கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 நவம்பர், 2014

அன்புள்ள சகோதரி… ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

பெறுநர்;
செல்வி ஜெயலலிதா,
முன்னாள் எம்.எல்..,
சென்னை.

அன்புள்ள சகோதரி
வணக்கம். முன்னாள் எம்.எல்.., என்று உங்களைக் குறிப்பிட்டதைக் கண்டு ஒரு வேளை நீங்கள் முகம் சுளிக்கக்கூடும். ஆனால் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, உங்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற ஆசையினாலேயே அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன். அதுதானே உங்கள் பாணி?! கலைஞருக்கு அனுப்பிய உலகத்தமிழ் மாநாட்டு அழைப்பிதழில் அப்படித்தானே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்?! 
 

தேர்தல் முடிவுகளைக் கண்டு மிரண்டு போய் ஒட்டு மொத்தமாக அத்தனை தலைவர்களும் உங்கள் பாணியைக் கைவிட்டு ஓடுகிற நேரத்தில் உங்கள் பாணியைப் பின்பற்ற ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்கு ஆறுதலாகத்தானே இருக்கும்?

ஆனால் தேர்தல் தோல்விகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. அண்ணா, காமராஜர், இந்திரா போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறார்கள். அப்படித் தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெற்றியின் பாதையில் வீறுநடை போட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மக்கள் மனங்களை ஏற்கனவே வென்றிருந்தார்கள் என்பதுதான். ஆனால் நீங்கள்?

ராஜிவ் காந்தியின் மரணம் ஒரு மிகப் பெரிய வெற்றியை உங்களுக்குப் பரிசாகத் தந்தது. நீங்கள் அதற்கு நன்றி செலுத்துவதற்கு ஆயிரம் வாய்ப்புகள் வந்தன. ஒரு பல்கலைக் கழகத்துக்கு அல்லது ஒரு மாவட்டத்திற்கு அல்லது ஒரு அரசாங்க கட்டிடத்திற்கு அவ்வளவு ஏன், குறைந்த பட்சம் ஒரு தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டியிருக்கலாம். ஆனால் கனவுகளோடு மரித்துப் போன அந்த இளைஞனின் கல்லறைக்குப் பூ வைப்பதற்குக் கூட நீங்கள் போகவில்லை.

நீங்கள் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெண்ணியே மக்கள் வாக்களித்தார்கள். நீங்கள் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் மறந்து போனீர்கள். சின்ன ரோஜாப்பூவிற்குக் கூட உங்கள் பெயரைச் சூடி மகிழ்ந்த நீங்கள் ஒரு திரைப்பட நகரம் உருவானபோது கூட அந்தப் பொன்மனச் செம்மலின் பெயரை ஒதுக்கித் தள்ளினீர்கள். நன்மை செய்யாதவர்களைக் கூட மன்னித்து விடுகிற நம் தமிழ் மக்கள் நன்றி மறந்தவர்களை தண்டித்து விடுகிறார்கள்.

அந்த அப்பாவித் தமிழ் மக்கள், அன்று நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் உங்கள் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் நீங்களோ மனங்களை விடப் பணத்தின் மீது நம்பிக்கை வைத்தீர்கள். அன்று பத்திரிகைகள் எல்லாம் உங்கள் மீது அன்பைப் பொழிந்தன. ஆனால் அவர்கள் மீது அலட்சியம் என்ற வெந்நீரை வீசித் துரத்தினீர்கள்.

அந்த ஆரம்ப நாட்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் உங்களைத் தங்கள் உடன் பிறவாச் சகோதரியாக வரித்திருந்தார்கள். ஆனால் நீங்களோ ஒரே ஒருவரை மட்டும் அங்கீகரித்து அழகு பார்த்தீர்கள்.

