் கைப்பேசியில் இவர்களை வழி நடத்தியிருக்கலாம். (யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டனர்.) இவர்களுக்கு ஹிந்தி, தெலுங்கு கூடவே தமிழும் தெரிந்திருந்தது. ஆனால் பொதுவில் எப்படி யாருடன் பழகுவது, யாரை நம்புவது என்ற அடிப்படைப் பாடத்தைக் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழ்நாட்டில் தமிழ் படிக்கும் வாய்ப்பை மறுத்த பள்ளி நிர்வாகம்!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து ஒடிஸாவிற்கு குடும்பத்தை இடம் மாற்றியிருந்தேன். ஜூலை மாத இறுதி என்பதால் குறிப்பிட்ட சில பள்ளிகளில் என் இளைய மகளுக்கு (ஒன்பதாம் வகுப்பில் சேர) இடம் கிடைக்க வில்லை. பிரபலமான பள்ளிகளில் சேர்க்கை முடிந்து வகுப்புகள் ஆரம்பமாகியிருந்தது.


மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது கல்வித்துறையிலிருந்து சான்றிதழ் வேறு கொண்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னதன் பேரில் (என் மகள் படித்த பள்ளியிலோ இதைப்பற்றிய எந்த தகவலையும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்) அலைந்து திரிந்து அங்கு போய்க் கேட்டபோது, பத்தாம் வகுப்புக்கு மேல் என்றால்தான் சான்றிதழ் தேவை. ஒன்பதாம் வகுப்பு என்பதால் அவசியமில்லை என்றார்கள்

ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் கொண்ட பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்வதாக சொன்ன பிறகே சென்னையிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கினேன். அதன் பிறகு அந்த பள்ளிக்குச் சேர்க்கைக்காக சென்ற போது கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். என் மகள் சென்னையில் படித்த பள்ளியும் சி.பி.எஸ்.. பள்ளி என்று நினைத்தார்களாம். மெட்ரிக் பாடதிட்டம் என்று இப்போது சொல்கிறீர்களே என்றார்கள்.

முக்கியமாக இரண்டாவது மொழிப்பாடமாக எதை எடுப்பது என்பதில் பிரச்னை. ஹிந்தியைத் தேர்வு செய்ததும், எப்படி அவளால் படிக்க முடியும்? படிக்கத்தெரியுமா? எழுதத் தெரியுமா என்றேல்லாம் கேள்விகள். ஏனென்றால் தமிழகத்தில் படித்த பள்ளியில் இரண்டாவது மொழிப்பாடம் தமிழ்தான். (ஐந்தாவதிலோ ஆறாவதிலோ ஒரு ஆண்டு ஹிந்தியை படிக்க முயன்று வேண்டாம் என்று ஒதுக்கியிருந்தாள்). இப்போது சமாளித்துக் கொள்வேன் என்று சொன்னாலும் எப்படி முடியும்? எங்கே... இதை வாசித்துக் காட்டுஎன் கேள்விக்கு ஹிந்தியில பதில் சொல்லுன்னு ஒரே தொணதொணப்பு. கடைசியாக சேர்க்கைகாக நான் முதலில் அணுகியவரைப் பார்த்து மகளை பள்ளியில் சேர்த்தாயிற்று.


சில நாட்கள் கழித்து வகுப்பெடுக்கும் போது பள்ளியின் தலைமை ஆசிரியை நீ தமிழையே இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்திருக்கலாமே என்று மகளிடம் என்று கூறியிருக்கிறார். இதை மாலையில் வந்து அவள் என்னிடம் வந்து சொன்னபோது எனக்கு வியப்பாக இருந்தது. உடனே மாற்றிக்கொடுக்க கேட்கிறதுதானே என்றேன். ஏற்கனவே காலதாமதாக சேர்ந்த்தினால் இனி முடியாது என்றிருக்கிறார்

எப்படி இது சாத்தியம் என்று மகளிடம் கேட்டபோதுதமிழை இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. னால் இங்கு தமிழ் கற்பிக்க யாரும் இருக்க மாட்டார்கள். பாடப் புத்தகத்தை (தமிழகத்தில்)வாங்கி வீட்டில் படித்துக்கொள்ள வேண்டும் என்றாள். 

