பெண்ணுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூன், 2013

காதலை நட்புச்சாயம் பூசி மறைக்கலாமா?



 

அன்புள்ள நண்பருக்கு,                                 22.02.2000

எப்படி இருக்கிறீர்கள்? நலமா? மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமா? நான் மற்றும் வீட்டில் அனைவரும் நலமே!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதி உள்ளேன். அறுவடைக் காலம் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து நெல் பிடிப்பதில் பிஸியாக உள்ளேன். சீசன் முடிஞ்சதும் நீ மெட்ராஸ் போறத வெச்சுக்கோன்னு சொன்னாங்க. அதனால இப்போதைக்கு அப்பாவோட வொர்க்கிங் பார்ட்னரா (!) இருக்கேன். அதனாலதான் உடனே லெட்டர் எழுத முடியலை.

என்ன! இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். என்ன எழுதியிருக்கிறார் யாழினி? நீங்கள் பதில் கடிதம் போட்டுவிட்டீர்களா?

எனது தங்கையைப் பார்த்தால் பேசுங்களேன்! இதிலென்ன தயக்கம்? நல்லா படிக்கச்சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா.

அப்புறம் உங்கள் தோழியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் எதுவும் தப்பா நினைக்கல. உங்களோட அனுபவங்கள என்னுடன் பகிர்ந்துக்கறீங்க. எல்லாருடைய அனுபவமுமே நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் என்பது என் கருத்து. அதனால நீங்க எழுதுங்க.

எனக்குத் தோணும் கருத்துக்களையும் சொல்லலாம்தானே?! புரட்சியாய் பேசிய, அறிவாளியாய் இருந்த உங்கள் தோழி இரட்டை வேடம் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். உள்ளுக்குள் உங்கள் மேல் இருந்த காதலை, நட்புச் சாயம் பூசி மறைத்திருக்கிறார்.

நண்பராக நினைத்திருந்தால் திருமண பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்கன்னு சொல்லமாட்டார். அப்புறம் உங்களை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கிறத தாங்க முடியலைன்னு அழுது அரற்றவும் மாட்டார்.

அதானலதான் காதலிப்பவர்களுக்கு துணிவு வேணும்னு சொல்றாங்க போலிருக்கு!?

அதே சமயம், இந்த தலைமுறைல நம்ம வரைக்கும்கூட ஜாதி என்பது பிரிக்க முடியாத பெரிய சக்தியாதான் இருக்கு இந்த சமூகத்துல. நம்மைப் போன்றவர்கள் அதை ஒழிக்க நினைத்தாலும் நடக்காத விஷயமாகத்தான் இருக்கிறது அது.

எங்க அக்காவுக்கு வரன் பார்க்கிறோம். Msc., B.Ed., படிச்சிருக்காங்க. படிப்புக்கேத்த வரன் எங்க ஜாதில கிடைக்கிறது கஷ்டம். நான் சொல்றேன், “Cast” வேண்டாம்னு சொல்லுங்க ஒரே மாசத்துல கல்யாணமே முடிச்சிடலாம்னு. ஆனா எங்க வீட்ல யாரும் ஒத்துக்கலை. அப்படி இருக்க எழுத்தளவுல எழுதறதாலயோ, பேசறதாலேயோ ஒண்ணும் மாறிடப் போறதில்ல இது.

வேணும்னா நாம நம்ம சந்ததிகள் மேல இந்த ஜாதிச் சாயம் பரவ விடாம தடுத்து அவங்கள உருவாக்கலாம்.

புரட்சியாய் செய்த எத்தனையோ திருமணங்கள் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன. காதல்ன்ற பேர்ல ஒருத்தரை ஒருத்தர் நம்பி, பெத்தவங்கள எதிர்க்க முடியம தப்பியோடி, சில காலம் வாழ்ந்து பிறகு அதுவும் வெறுத்துப்போய் பரஸ்பரம் குறைகூறிக்கொண்டு ஏனோ தானோவென்று வாழ்ந்து (பிரிந்து) வருகின்றனர்.

காதலில் இருக்கும் வேகம் இவர்களுக்கு வேறெதிலும் இல்லை. இப்படி விட்டேற்ற்றியாய் வாழ்வதைவிட, பேசாமல் பெற்றோர் பார்க்கும் அந்த ஜாதிவாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்?!

அதற்கும் மேல் நமது கலாச்சாரம் காலங்காலமாய் உபயோகித்து வரும் வார்த்தை கற்பு. கற்புன்னா என்ன? அது உடல்ல இருக்கிற ஒரு வஸ்துவா? இல்ல டி.என்.. ஜீன் போன்ற சமாச்சாரங்களா?

