வியாழன், 25 டிசம்பர், 2014

அப்பா வேணாம்ப்பா.......




சினிமாவில் எத்தனையோ பரிதாப கதையை பார்த்து இருப்பீர்கள் ஆனால் சமூக நல சிந்தனையோடு வெங்கட்ரமணன் எடுத்த அப்பா வேணாம்பா என்ற படத்தின் பரிதாப கதையைபற்றி கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்

கொஞ்சம் கேளுங்களேன்...
சினிமா என்பது மகத்தான மீடியம் இதன் மூலம் வலுவான கருத்து சொல்லமுடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் பார்த்த பாங்க் வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு சென்றவர்தான் வெங்கடரமணன்.

பத்து பனிரெண்டு ஆண்டு காலம் போராடிய போதும் ஜெயிக்க முடியவில்லை, ஜெயிக்க முடியவில்லை என்பதைவிட ஜெயிக்க விடவில்லை என்பதே நிஜம்.

இவர்கள் என்ன வாய்ப்பு கொடுப்பது நாமே சினிமா எடுப்போம் என்று களத்தில் இறங்கினார். கையில் இருந்தது மூன்று லட்சமும் ஒரு செவன் டி கேமிராவும்தான். இந்த பணத்தில் நாடகம் கூட போடமுடியாது என்றாலும் துணிந்து சினிமா எடுப்பது என்று முடிவு செய்து எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா...

தெருவுக்கு ஒரு குடிகாரர்கள் இருந்தது போய் இப்போது வீட்டுக்கு ஒரு குடிகாரர் இருக்கும் வேதனையான கால கட்டமிது. ஏழைத்தொழிலாளர் முதல் மாணவர் வரை டாஸ்மாக்கிற்கு சென்று காசையும் உடலையும் கரைக்கும் மோசமான சூழல் இது.

குடியால் பல குடும்பங்கள் கண் எதிரே மண்ணாகி கொண்டிருப்பதை பார்த்த வேதனையை, அவர்களுடன் பேசிப்பழகிய அனுபவத்தை விளக்கும் வகையில் எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா படம்.

தியேட்டர் வாடகை தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு டான்ஸ் இல்லை கவர்ச்சி இல்லை மாசலா இல்லை யாருய்யா பார்க்க வருவாங்க என்று சொல்லிவைத்தார் போல எல்லா தியேட்டரிலுமே இவரை விரட்டிவிட்டனர்.

குடியின் கொடுமையை விளக்கும் படம். நியாயமாக பார்த்தால் வரிவிலக்கு கிடைத்திருக்க வேண்டும். பாதிடிக்கெட் கட்டணத்தில் மக்கள் படம் பார்த்து திருந்தி விடப் போகிறார்களே என்று நினைத்தார்களோ என்னவோ வரிவிலக்கு தரவில்லை.

சரி, தலைப்பு தமிழில் வைத்திருக்கிராரே அதற்கு ஒரு தொகை உண்டா என்று கேட்டால் அதைப் பற்றியும் பேச்சு இல்லை.

எதுவும் வேண்டாம் நான் எடுத்த படத்தை மக்கள் பார்த்து தீர்ப்பு சொல்லட்டும் என்று முடிவு செய்தால் தியேட்டர் கிடைக்கவில்லை.

கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமான சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரில் பகல் 11 மணிக்காட்சியாக கடந்த நான்கு நாட்களாக ஒடிக் கொண்டு இருக்கிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாட்கள் ஒடலாம்.

படம் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் வாசலில் நின்று நன்றி சொல்லும் படத்தின் இயக்குனர் நடிகர் வெங்கடரமணனை கண்ணில் நீர்தழும்ப கட்டிப்பிடித்து பாராட்டுகின்றனர். ஆனால் படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கைதான் மிகவும் குறைவாக இருக்கிறது.

நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதன் காரணமாக குடும்பத்தை நட்பை உறவை இழந்து ஈமொய்க்க தெருவிலும் சாக்கடையிலும் கிடக்கும் நிலைக்கு செல்கிறார். பின்னர் திருந்தி திரும்ப பழையநிலைக்கு எப்படி வருகிறார் என்பதுதான் கதை.