ஆரம்பத்தில் சேர்க்கைக்காக அணுகிய போது இதைச் சொல்லியிருந்தால் என் மகளுக்கு ஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. சரி விடுப்பா… ஹிந்தி கத்துக்கிறதும் நல்லதுதானே! தமிழ்தான் உனக்கு ஏற்கனவே தெரியுமே என்று சமாதானப்படுத்தினேன். எப்படியோ இரண்டு வருடங்களில் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடனும், தனிவகுப்பு எடுத்தும் ஹிந்தி ஓரளவிற்கு கற்று தேர்வெழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டாள்.

பிள்ளைகளின் மேற்படிப்பு இங்கு சரி வராது என்று எனது குடும்பத்தை ஒடிஸா மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு (வேலூர்) மாற்ற முடிவெடுத்தேன். வேலூரில் +2 சேர்க்கைக்காக நான் அணுகிய அந்தப்பள்ளி சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு கிறித்துவ நிறுவனம் நடத்தும் பிரபலமான பள்ளி அது. மகளின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்ததும் பள்ளியில் இடம் தருவதாக ஒப்புக்கொண்டனர். மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிப்பதற்கான இடப்பெயர்வு (Migration certificate) சான்றிதழை பின்னர் தருவதாகக் கூறியதற்கும் ஒப்புக்கொண்டனர். 

ஆனால் சேர்க்கையின் போது சி.பி.எஸ்.இ. பள்ளியிலிருந்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ப்பதற்கு சி.பி.எஸ்.இ. பிராந்திய அலுவலகத்திலிருந்து ஒப்புகை வாங்கி வரவேண்டும் என்றார்கள். பிராந்திய அலுவலகம் எங்கே என்பதைப் பற்றியோ, சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்திலா அல்லது புவனேஸ்வரத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திலா என்ற எந்த தகவலையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதாவது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒடிஸாவில் மகள் படித்த பள்ளியிலும் இதைப் பற்றி ஒரு விவரத்தையும் சொல்லவில்லை. 

சரி, அதையும் வாங்கி வந்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். பிறகு இரண்டாவது மொழிப்பாடம் குறித்த பேச்சு வந்தது. என் மகள் இங்கும் ஹிந்தி படிக்க விரும்ப வில்லை. ஒடிஸாவில்தான் வேறு வழியில்லாமல் படிக்க வேண்டியதாகி விட்டது. இங்கு எனக்கு தமிழ்தான் வேண்டும். புரிஞ்சி படிச்சால்தானே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என்றாள். ஆனால் பள்ளி நிர்வாகமோ பத்தாம் வகுப்புல இரண்டாவது மொழிப்பாடமா என்ன எடுத்தாயோ அதைத்தான் எடுத்தாகணும். தமிழ் எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க.

இரண்டாவது மொழிப்பாடம் எடுப்பது மாணவரின் விருப்பத்தைப் பொருத்தது என்ற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லை. அதுவும் தவிர தமிழ்நாட்டுலேயே தமிழ் மறுக்கப்படுகிறது. எனக்கு கோம் உச்சிக்கு ஏறியது. இருந்தாலும் நல்ல பள்ளியாயிற்றே கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என்று பொறுமை காத்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுலதான் இவள் படித்தாள். ஹிந்தி படிக்க சிரமப்படுகிறாள் என்றுதான் இங்கே வந்தோம், என்றேன். நிறைய விதிமுறைகள் இருக்கிறது. அது அவ்வளவு சுலபமில்லை என்றார்கள். பின்பு சில அனுபவமிக்க ஆசிரியர்களை கலந்தாலோசித்தார்கள். கடைசியில் முடியவே முடியாது என்றார்கள். கோபத்தோடு அந்தப் பள்ளியில் இருந்து வெளியேறினேன்.  

இன்னும் இருக்கு....

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

மணமான மாணவர்கள்


கலிங்க நகரைப் பற்றியும், சுகிந்தா குரோமைட் சுரங்கம் பற்றியும் நான் அந்தப் பகுதிக்குச் செல்லும்வரை அறிந்திருக்கவில்லை. இணையத் தேடலும் அது குறித்த அறிவும் கூட எனக்கு அப்போது இல்லை. எங்கள் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாங்கள் அங்கு பணியாற்ற அனுப்பப் பட்டோம். எங்கள் நிறுவனத்தின் பணியும் அதில் எங்களின் பங்களிப்பு என்ன என்பதையும் அறிந்து கொண்டபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.

நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியமிக்க டாடா ஸ்டீல் ஜாம்ஷெட்பூரில் (டாடா நகர்) தனது தொழிற்சாலையைத் தொடங்கியபோதே அப்போதைய பிரிக்கப்படாத ஒடிஸாவிலும் கால் பதித்தது. இரும்புத்தாதும், மாங்கனீசும் நிரம்பியமயூர்பன்ஜ்’, ‘ஜோடாபகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் தாதுக்கள்தான் டாடா நகருக்கு கொண்டு போகப்பட்டது. மேலும் ஜோடா பகுதியில்பெர்ரோ மாங்கனீஸ் தொழிற்சாலையையும் நிறுவியது. பிறகுதான்ஜாஜ்பூர்மாவட்டத்தின் சுகிந்தா பகுதியில் களமிரங்கியது.

தேவைக்குப்போக இந்த தாதுக்களை ஏற்றமதி செய்யவும் தொடங்கியபோதுதான் அருகிலுள்ள வசதியான துறைமுகங்கள் இவர்களின் பார்வையில் படத்தொடங்கின. அருகில் உள்ள தாம்ரா, பாரதீப், கோபால்பூர் துறைமுகங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று திட்டங்களை வகுத்தார்கள். அந்த திட்டத்தின்படிகோபால்பூரில்புதிய இரும்பு உருக்கு ஆலையை நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கின. இதில் முக்கியமானது நில ஆர்ஜிதப் பணிகள். ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், சில கிராமங்கள் என நில ஆர்ஜிதப் பணிகள் துவங்கியபோதே பிரச்னைகளும் சேர்ந்தே ஆரம்பித்தன. அரசியல்வாதிகளும் குளிர்காய உள் நுழைந்தார்கள்.

பிரம்மபூரிலிருந்து (பெர்ஹாம்பூர்) மிக அருகில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் தொழிற்சாலையை அமைத்தால் ஏற்றுமதி இறக்குமதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் நில ஆர்ஜிதப் பணிகள் அத்தனை சுலபமானதாக இல்லை. காலதாமதம் ஆக ஆக நிலங்களின் மதிப்பும் இழப்பீட்டுத் தொகையும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம்கோபால்பூரில்தன் தொழிற்சாலையை அமைப்பதிலிருந்து பின்வாங்கியது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அதன் வசமே இருந்தன.

வேறு இடத்தில் தொழிற்சாலையை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியபோது தேர்வான இடம்தான் இந்த கலிங்கநகர் பகுதி. கோபால்பூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நிர்வாக காரணங்களுக்காக கட்டப்ப்பட்ட அலுவலகத்தில் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை துவக்கியது. அதை நிர்வகிக்க எங்கள் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. டாடா ஸ்டீல் நிறுவனம் ஏற்கனவே எங்கள் நிறுவனத்தோடு சேர்ந்து ஜாம்ஷெட்பூரில் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதான் எங்கள் நிறுவனத்திற்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கும் உள்ள உறவு! இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவெனில் டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர், எங்கள் நிறுவன இயக்குனர் இருவரும் தமிழர்கள்!

2005-ல் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாய்க், டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர் பி. முத்துராமன், எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்ட துவக்க விழா!

நான் கோபால்பூரில் உள்ள எங்கள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தபோது இது எதுவும் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கலிங்க நகர் பகுதியிலும் மற்றொரு பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரமது. இரண்டு மூன்று மாதங்கள் நான் கோபால்பூர் நிறுவனத்தில் இருந்தபோது கலிங்கநகர்-சுகிந்தா பகுதியிலும் எங்கள் பயிற்சி நிலையம் ஆரம்பமாகியிருந்தது. அங்கே பயிற்றுனராக ஏற்கனவே ஒரு தமிழர்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். துணைக்கு நம் ஆள் ஒருவர் இருக்கிறார் என்று கொஞ்சம் தைரியம் வந்தது.