ஏன் அப்படின்னா அது ஆணுக்கு கிடையாதா? திருமணம் கற்பை பாதுகாக்கிறதா? விபத்தா நடந்தா கூட கற்பை பறிகொடுத்தாட்டான்னு சொல்றவங்க திருமணமானவங்களை சுமங்கலின்னு சொல்லுவதேன்?!

‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்ற கொள்கைதான் தடம் புரண்டு கற்புன்னு மாறி இருக்கணும். ராஜேஷ்குமார் சொல்வார் – இந்த உலகத்துல காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய விஷயம் கற்புன்னு. ஒழுக்கம், நேர்மைன்னு எல்லாத்தையும் சேர்த்து கற்புன்னு ஒரு வார்த்தையைச் சொல்லி பெண்களுக்குன்னு முத்திரையும் குத்திட்டாங்க.!

பெண்களா இதை புரிஞ்சிகிட்டு வெளில வந்தாதான் இதுக்கு விடிவு காலம்.

அதுக்கும் மேல நம் மக்களோட சிந்தனை எப்போதும் உடலைப் பற்றியதாகவே இருப்பது. அதுல முக்கிய பங்கு தமிழ் சினிமாவுக்குத்தான். ஆதி காலத்திலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இப்படியே தொடர்கிறது.

இதனால்தான் ஆண்-பெண் நட்பு கூட இங்கு அன்னியமாய், வித்தியாசமாய் பார்க்கப்படுகிறது. அடிமட்டத்திலிருந்து மாறணும். வாழ்க்கைல செக்ஸ் ஜஸ்ட் சாதாரணம்தான் எனும் எண்ணம் வரணும். அதன் பிறகே நல்ல சிந்தனைகள் எழும்பும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

விடுதலை உணர்வை விரும்புகிற பெண்களுக்கு அவர்களது கணவர்கள் தடையாய் இருப்பதாலேயே அவர்கள் தனித்தே வாழலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலிருக்கிறது.

சுய சம்பாத்தியம் இருக்கும்போது பெண்ணுக்கு ஒரு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும், சமாளிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
அப்படி இல்லாதபோது ஆணை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும், அதனாலேயே எதையும் எதிர்க்க முடியாமல், அவனுக்கு பயந்து அடிமையாய் வாழ்தலும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஆனந்தவிகடன் படிப்பதில்லை. ஏற்கனவே காசை பேப்பராக்கியே வீண்டிக்கறேன்னு திட்டறாங்க. பட்ஜட் பற்றாக்குறை வேறு. அதனால்தான் வேறு புத்தகங்கள் எதையும் சேர்க்கவில்லை என் லிஸ்டில்.

இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராஸ் வந்துடுவேன். நல்ல லைப்ரரியா சொல்லுங்க, அங்க வந்து என் படிப்பு ஆசைக்கு தீனி போட்டுக்கிறேன். எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் படைப்பை (ஜெயகாந்தனுடையதுன்னு நினைக்கிறேன்) படிக்க ரொம்ப நாளா ஆசை. நீங்க படிச்சிருக்கீங்களா?

அப்புறம் உங்க சிங்கப்பூர் தோழி ஜென்ஸி வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு வேலை விஷயமா என்ன சொன்னாங்க? எண்ணம் போல வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதனாலதான் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது.

என் நண்பர் கோபு நிறைய சின்னச்சின்ன பரிசுகள் வாங்கியிருக்கார். கவிதை, விமர்சனம், துணுக்கு… என்று நிறைய படைப்புகள் வெளியகியிருக்கு. வாசகர் வட்டத்தில் நன்கு அறிமுகமான நபர். ‘பாக்யா’தான் அவரோட ஆஸ்தான பத்திரிகை. பெரிய விஷயமா இப்போதான் கவிதை நூல் எழுதி அதை அச்சுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்.

பெற்ற தாய் இறந்தால் கூட அதிலும் அரசியல் கலந்து அசிங்கம் பண்ணுவார்கள் போலிருக்கிறது நம் அரசியல்வாதிகள். தரும்புரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கழக கட்சிகள் ஒன்றையொன்று சாடிக்கொண்டிருக்கிறதே தவிர, அய்யோ… கண்ணு முன்னாடி உயிரோட எரிஞ்சாங்களேங்கிற ஒரு மனிதாபிமானம் எவருக்கும் இல்லை.