குடிசைத்தொழில் அடிப்படையில் படம் எடுத்திருந்தாலும் படத்தின் தரத்தில் எந்த குறையும் இல்லை செலவை குறைப்பதற்காக இவரே நடித்து பாடல் இயற்றி பாட்டுப்பாடி இருக்கிறார். ஆனால் இவரைத்தவிர வேறுயாரும் இப்படி நடித்திருப்பார்களா என்று நினைக்குமளவிற்கு நடித்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

கிட்டதட்ட நான்கு லட்ச ரூபாய்க்குள் படத்தை எடுத்து முடித்தாலும் அதன்பிறகு படமாக வெளியில் கொண்டுவருவதற்குள் பத்து லட்சமாகிவிட்டது. கடன்பட்டும் கஷ்டப்பட்டும் படத்தை தயார் செய்தாலும் எந்த தியேட்டரிலும் இந்த படத்தை ஓட்டுவதற்கு முன்வரவில்லை.

இந்த படத்தை மது குடிப்பவர்கள் மற்றும் மது குடிக்காதவர்கள் என அனைவருமே பார்க்க வேண்டும்.

எப்போதாவது குடிக்கலாம் விழாக்களில் குடிக்கலாம் சந்தோஷத்திற்கு குடிக்கலாம் என்று குடிக்காதவர்களை சுற்றிசுற்றி வந்து கும்மியடித்து குடிக்கவைக்க நடக்கும் முயற்சியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

குடி என்பது ஒரு நோயே அதில் இருந்து விடுபடுவது மிகவும் எளிது எப்படி என்பதை தெரிந்து கொள்ள குடிப்பழக்கம் உள்ளவர்கள் நண்பர்களுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

பத்து லட்ச ரூபாய் செலவில் ஒரு சினிமாவை சுவராசியம் குறையாமல் எடுக்கமுடியுமா என்ற கேள்வியை மனதில் தேக்கி வைத்துக்கொண்டுள்ள கலைஞர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

சம்பாதிக்க துவங்கிவிட்ட மகனிடம் குடியின் பக்கம் போய்விடாதே என்று எப்படிச் சொல்வது என தயங்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்தப் படத்தை உங்கள் ஊர் தியேட்டரில் ஒட்டி உங்கள் ஊருக்கு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறீர்களா ஒரு ஃபோன் போடுங்கள் வெங்கடரமணன் படப்பெட்டியுடன் வந்துவிடுவார்.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் என்று கூட சொல்ல மாட்டேன் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு கூட இந்த படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு நேரிலோ அல்லது போனிலோ ஒரு வார்த்தை பாராட்டுங்கள் காரணம் வெங்கடரமணன் போன்ற போராளிக் கலைஞர்கள் நாட்டுக்கும் நமக்கு தேவை.அவரது போன் எண்: 9444388107.
நன்றி; தினமலர்  

8 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

என்னத்தைச் செல்றது? சினிமாவை நம்பி வேலையை விட்ட வெங்கடரமணனைப் பத்தி என்னத்தைச் சொல்றது? இந்த ஒரு சினிமாவால குடிகாரன்களெல்லாம் திருந்தி விடப் போகிறார்களா? சினிமா உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளே வந்து அல்லாடும் இவர் குடும்பம் என்ன ஆகும்? இவர் என்ன ஆவார்?

பெயரில்லா சொன்னது… [Reply]

திரு முரளி அவர்களே, நீங்க உங்க குடும்பத்தை மட்டும் யோசிங்க. அவர் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார். நீங்க ஏன் டிஸ்‌கரேஜ் செய்றீங்க. உங்க புள்ள குட்டிகளுக்கு சொத்து சேர்த்து வையுங்க. அட்வைஸ் பண்றத நிறுத்துங்க. இந்த சமுதாயம் குடிகார சமுதாயமா இருக்க நீஙகளும் ஒரு காரணம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி.கந்தசாமி அய்யா. சினிமா உலகம் குறித்த தங்கள் கருத்து சரியானதே. ஆனால் எல்லோருமே இப்படி சுயநலமாய் செயல்பட்டால் எப்படி? அவரின் மனதில் இந்த சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டிருக்கிறதே அதைப் பாராட்ட வேண்டும். நம்மைப் போன்றவர்களைப் போலல்லாமல் செயலில் இறங்கி செயல்படுவதை உதாசினப்படுத்தாமல் ஊக்கம் கொடுக்க வேண்டும்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அனானி! மிக நல்ல கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். வருகைக்கு மிக்க நன்றி.