பார்த்தவுடனே பயமுறுத்தும் முகங்கள். நாகரிகச்சுவடே இல்லாத பழங்குடியின மக்கள்தான் அவர்கள். தங்கள் பூர்வீக வாழ்விடத்தை டாடா ஸ்டீலுக்காக கொடுத்து விட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருந்தவர்களின் வாரிசுகளுக்கு அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொழிற்சாலையில் பணிபுரியுமளவுக்கு தொழில் கல்வியை அளிப்பதுதான் திட்டம். அப்படிப்பட்ட தொழிற்பயிற்சி அளிக்கத்தான் நான் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.

பொதுவாக தொழில்நுட்ப நிறுவனங்களில் பள்ளியிறுதி (பத்தாம் வகுப்பு) முடித்தவர்களைத்தான் சேர்ப்பது வழக்கம். அதாவது வயதில் மிகக் குறைந்த மாணவர்களுக்கு அங்கே பயிற்சியும் படிப்பும் சொல்லித்தரப்படும். ஆனால் கலிங்கநகரில் தொடங்கிய எங்களது நிறுவனத்தில் பயிற்சிக்காக என்று வந்து சேர்ந்தவர்களில் எல்லாரும் 16 வயதிலிருந்து 40 வயதுவரை இருந்தார்கள். 5 ம் வகுப்பிலிருந்து பத்தாவது வரை என எல்லாம் கலந்துசிலர் படிக்காதவர்கள். சிலருக்கு கல்யாணமாகி குழந்தைகள், சிலருக்கு இரண்டு மனைவிகள் என்று வித்தியாசமான கலவையில் மாணவர்கள்?!

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வயிறும் வாழ்வும்!

 
(ஒடிஸா வாழ் அனுபவங்கள் - 6)
கலிங்கநகர் பகுதிக்கு வந்தவுடன் நான் சந்தித்த முதல் பிரச்னை சாப்பாட்டுப் பிரச்னைதான். ஒரு ஜான் வயிற்றுக்காகத்தானே மனித வாழ்வில் இத்தனை போராட்டமும்! சாப்பாடு மட்டும் திருப்தியாகவும், ருசியாகவும் கிடைத்து விட்டால் அந்த மகிழ்ச்சியிலேயே மற்ற கஷ்டங்களை மறந்து வேலை செய்து விடலாம். குடும்பத்தோடு இருப்பவர்களைப் பற்றி இங்கே நான் எதுவும் சொல்ல வரவில்லை. குடும்பத்தை விட்டு இப்படி வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் பணிபுரிபவர்களின் நிலைமை சொல்லி மாளாது.

ஒன்று கிடைத்ததை தின்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தனியாக சமைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதுவும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை என்றால்கூட ஓரளவு சமாளித்து விடலாம். அதாவது அந்த உணவுப் பழக்கம் பழகிப்போய்விடும். அல்லது சமைப்பதற்கான தட்டுமுட்டுச் சாமான்களை வாங்கிக் குவித்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமக்கு வேண்டியவற்றையெல்லாம் சமைத்து சாப்பிடலாம். ஆனால் எனக்கோ இது இரண்டுமே வாய்க்கவில்லை. குறைந்த பட்சம் ஒராண்டுகூட ஓரிடத்தில் வேலை பார்க்க விடமாட்டார்கள்.

ஒடிஸாவுக்கு வந்த முதல் ஆறுமாதம் கோபால்பூரில் (பிரம்மபூர்) பணி. அதற்கப்புறம்தான் இந்த கலிங்கநகருக்கருகில் உள்ள சுகிந்தா குரோமைட் சுரங்கப்பகுதியான காலரங்கியட்டா! பிரம்மபூர் ஒடிஸாவின் நுழைவு வாயில் மாதிரி. சென்னையிலிருந்து இரயில் மார்க்கமாக சென்றால் ஆந்திர மாநிலத்தின் கடைசி இரயில் நிலையம் இச்சாபூர். அதற்கடுத்து ஒடிஸாவில் இரயில் நுழைந்தவுடன் முதல் இரயில் நிலையம் பிரம்மபூர்தான். ஆந்திராவின் எல்லையில் உள்ளதால் இங்கு (பிரம்மபூரில்) கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தெலுங்கர்கள்.

ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் சென்னை மாகானத்தின் பகுதிகளாகவே இருந்துள்ளன. அதன் காரணமாகவும் இங்கு தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். ஒடிஸாவின் இந்த கன்ஜாம் மாவட்டத்தின் ஆந்திர எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெலுங்கர்கள்தான் பெரும்பான்மை. இருப்பது ஒடிஸாவில் வரி செலுத்துவதோ ஆந்திராவுக்கு என்றும் சொல்வதுண்டு. இங்கு தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும், மிகவும் செல்வாக்கு பெற்றவர்களும் தெலுங்கர்கள்தான்

அதனாலேயே இங்கு வேலையில் சேர்ந்த போது தென்னிந்திய உணவு வகைகள் தாராளமாக கிடைத்தன. கொஞ்ச நாளில் எங்கள் அலுவலகம் கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பிலேயே சமைத்து சாப்பிடவும் தொடங்கியிருந்தேன்.

பொதுவாக எனக்கு அசைவ உணவு வகைகளை வெளியில் சாப்பிடப் பிடிக்காது. விலை அதிகமாக இருப்பது ஒரு காரணம், மேலும் அதிகமான மசாலாக்களை உபயோகிப்பதால் வரும் வயிற்றுக் கோளாறு என படுத்தி விடுவதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிடித்த வகைகளை தேவையான அளவுக்கு வாங்கி வந்து குடியிருப்பிலிருந்த மற்றோரு கேரள நண்பருடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதுதான் பிடித்தமான வழக்கம்.

இந்த மாதிரி பிரச்னைகளை நான் வெளிநாடுகளில் சந்தித்திருந்தாலும் ஏதோ ஒரு சகிப்புத்தன்மையால் காலத்தை ஓட்டியிருக்கிறேன். இன்னொரு விஷயமும் இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இங்கே (ஒடிஸா) தமிழ்நாட்டு உணவு வகைகளை என்னால் சாப்பிட முடியவில்லை. ஆனால் பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நம் தமிழக உணவு வகைகளை வகைவகையாக சாப்பிட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. அதை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இனி வெளிநாடே வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னால் வெளி மாநிலத்தில் வந்து மீண்டும் சிக்கிக்கொண்டேன். சிறிதும் தமிழ்நாட்டு உணவோடு சம்மந்தமில்லாத வகைகள். எங்கும் எதிலும் உருளைக் கிழங்கு. நம் மாநிலத்தில் கிடைக்கும் எந்த வகை அரிசியும் இங்கே கிடைக்காது. பச்சரிசி வேண்டுமாணாலும் கிடைக்குமே தவிர புழுங்கலரிசி சன்ன ரகம் கிடைக்கவே கிடைக்காது. உணவு விடுதிகளிலோ சுத்தம் என்பது கிஞ்சித்தும் கிடையாது.

எங்காவது சில இடங்களில் கிடைக்கும் இட்டிலியோ தோசையோ நம்மூர் பக்குவத்துக்கு வரவே வராது. நேரத்துக்கு ஏதாவது கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு நான் அனுபவிக்கும் வேதனை. பிரம்மபூரிலாவது பரவாயில்லை. கலிங்கநகர் பகுதியில் அதுவும் சுரங்கம் அமைந்த சுகிந்தா பகுதியில்வாழ்க்கையே வெறுத்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடப் பழகினாலும் நம்மூர் சாம்பாரும், ரசமும் கலந்து கட்டி அடிக்க மனம் ஏங்கும். எப்போது ஊருக்குப் போவோம் என்றுதான் ஒவ்வொரு நாளும் மனசு துடிக்கும்.

அந்த அடர்ந்த காட்டில் ஒரிய, வங்காளிகள் தவிர்த்து வேறு மாநிலத்தவரைப் பார்ப்பது அபூர்வம். டாடா ஸ்டீல் அலுவலகத்தில் மற்ற மாநிலத்துக்காரர்கள் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் ஒரிய மக்களையும் பழங்குடியின மக்களையும் மட்டுமே பார்த்துப் பழகிய எனக்கு, ஒரு நாள் அங்கு வாரம் ஒரு முறை நடைபெறும் சந்தைக்குப் போனபோது அதிசயமாக தமிழ்க்குரல்கள் கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தேன்….
இன்னும் இருக்கு...
 
(புகைப்படங்கள் 2007-ல் ஒடிஸா - சுகிந்தாவில் பணியாற்றிய போது எடுத்தவை)