நீங்கள் காலில் விழுந்தவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்தீர்கள். மக்களோ நீங்கள் கை தூக்கி விடுவீர்கள் என்றெண்ணிக் காத்திருந்தார்கள். உங்களைத் தெய்வமாகச் சித்தரிக்கும் கட் அவுட்களைக் கண்டு பூரித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் விலைவாசி ஏற்றத்தால் கௌரவமான மக்களாக வாழவே தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் கல்யாணச் சாப்பாடு போடுவதாக எண்ணி வைத்த விருந்துகளைக் கூட அவர்கள் பிச்சைச் சோறு புசிப்பதாகவே எண்ணிப் புழுங்கினார்கள். ஏனெனில் அதில் அன்பு எனும் தேனை விட ஆடம்பரம் என்ற உப்பே தூக்கலாக இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது கூட நீங்கள் மகாபாரதக் கதைதான் சொன்னீர்கள். அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தை மறந்து போனீர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உட்காருவதற்கு உரிமையுள்ள சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் நாற்காலியில் அன்று ஒரு முறை உங்கள் தோழியை உட்கார்த்தி வைத்தீர்கள். இன்று மக்கள் உங்கள் நாற்காலியைப் பறித்து விட்டார்கள்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தங்களை ஆள்வதை மக்கள் ஒரு போதும் சகித்துக் கொண்டதில்லை. இந்திரா காந்தியின் ஆட்சியில் சஞ்சய் காந்தி, உங்களது ஆட்சியில் இன்னொரு சக்தி. ராஜிவ் மரணத்தால் உங்களைப் பதவியில் அமர்த்தி வைத்த மக்கள் எமர்ஜென்ஸி காலத்திய இந்திரா காந்தியைப் போல் நீங்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்ட போது, அவருக்கு கொடுத்த பரிசையே உங்களுக்கும் தந்து விட்டார்கள்.

தவறுகள் குற்றங்கள் அல்ல. ஆணவம் அகன்ற மனம் இருந்தால், குப்பைகளே உரமாக மாறுவதைப் போல், தவறுகளைப் பாடமாக ஆக்கிக் கொள்ள முடியும். அது இருக்கிறதா உங்களிடம்?

உங்களுக்கு இருந்த நற்பெயர் நாசமாவதற்கு காரணமாக இருந்த சக்திகளை இனியேனும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவற்றை அகற்றுவதன் மூலமே மீண்டும் நீங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். களை எடுத்தால்தான் பயிர் செழிக்கும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

1996 ம் ஆண்டு தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டிய சமயத்தில் ‘குமுதம்’ வார இதழில் தமிழன் என்ற பெயரில் (மாலன் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட தலையங்கம் இது. அது அப்படியே இன்றும் பொருந்துகிறது இல்லையா?

பதினெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் கொஞ்சமும் திருந்தாதவர்தான் இவர். முன்பு மக்கள் தண்டித்தார்கள். இப்போது சட்டம் தண்டித்திருக்கிறது. இவரைப் போன்ற தலைவரையும் இவர் வழிநடத்தும் கட்சியையும் நிரந்தரமாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆனால் இந்த மக்களைத்தான் புரிந்து கொள்ளவே முடியாதே. சாதாரண நமச்சலுக்கெல்லாம் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்து கொள்பவர்கள் ஆயிற்றே!


எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் இவர் அரசியலில் நுழைந்த கால கட்டத்தில் 1989-ல் நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் பகுதியில் எழுதிய கருத்து இதோ! 

‘’மற்ற அணித் தலைவர்களை விட (ஜானகியோ,மூப்பனரோ) ஜெயலலிதாதான் எதிர்கட்சித் தலைவாரகச் செயல்பட தகுதியானவர். சட்டப்பேரவையில் தனது எதிர்ப்பாற்றலைக் காண்பித்து மக்களைக் கவருவாரேயானால் அடுத்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் மமதையையும் அகம்பாவத்தையும் எந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார் என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.’’ 
 
எத்தனை தீர்க்க தரிசணம் பாருங்கள் எனக்கு.