venu's pathivukal சொன்னது… [Reply]

வெங்கட்ரமணன் இந்தியன் வங்கியில் இருந்து வீ ஆர் எஸ் எடுத்துச் சென்றிருப்பவர். எனக்கு பரிச்சயமில்லை. பணிஓய்வு நிகழ்வில் அவரை அறிமுகம் செய்வித்தனர்.

அண்மையில் வங்கியில் இருந்து பணி நிறைவு பெற்றுச் சென்ற அன்பர் ஒருவர் எனக்கு மெனக்கெட்டு போன் போட்டு இந்தப் படத்தை உடனே போய்ப் பார்க்கச் சொன்னபோது எனக்கு வெளியூர் மற்றும் உள்ளூர் சொந்த மற்றும் அலுவல் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது.இருப்பினும் இந்த வாரம் எப்படியாவது அவரோடு தொடர்பு கொண்டு படத்தைப் பார்க்க வழி தேடுவேன். தொடர்பு எண்ணோடு இருக்கும் கட்டுரை நெகிழ்ச்சியுற வைக்கிறது.

பாஸ் மார்க் வாங்க முடியாத குழந்தைகளை அரவணைத்துக் கல்வி தரவேண்டிய அரசு, டாஸ்மாக் நடத்தி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைக் கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறது. பள்ளி ஆண்டுவிழாக்களில் சிறுவர்கள் தண்ணியடித்துவிட்டு வந்து கலந்து கொள்வதான செய்திகளைப் படித்து நொந்து போயிருக்கிறோம் நாம்.

20-35 வயதினரின் துடிப்புமிக்க இளமைக் காலத்தின் அத்தனை வேட்கையையும் மது குடித்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான தீ எரிய வேண்டிய உள்ளங்களில் திராவகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமூகக் குற்றங்களை ஆல்கஹால் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறது. தாராளமய பொருளாதாரத்தின் மாயா ஜால ஏமாற்றுத் தனத்தின் தன்மை புரியாமல் மயங்கும் பெற்றோர், வேலை கிடைக்காத அல்லது பொங்கி வழியும் ஊதியத்தின் போதையில் தடுமாறுகிற இளைஞர்களில் ஒரு சதவீதம் எந்தச் சிறு சறுக்கலையும் சமாளிக்க மாட்டாது எந்தக் கொடுஞ்செயலுக்கும் தயாராகிறது. அந்த வேகத்திற்கு எரிபொருளாகிறது சாராயம்.

சிதம்பரம் அருகே உள்ள கிராமப் புறக் கிளை ஊழியர் ஒருவர் வாழ்க்கையில் தொண்ணூறுகளில் நிகழ்ந்த கொடூரம் என் வாழ்நாள் மறக்க முடியாதது:

மிக அநியாயக் குடிகாரரான அவரைப் போராடி இரண்டு மாதங்கள் குடியை நிறுத்த வைத்தார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனைவி. பொங்கல் அன்று விடியற்காலையிலேயே எழுந்து சர்க்கரைப் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்தாள் அந்தப் பேதை மகள். வந்து நின்றார்கள் கிராதக நண்பர்கள் சிலர், அவனைத் தேடி. ஏதோ அவசர வேலைக்காக அவனை அழைத்துச் செல்வதுபோல் வந்து நின்ற அவர்களோடு போன கணவன் நண்பகலைக் கடந்தும் வீடு திரும்பவில்லை.

குழந்தைகளை மடியில் பட்டினியோடு கிடத்திக் கொண்டு காத்திருந்தாள் பத்தினி. பொங்கல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தோடு பெற்றோர் ஊருக்கு திருவிழா கொண்டாட்டத்திற்குப் போக நினைத்த பயண மூட்டைகளின் முடிச்சவிழ்ந்து கிடந்தது.