இன்னிக்கு பார்லிமெண்ட்ல மொராக்கோ பிரதமரை வச்சுகிட்டு நம்ம எம்.பி.ங்க குழாயடி சண்டை போட்டுக்கிட்டத பார்த்தா இங்க ஒரு ‘முஷாஃரப்’ இருக்கலாமோன்னு தோணுது.

வேறென்ன… நிறைய எழுதுங்கள். எனக்குள் தெளிவு வர உங்கள் எழுத்து உதவியாய் இருக்கும். உங்கள் மகள்களை நல்லா ‘ஷேப்’ பண்ணுங்க. இந்த வயசிலேயே ஆரம்பிச்சாதான் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

வேறொன்றும் விஷயமில்லை. மற்றவை தங்கள் பதில் கண்டு.

மாலா, மயிலாடுதுறை.
24.02.2000

சனி, 17 மார்ச், 2012

கற்பு



கைப்பிடித்த கணவனைத்தவிர தெய்வம் வேறில்லை என்று எண்ணி, அவனை வழிபட்டு வாழ்வதுதான் கற்பு. நாள்தோறும் வீடு பெருக்கி, பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிக் கோலமிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து, கணவனுக்கு உணவு சமைத்து, அவன் உண்டபின் உண்டு, அவன் உறங்கியபின் உறங்கி, அவன் எழுவதற்குமுன் எழுந்து, அவனிட்ட கட்டளைகளை இன்முகத்தோடு நிறைவேற்றி, அவனுக்காகவே வாழ்வதுதான் கற்புடைய பெண்ணுக்கு அழகு, என்கிறது அபிதான சிந்தாமணி.
ஆதி மனிதர்கள் கூட்டமாகச் சென்று விலங்குகளை வேட்டையாடினர். வேட்டை உணவை அங்கேயே பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு கூட்டமும் ஒரு இனக்குழுவாக உருவெடுத்தது. அந்த இனக்குழுவுக்கு ரத்த உறவே அடித்தளமானது. ‘ஒவ்வொருவரும் அனைவருக்குமாக, அனைவரும் ஒவ்வொருவருக்குமாகஎன்னும் வாழ்க்கை முறையே ஒழுக்கமானது. குழுமணங்களும், பொதுமைப் பாலுறவும் நியதியாயின. பெற்றவள் பெருமைப் படுத்தப்பட்டாள். தாய் வழிச்சமுதாயம் மலர்ந்தது. இப்போதைய கற்பு குறித்த பிரக்ஞை அப்போது இல்லை.
கால ஓட்டத்தில் நாகரிக மாற்றம் நிகழ்ந்தது. வேட்டைச்சமுதாயம் வேளாண்மைச் சமுதாயமானது. கால்நடை வளர்ப்பில் ஆடவர் ஆதிக்கம் தலையெடுத்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் அழிந்து, தனிச்சொத்துரிமைச் சமுதாயம் அமைந்தது.
தான் உழைத்துச் சேர்த்த சொத்து, தனக்கு மட்டுமே உடன்பட்டவளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற உடைமை விருப்பம், ஆணின் உள்ளத்தில் உருவெடுத்தபோதுதான் கற்பு என்ற கருத்தொற்றத்துக்கு கால் முளைத்தது. பெண்ணை அடிமைப்படுத்திய நிலவுடைமைச் சமுதாயத்தின் சிந்தனையில் விளைந்ததுதான் கற்பெனும் சித்தாந்தம்.
தனிச் சொத்துரிமை வேரூன்றிய சமுதாயத்தில் தலைவன், தலைவி, மகன், மகள் என்று சேர்ந்து வாழும் குடும்பம் பிறந்தது. திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தம் தனி மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது. ஒருத்தி ஒருவனோடு மட்டுமே காலம் முழுவதும் உடன்பட்டு வாழ்வதே பெண் கற்பு என்று வரையறுக்கப்பட்டதே தவிர, ஒருவன் ஒருத்தியோடு மட்டும் உயிராகக் கலந்து இறுதி வரை வாழ்வதே ஆண் கற்பு என்று எந்த வரையறையும் தொன்று தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்படவில்லை!