திங்கள், 7 ஏப்ரல், 2014

ஆசையின்றி ஓர் கடிதம்



“……………”
நீங்கள் என் கணவர்தான். என்றாலும் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தபோது, உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் ரொம்பவும் தடுமாறிப்போனேன். ‘அன்புள்ளஎன்றோ, ‘மதிப்பிற்குரியஎன்றோ குறிப்பிடலாம் என்றால், அதில் எனக்கு துளிகூட விருப்பமில்லை. ஏனெனில், உங்களை அப்படிக் குறிப்பிடுவதாலேயே அந்த வார்த்தைகள் அர்த்தமிழந்து போகும். ஆதலால் வேறுவழியின்றி கடிதத்தை வெறுமனே தொடங்குகிறேன்.
 

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிற எனக்கு யாரோ, எங்கோ தூரத்திலிருந்து எழுதுவது போன்றுகடிதமா…!’ என்று உங்கள் புருவம் சுருங்குவது புரியாமல் இல்லை. நேரிலேயே சொலல்லாம்தான். ஆனால் நினைப்பதையெல்லாம் முழுமையாக நேரில் சொல்லிவிட முடியாது. எனவே என்னுடனேயே இருக்கும் உங்களுக்கு ஒரு மூன்றாம் மனுஷி போல் இந்தக் கடிதம்.

உங்களுடன் வாழ்ந்த இந்த பத்தாண்டுகளில் உங்களுக்கென்று கடிதம் எழுத நேர்ந்தது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்கும். எதற்காக இந்தக் கடிதம் என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்பு, நமது இந்தப் பத்தாண்டு காலத் தாம்பத்தியத்தில் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்ட சில தழும்புகளை உங்களுக்குத் தொட்டுக் காட்டினால்தான் மனசு ஆறும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோகாலையில் எங்கள் ஊரில் நம் திருமணம். மாலையில் உங்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி. சோபாவில் உங்களுக்கருகில் உங்களைப் போலவே ரோஜாப்பு மாலையுடன் நான்.

வரவேற்புக்கு வந்தவர்கள் உங்களருகே வரும்போதெல்லாம் முகம் முழுக்கச் சிரிப்பாக எழுந்து நின்று, அவர்களோடு கைகுலுக்கி, வீடியோவுக்கு போஸ் கொடுத்து, ‘சாப்பிடாமப் போயிடக்கூடாதுஎன்று கண்டிப்புடன் உபசரித்தபடி இருந்தீர்கள். ஆனால் தவறிப்போய்க்கூட என் பக்கம் நீங்கள் திரும்பவே இல்லை. நான் உங்களருகேதான் நின்றுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வுகூட உங்களுக்கிருந்ததாகத் தெரியவில்லை.

இதைக் கவனித்துவிட்ட உங்கள் நண்பர் விவேக், உங்களருகே ஓடிவந்து காதோடு காதாகஎன்னடா நீவர்றவங்ககிட்ட உன் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டாமா…? என்னமோ இன்னமும் கட்டைப் பிரம்மச்சாரி மாதிரி, நீட்டுறவன் கையையெல்லாம் நீ மட்டுமே குலுக்கிக்கிட்டிருக்கேஅவங்களையும் அறிமுகப்படுத்துடாஎன்று கோபப்பட்டார். அதற்கு என்ன பதில் சொன்னீர்கள், நினைவிருக்கா பிரபு?

ஆமாண்டாஅதி ஒண்ணுதான் குறைச்சல். என்னவோ எங்க அம்மா வார்த்தையை மீற முடியாமகண்ணை மூடிக்கிட்டுத் தாலி கட்டியாச்சு. அதுக்காகஇவதான் என் அழகு பொண்டாட்டினு காட்டி, வர்றவன் போறவன்கிட்டயெல்லாம் சந்தோஷம் கொண்டாடச் சொல்றியாக்கும்…’
இப்படி அடித்தொண்டையில் தணிந்த குரலில் கோபமும் ஆதங்கமுமாக, நண்பரின் காதோடு காதாகக் கரகரத்த உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் செவிப்பறையிலும் இதயத்திலும் சுரீர், சுரீர் என்று விழுந்து பதிந்தது. அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு மெள்ளத் திரும்பி ஓரக்கண்ணால் உங்களைப் பார்த்தேன்.

