செவ்வாய், 25 ஜூன், 2013

அண்ணிமார் கதை - எனக்குப் பிடித்த கவிதை


அண்ணிகள் என்றாலே
பிரியம் குழைந்த வெட்கமும்
வெட்கம் குழைத்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு!

துவைப்பதற்கு
எடுக்குப்போது
நம் சட்டைப் பையில் இருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
சிகரெட்டையும்
நம்மிடமே
திருப்பித் தந்து
நாணமுறச் செய்கிறார்கள்!

நம் காதல் குறித்தும்
அரியர்ஸ் குறித்தும்
அடிக்கடி
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்

நண்பர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
வீடு திரும்புகையில்
ஒட்டுமொத்தக் குடும்பமும்
ஒன்றாக எதிர்க்க
அண்ணிகள் மட்டும்
ஆதூரமாய்ப் பேசி
அமுது படைக்கிறார்கள்!

தாயைப் போலவே
நம் தவறுகளை
மென்மையாய்க் கண்டிக்கும்
அண்ணிகள்
‘தாயில்லாதவனின்
மணிபர்ஸில்
புகைப்படமாய்
இடம் பிடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு கோபத்தில்
அண்ணனுடன்
தனிக் குடித்தனம்
போய்விட்ட பிறகு
ஏனோ நம்மை
ஒரு பகைவனைப் போல்
பார்க்கத் தொடங்குகிறார்கள்!

அ. நிலாதரன், ஆ.வி.யில்

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

முடிவில் இப்படி சொல்லிட்டீங்க... (உண்மை தான் - சில பேருக்கு)

நேற்றோ அதற்கு முன்போ "வானத்தைப் போல" படம் பார்த்தீர்களோ...?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருக தனபாலன் அவர்களே! எனக்கு இந்த அனுபவம் வாய்க்கவில்லை, வீட்டுக்கு நானே பெரியவன் என்பதால்....

தொலைக்காட்சியில் திரைபடங்களே பார்ப்பதில்லை. எப்போதாவது சில செய்திச் சேனல்களை பார்ப்பதோடு சரி.

ஜோதிஜி சொன்னது… [Reply]

ரொம்ப நாளைக்குப் பிறகு ரசித்த கவி.

நல்லாயிருக்கு.

saidaiazeez.blogspot.in சொன்னது… [Reply]

அண்ணியை கண்முன் காண்பித்த உங்கள் கவிதைக்காக, வாழ்த்துகிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கவிதை வாசிப்பே குறைந்து போய்விட்டபிறகு இதுபோன்ற நல்ல கவிதைகள் கண்ணில் படத்தான் செய்கின்றன. வருகைக்குமிக்க நன்றி ஜோதிஜி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் அஜீஸ் அவர்களே! அந்த மாதிரி அண்ணி நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏக்கம் வந்துவிடுகிறது.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!