ஓர் ஆடவன் பல பெண்களுடன் வாழ்ந்ததைப் போன்றே, ஒரு பெண் பல ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்ததை மாகாபாரதம் சொல்கிறது. துருபதனிடம் தர்மன், ‘உடன்பிறந்த நாங்கள் ஐவரும் உங்கள் மகள் திரௌபதியை மணந்து வாழ விரும்புகிறோம்’, என்று தெரிவித்ததும், அதிர்ச்சியுற்ற துருபதன், ‘ஒரு பெண் பல ஆண்களை மணந்து வாழ்ந்ததை இதுவரை நான் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. ஒருத்தி பலருக்கு மனைவியாவது அதர்மமான பாவ காரியம். இதை என்னால் ஏற்க முடியாதுஎன்று கோபத்துடன் மறுக்கிறான்.
நீண்ட காலத்துக்கு முன் ஜடிலை என்பவள், ஏழு ஆண்களை மணந்து வாழ்ந்தாள். வார்ஷி என்பவள் ஒரே நேரத்தில் பத்து சகோதரர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டாள். அதனால் நாங்கள் ஐவரும் திரௌபதியை மணப்பது தவறாகாதுஎன்று தன் பக்க நியாயத்தை நிறுவ முயல்கிறான் தர்மன். அப்போது வியாசர் குறுக்கிட்டு, மானிட மகளிர் ஒருவரை மணப்பதே நியதி. ஆனால் திரௌபதி இலக்குமியின் அம்சம். அவள் ஐவரை மணக்க வேண்டும் என்பது சிவன் விதித்த விதி. அதனால், தர்மன் சொல்வதை ஏற்கலாம். ஆனாலும் சாதாரண மனிதர்களுக்கு இது தர்மமாகாதுஎன்கிறார். அதன்பின் பாண்டவர் திரௌபதி திருமணம் நடந்ததாக பாரதம் சொல்கிறது.
ஒருத்தி ஒருவனை மணந்து வாழ்வதே மானுட தர்மம்என்று விளக்கிய வியாசர், ஒருவன் ஒருத்தியோடு மட்டுமே வாழ வேண்டும் என்று வேதம் சொன்னதாக விதி எழுதவில்லை. பெண் கற்பு குறித்து பெருமையுடன் பேசும் தமிழர் சமுதாயமும், ஆண் கற்பைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே, ஒருவன் பல பெண்களுடன் தொடர்பொ கொண்டிருந்தது பற்றிய குறிப்பு காணக்கிடைக்கிறது.

சிலப்பதிகாரத்தில் தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்குக் கையில் சிலம்புடன் கண்ணில் நீர் வழிய, அரசவைக்குள் நுழைந்து, பாண்டியனிடம் தன் வரலாற்றை விளக்கும் கண்ணகி, ஏழு கற்புடை மகளிரைப் பற்றி குறிப்பிடுகிறாள். கணவன் பிரிந்து சென்றதும், தன் முக அழகில் மாற்றான் ஈடுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காக தன் முகத்தை குரங்கு முகமாக மாற்றிக்கொண்டவளையும், கணவன் வரும் நாள்வரை கல்லுருவில் காத்துக் கிடந்தவளைப் பற்றியும் பெருமிதமாகப் பேசுகிறாள் கண்ணகி.
ஆனால், மனைவியின் பிரிவில், அவளையே நினைந்து உருகி, அவளுக்காகவே கரைந்துபோன கற்பார்ந்த ஆண்கள் பட்டியலை இளங்கோ அடிகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
கற்புள்ள பெண் என்பதற்கு அடையாளம், அவளைப் பார்க்கும் எந்த ஆணின் நெஞ்சிலும் தவறான எண்ணம் தோன்றாமலிருப்பதுதான்என்கிறது மணிமகலை. மருதி என்ற பார்ப்பனப் பெண் நீராடிய நிலையில், இளவரசன் சுகந்தன் அவளைக் காமத்துடன் நோக்குகிறான். ‘மண்ணுக்கு மழைவளம் தரும் பெண்ணாக இருந்தால், அவள் பிறர் நெஞ்சு புகமாட்டாள். ஒரு ஆணின் இதயத்தில் காமம் கிளர்ந்து எழுவதற்கு நான் காரணம் ஆனதால், என் கற்பு களங்கம் உடையது’ என்று மருதி மனம் கலங்குவதாக மணிமேகலை கூறுகிறது. பெண்ணுக்கு கற்பின் பெயரால் இழைக்கப்பட்ட பெருங்கொடுமை அல்லவா இது!