ஒரு வசீகரமான ஆண்மகன் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக நீங்கள் நின்றுகொண்டிருந்தீர்கள். சட்டென்று என்னை நானே பார்த்துக்கொண்டேன். ஒற்றை வரியில் சொல்வதானால், ஒரு ஆண் மகனை வசீகரிக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாத அவலட்சணமாக நான்.

உங்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். எனவே, உங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் எனக்குப் புரிந்தது. வலிக்கத்தொடங்கிய மனதை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

நம் ஒரே குழந்தை உஷா. அவளை என் கர்ப்பத்தில் அடை காக்கத் தொடங்கிய அந்தத் தருணம்கூட, உங்களைப் பொறுத்தவரை ஒரு விபத்து மாதிரிதான். என்னதான் நான் உங்களுக்கு பிடிக்காதவளாக இருந்தாலும் இயற்கையாகவே உடம்பின் பசி உங்களைச் சுட்டெரிக்கும் போதெல்லாம் என் தேகத்தை உதாசீனப்படுத்த முடியாமல் போய்விடும். உஷாவைச் சுமக்க நேர்ந்ததுகூட இதுபோன்றதொரு பலவீனமான தருணத்தில்தான் என்பதை நானும் அறிவேன். எந்திரத்தனத்தை என் மனசு உணர்ந்தாலும் என் உடம்பும் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில், அதற்கும் பசி உண்டே…!

உங்களுக்கு தூக்க நேரத்தில் நிசப்தம் முக்கியம். ஒரு சின்ன முனகல் சத்தம் கூட உங்களுக்கு சகிக்க முடியாத இம்சை. ஒரு நாள்நடுநிசியில் லேசாக சிணுங்க ஆரம்பித்த உஷா, கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் பெற்று பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள். என்னென்னவோ சமாதானம் செய்தும் ஓய்வதாயில்லை.

அப்போது உங்கள் அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், படாரென்று கதவைத் திறந்து கொண்டு ஆவேசமாக வெளிப்பட்டு… ‘சனியனே ஏன் இப்படி தூங்கக்கூட விடாம பேய் மாதிரி அலர்றே..? செத்துத்தொலை…’ என்று ஆத்திரத்தோடு கத்தியபடி, குழந்தையோடு சேர்த்துத் துணித்தூளியைத் கிறுகிறுவென்று முறுக்கி, வேகமாக வீசியடித்தீர்கள். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். மறுவிநாடியே அனிச்சையாகப் பாய்ந்து சென்று தூளியைப் பிடித்துக்கொண்டேன். நல்லவேளைசுவர் எட்டாத் தூரம். இல்லையெனில் சுவரில் மோதிஉஷாவின் கதை அன்றே முடிந்திருக்கும். இப்போழுது நினைத்தால்கூடப் பகீரென்கிறது

ஆனால் அப்போதுகூட உங்கள் மீது நான் ஆத்திரம் கொள்ளவில்லை. எனக்குள் ஒரு ரகசிய எதிர்பார்ப்புஉங்களின் ஆத்திரம் வடிந்த பிறகு, ‘அடடா இப்படி செய்துவிட்டோமேஎன்று உங்கள் கண்களில் வருத்தம் தொணிக்க, உஷாவைத் தூக்கி முத்தமிடுவீர்கள் என்று. ஊஹூம்உங்களிடமோ அழுத்தமான மௌனம்தான்.
நான் உங்களுக்கு பிடிக்காதவள்தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷிதானேஎனக்கென்றும் ஒரு மனசுஅதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும்தானேஅதைப்பற்றி எப்போதேனும் யோசித்திருப்பீர்களா பிரபு..? மாட்டீர்கள் பரவாயில்லை. பரவாயில்லைஎனக்குள் அடைகாத்து வைத்திருந்த சிலவற்றையாவது சொல்லிவிடுகிறேன்.

