வியாழன், 1 மே, 2014

பாகுபாடட்ற்ற ஒரு சர்வதேச விழா!


மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொன்னாள். உலகம் எங்குமுள்ள பாட்டாளி மக்கள் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தினம் 12 மணி நேர வேலையை 8 மணியாகக் குறைக்கத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றது மே முதல் தேதியன்றுதான்.

ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலக உழைப்புக் கொடுக்கும் நாம் அதன் சகிப்புத்தன்மையை மாதக் கடைசியில் வரும் சம்பளத்திற்காக அதை கடமையாக கருதுகிறோம். ஆனால் 1880-களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 18-மணி நேரம் உழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அடிப்படை வசதிவாய்ப்புகள், அடிப்படை கூலி நிர்ணயங்கள், விடுமுறைகள் என அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. அவன் அடிமையாக்கப்பட்டிருந்தான். அவனுடைய உழைப்புச் சுரண்டலில் முதலாளித்துவம் பெருத்துக் கொண்டிருந்தது.

அன்றைய காலக்கட்டங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மார்க்சிய/ கம்யூனிஸ தோழர்கள் உழைக்கும் மக்களை ஒன்றிணைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக எழுப்பிய போராட்டங்கள் உலகம் முழுவதும் பரவியது. 

தோழர் கார்ல் மார்க்சின் 'மூலதனம்' என்னும் உலகப் புகழ் பெற்ற நூல் 1867 - ஆம் ஆண்டு வெளியானது. இது பொருளாதாரச் சித்தாந்தம் குறித்த நூலாகும். இந்த நூலில், எட்டு மணி நேர உழைப்பைக் கோரும் இயக்கத்தைப் பற்றி "வேலை நாள் குறித்து' என்னும் தலைப்பில் மார்க்ஸ் எழுதியுள்ளார்.

அதை பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகத் தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்டது. தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றனர். போராட்டம் தீவிரம் அடைந்தது.

ரஷ்யாவில் தோழர் லெனின், 'உழைக்கும் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' என்று கலகக்குரல் எழுப்பினார். போராடிய தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என்று அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. பல அடக்குமுறைகள் திணிக்கப்பட்டன. இருப்பினும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ஒரு நாளுக்கு எட்டு மணிநேர உழைப்பு என்னும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் அனுபவிக்கும் சலுகைகளுக்கு பின் ஒரு வரலாறு இருக்கிறது. அதில் உயிரைக் கொடுத்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்த தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நன்றிக்கடன் நமக்கிருக்கிறது.
1837-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன், 14 மணி நேரமாக இருந்த வேலைத் திட்டத்தை மாற்றி, அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்வோர் 10 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 'இந்தப் பத்து மணி நேரம் கூட அதிகம்; எட்டு மணி நேர வேலையே நிர்ணயிக்க வேண்டும்' என்று தொழி லாளர்கள் போராட்டம் தொடங்கினர்.

இதனால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்க முதலாளிகள் முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் ஆறு தொழிலாளிகள் மாண்டனர். ஏராளமான பேர் காயம் அடைந்தனர். இதைக் கண்டிக்க 'ஹேய் மார்க்கெட்' என்ற இடத்தில் 30,000 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினர் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது. இப் போராட்டத்தில் கைதான பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

1888-ல் அமெரிக்காவில் கூடிய தொழில் கூட்டு மகாநாடு, 8 மணி நேர வேலைத் திட்டத்தை வற்புறுத்தியது. இப்போராட்டங்கள், மே மாதம் நடைபெற்றதால் இவை 'மே தினப் போராட்டம்' என்று பிரசித்தி பெற்றன. எவ்வளவோ இன்னல்களுக்குப் பின் இப்போராட்டம் வெற்றியடைந்தது.

1904-ல் ஆம்ஸ்டர்டாமில் கூடிய தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மே 1-ம் தேதியன்றும் இவ்விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளை ஸ்தாபிக்கும் நாள்தான் மே தினம். இவ்விழா எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. இது சாதி, சமயம், மொழி, நாடு, அரசியல் என்ற பாகுபாடு அற்ற ஒரு சர்வதேச விழா!
  
அனைத்து உழைக்கும் வர்கத்தினருக்கும் 'மே' தின வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

A good refreshment of the forgotten history - Bhaskar.V

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்கர்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!