பல பரத்தையருடன் ஓர் ஆண்மகன் உறவு கொண்டதை எதிர்த்து இலக்கியம் படைத்த முதல் மனிதர் வள்ளுவர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவாக்கிப்பார்த்த முதல் புரட்சியாளர் அவர். அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் செல்வாக்கில், கணவனை மட்டுமே கடுவுளாக வணங்கிய ‘தெய்வக்கற்பு’ பற்றி அவர் பேசினாலும், அடுத்தவர் மனைவியை நாடும் மனிதர்களை நல்வழிப்படுத்த ‘பிறனில் விழையாமை’யும், பரத்தையர் தொடர்பைக் கட்டறுக்க ‘வரைவின் மகளிரை’யும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஆணின் கற்பை அறத்துடன் நெறிப்படுத்த அவர்தான் முதலில் முயன்றார், அவருடைய வழியில் பின்பு வந்து சேர்ந்தான் கம்பன். மருத நிலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் 14 பாடல்களில் விரிவாக விளக்கும் கம்பன், மறந்தும் மருதத் தினைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் புலனடக்கம் போதிப்பதற்காகவே ராமாயணத்தைத் தமிழில் தந்தவன் அவன். அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்த தசரதனுக்கு மகனாகப் பிறந்த ராமன், ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்த சிறப்பைச் சொல்ல எழுத்தாணியைக் கையில் எடுத்தான் கம்பன். அசோக வனத்தில் ஆற்றமுடயாத சோகத்தைச் சுமந்தபடி… அமர்ந்திருந்த சீதையின் நெஞ்சில் நினைவலைகள் மோதுகின்றன. ராமனின் நற்பண்புகளை மனதில் அசை போடுகிறாள். கைப்பிடித்த மணநாளில், ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று அவன் அளித்த செவ்வரத்தை அவள் சிந்தித்து சிலிர்க்கிறாள். ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் வாழ்க்கையை வலியுறுத்தவே கம்பன் காப்பியம் படைத்தான். ஆண் கற்பைக அழுத்தமாகப் பேசியவன் அவன்.
‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால், இருபாலருக்கும் அதை பொதுவில் வைப்போம்’ என்ற பாரதி, பெண்ணுக்கு கற்பு விலங்கு பூட்டி, ஆண் மக்கள் பிற மாதருடன் நெஞ்சழிந்து நிற்பதை காணச் சகியாமல், கடுமையான விமர்சனம் செய்தான்.
ஆணாதிக்கம் சுயநலமாக பெண்ணுக்குக் கற்பெனும் விலங்கு பூட்டி அடிமைப்படுத்தியது. அந்த விலங்கை உடைந்நெரியும் வேகத்தில், ஒழுக்கச்சிதைவுக்கு வாசற்கதவைத் திறந்து வைக்க பெண்ணியம் பேசுவோர் முனைதல் தகாது. ‘ பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கக் கூடாது’ என்பது பெண்ணியத்தின் போர்க்குரல் அன்று. அது பண்பாட்டுப் பேரழிவின் பிரகடனம். வரம்பற்ற காமத்துக்கு வரவேற்புவிழா நடத்தும் திட்டம். இந்த மலினமான சீரழிவுச் சதிவலையில் இளைஞர் கூட்டம் சரிந்து விழலாகாது.

பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமகன் பெரியார் கூட, தாம் எழுதிய புரட்சிகரமான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில், மணமாவதற்கு முன்பே பெண் கன்னித்தன்மையை இழக்கலாம் என்று பரிந்துரைக்கவில்லை.
திருத்தப்படாத நிலம் களை மண்டிக்கிடக்கும். தடுக்கப்படாத வெள்ளம் தாளாத துன்பம் தரும். இரண்டு கரைகளுக்குள் அடங்கி நடக்கும் ஆறுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். இறுக்கமாக கட்டப்பட்ட வீணையின் நரம்புகளிலிருந்துதான் இனிமையான இசை பிறக்கும். சுயக்கட்டுப்பாடுதான் நாகரிகத்தின் நல் அடையாளம். புலனடக்கம் கொண்ட ஆணும் பெண்ணும் உருவாக்கும் குடும்பத்தில்தான் இன்பமும் அமைதியும் இறுதிவரை நிலைக்கும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதற்குப் பெயர்தான் கற்பு.
கற்பு பெண்ணுக்கு மட்டும் என்பது, ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கு. அதையே ஆணுக்கும் சேர்த்து வரையறுத்து, ஒழுக்கப் பயிர் காக்கும் வேலியாக்குவோம்!
- தமிழருவி மணியன்


கற்பு பற்றிய சுவாரஸ்யமான இடுகை 'வினவு' தளத்தில்... மற்றும்'புதிய பெண்ணியம்' தளத்திலும்.