புல்லட்டில் உங்களை ஒட்டி உரசியபடி முடியெல்லாம் காற்றில் பறக்க சவாரி செய்யநீண்ட பஸ் பயணத்தில், உங்கள் மடியில் ரொம்பவும் சுவாதீனமாக படுத்துத் தூங்க… ‘இந்த ஷர்ட்தான் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கு, இப்படிச் சீவறதுதான் உங்க முகத்துக்கு நல்லாயிருக்குஎன்றெல்லாம் உங்களை விதவிதமாக அழுக படுத்திப் பார்க்கஇப்படி என்னவெல்லாமோ ஆசைகள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னுமொரு ஆபூர்வ ஆசை. முதுகுப் புறமாக உங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, காதருகே குனிந்துடேய்பிரபுப் பையா! என்னைத் தூக்கிக் கொண்டு இந்த வீட்டைச் சுற்றி ரெண்டு மூணு தடவைச் சுற்றி வாடா பார்க்கலாம்என்று கிசுகிசுப்பாகச் சொல்லி, அதன் விளைவாக உங்கள் முகமும் கண்களும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைப் பார்த்து ரசிக்க வேண்டுமென்று கொள்ளை ஆசை.

என்னைப் பார்த்ததுமே உங்கள் அழகான முகம் கோபத்தால் கோணல் மாணலாகி விடுவதைக் கண்டு என் அடிமனத்து ஆசைகள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அடிக்கடி என்னோடு என் மனசு முரண்டு பிடித்திருக்கிறது. ‘உங்களுக்குள் மனமொத்த வாழ்க்கை இல்லை. பிறகு இதுதான் வாழ்க்கை என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய்? தொலைத்து தலை முழுகிவிட்டு, நிம்மதியாக ரிந்து தொலையேன்…’

என்னைப் பொறுத்தவரை, பணம் ஒரு பிரச்னை இல்லை. நானும் உங்களைப் போலவே படித்து, உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறவள். என் வழியே போவதற்கு யார் தயவும் தேவையில்லை. ஆனாலும் உங்களை விட்டு விலக மனமில்லை. இத்தனை ஏமாற்றங்களுக்குப் பிறகும் நான் உங்களை மனமார நேசித்தேன். இந்த நேசிப்புக்குத்தான் காரணம் என்ன?

உங்களின் மனநேர்மை. நியாயத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய விரும்பாத மன உறுதி. அதனால் எத்தனை இழப்புகள், எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம். உண்மையைப் போல் அழகானதும் கம்பீரமானதும் உலகில் வேறொன்றும் இல்லையேநான் உண்மையை நேசிப்பவள். அதனால் உங்களையும் நேசித்தேன்.

அலுவலக வாழ்க்கையில் உங்கள் நேர்மையாலும் கண்டிப்பாலும் பாதிக்கப்படவர்கள் ஒன்றுகூடி எதற்காகவோ நீங்கள் லஞ்சம் கேட்டதாக ஜோடனை செய்து, ஆட்களை நியமித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் உங்களைக் கைது செய்ய வைத்துவிட்டனர். அந்த நேரத்தில் அவமானத்தால் எப்படியெல்லாம் நீங்கள் கூனிக் குறுகிப் போயிருப்பீர்கள் என்று நினைத்து நினைத்து குமைந்து போனேன்.

இருந்தாலும் உங்கள் நேர்மையில் எந்த மாசும் படியவில்லை என்பதை நிரூபிக்க முழுமூச்சில் ஈடுபட ஆரம்பித்தேன். ‘அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்விட்டீர்கள். உங்கள் மிடுக்கான பேச்சும் கம்பீரப் பார்வையும் காணாமல் போய்விட்டன. அதைப் பார்ம்மு என் மனம் கசிந்தது.