படுபாவிகள் அவனை முட்ட முட்டக் குடிக்கவைத்து வாகனத்தில் கொண்டு வந்து வாசலில் இறக்கிப் போட்டுவிட்டுப் போனபோது பிற்பகல் இரண்டு மணி. ஏறமுடியாமல் மாடிப் படிக்கட்டுகளில் ஏறி வீடு நுழைந்த அவனை, குடிக்க மாட்டேன்னு நீ செஞ்ச சத்தியம் என்னாச்சு என்று பதறினாள் அவள்.

இனி உன்னோடு வாழ்க்கை என்ன வேண்டியிருக்கு என்று ஆற்றாமையின் ஒரு கட்டத்தில் ஓடிப்போய் மண்ணெண்ணெய் டின்னை எடுத்துக் கொண்டு திரும்பிய அவள், அதை ஊற்றித் தீப் பற்றிக் கொண்டதையும், போதையில் அவளைக் காப்பாற்ற நினைத்தானோ, தடுக்க முடியாமல் தோற்றானோ, தானும் குற்ற உணர்ச்சியில் கலந்தானோ என்று புரிபடாது அவனும் சேர்ந்து கொண்டதையும்

நாம் மேலே பார்த்த
சாராயம், மது, ஆல்கஹால்,
என்ன பேருள்ள கொடுமையோ

எரித்துக் கொண்டிருப்பதை திடுக்கிட்டுப் பார்த்துக் கதறிய செல்லக் குழந்தைகளின் அலறல் கேள்விப்பட்ட எங்களையே உலுக்கி இருக்கிறதே...அரையும் குறையுமாய் எரிந்து கொண்டிருக்கையில் அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

இப்படி அவசரப் பட்டுவிட்டாளே என்று அந்தப் பெண்ணையும், படுபாவி என்ன குடி வேண்டியிருக்கு என்று அவனையும் மட்டும் கால காலமாக தினத் தந்தியில் படித்து சபித்துக் கொண்டிருக்கும் நாம், எப்போது சமூக விஷயமாக இந்த விஷயங்களைப் பார்க்கக் கற்கப் போகிறோம்?

தமிழ் இந்துவில் சஞ்சீவிகுமார் ஓர் அருமையான தொடராக எழுதி மக்கள் இதயங்களைத் தொட முயன்றார். மேலும் பல்லாயிரம் மைல் தொலைவு பயணம் அது!

நன்றி நண்பா

எஸ் வி வேணுகோபாலன்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

20-35 வயதினரின் துடிப்புமிக்க இளமைக் காலத்தின் அத்தனை வேட்கையையும் மது குடித்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான தீ எரிய வேண்டிய உள்ளங்களில் திராவகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமூகக் குற்றங்களை ஆல்கஹால் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறது. தாராளமய பொருளாதாரத்தின் மாயா ஜால ஏமாற்றுத் தனத்தின் தன்மை புரியாமல் மயங்கும் பெற்றோர், வேலை கிடைக்காத அல்லது பொங்கி வழியும் ஊதியத்தின் போதையில் தடுமாறுகிற இளைஞர்களில் ஒரு சதவீதம் எந்தச் சிறு சறுக்கலையும் சமாளிக்க மாட்டாது எந்தக் கொடுஞ்செயலுக்கும் தயாராகிறது. அந்த வேகத்திற்கு எரிபொருளாகிறது சாராயம்.

மிக நல்ல கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பரே. வரும் 2015 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதும் 'குடி' பிரதானமாக இருக்கும். அந்த அருமையான திரைப்படத்தை எங்கு போய்ப் பார்ப்பது என்ற கேள்வி துளைத்தெடுப்பது நமது துரதிஷ்டமே. தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துரக்கும் மிக்க நன்றி எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது… [Reply]

தற்போதுதான் தங்களின் இப்பதிவைப் படிக்கும் வாய்ப்புகிடைத்தது. படித்து முடிந்ததும் மனம் கனத்தது. அனைத்தும் வியாபாரமாகிவிட்ட சூழலில் இவ்வுலகில் நல்லதொரு கருத்துக்கு மதிப்பில்லாமல் போவதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இவரது முயற்சி வீண்போகாது என்று நம்புவோம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!