இந்த நிலையில், லீவு போட்டுவிட்டு வக்கீல் வீடுகோர்ட் என்று நேரம் காலம் பார்க்காமல் அலைய ஆரம்பித்தேன். நல்லவேளைஅந்த வக்கீல் பாரிஉடம்பெல்லாம் மூளை அவருக்கு. சமயத்தில் கைகொடுத்தார். நிஜத்தை நிரூபிக்க நான் கொடுத்த விபரங்கள்விளக்கிய வழிமுறைகளைக் கண்டு அசந்து போனார். வார்த்தைக்கு வார்த்தை என்னைப் புகழ்ந்தார். என்னைப் பார்த்தாலே அவர் கண்கள் ஜொலிக்க ஆரம்பிக்கும். முகம் மலர்ந்து போகும். வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கும்.

என் அவலட்சண தோற்றம் அவர் கண்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றியது. ‘உங்களை முழுசா எப்படி பாராட்டறதுன்னு தெரியலேவேறொரு பெண்ணா இருந்தா, இன்னேரம் மனசொடிஞ்சு மூலையிலே முடங்கிடுவாங்க. நீங்களோஅடேயப்பா!’ என்று ஒரு நாள் அந்த பாரி சிலிர்த்துக்கொண்டதை நீங்களும் அருகிலிருந்துதான் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

அவரோடு மணிக்கணக்கில் நான் வெளியே செல்லவும் பேசவும் வேண்டியிருந்தது. அந்தச் சந்தரப்பதில்தான் என் கைப்பைக்குள் எனக்காக நீங்கள் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை (எனக்காக நீங்கள் எழுதிய முதல் கடிதம் கூட இதுதான்!) படிக்க நேர்ந்தது.

என் உயிரேசந்திரிகாஎன்னை விட்டு நீ விலகிவிடுவாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. நீயின்றி ஒரு விநாடிகூட என்னால் இருக்க முடியாது. இது சத்தியம். என்றென்றும் மாறாத அன்புடன்உன் பிரபு…’

இதைப் படித்து முடித்ததும் எனக்குள் ஏதோ ஒன்று சடசடவென்று உடைந்து நொறுங்குவது போலிருந்தது. காலமெல்லாம் என்மீது வெறுப்பை மட்டுமே காட்டினீர்கள். அதற்கு என்ன காரணம் என்று என்னிடமே வெளிப்படையாகவே சொன்னீர்கள். மறைக்கவில்லை. நடிக்கவில்லை. நீங்கள் நீங்களாகவே நடந்துகொண்டீர்கள். அந்த நிஜத்தின் ம்பஃபீரமே இதுநாள் வரை உங்களோடு என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஆனால் ஒரு மூன்று வரிக் கடிதத்தில் என் நம்பிக்கையைப் பொய் ஆக்கிவிட்டீர்கள். அடுக்கடுக்காக எத்தனை பொய்கள்! உங்களை இப்படி எழுதவைத்தது எதுவென்று உடனே எனக்குத் தெரிந்து விட்டது. அந்த வக்கீல் பையன்அவர் என்னிடம் காட்டிய அன்பின் நெருக்கம். ‘ஒருவேளை நான் அவரோடு நான் போய்விட்டால்நம் கதி..? என்ற பயம்

ஆக உங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த அளவுக்குக் கீழிறங்கவும் நீங்கள் தயார் என்பதன் நிரூபனம்தான் அந்தக் கடிதம். இதுவரை என்னிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டிருந்தாலும் என் மனசுக்குள் ஜம்மென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தீர்கள். இனி, அந்தச் சிம்மாசனம் இருக்கும். ஆனால் அதில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். ஸாரி மிஸ்டர் பிரபு! - சந்திரிகா.
கதை - உத்தமசோழன்.