புதன், 18 ஜூன், 2014

கலிங்க நாடும் கலிங்க நகரும்

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாகிறது இந்த ஒடிஸாவிற்கு வந்து. ஒரிஸா ஒடிஸா ஆவதற்கு முன்பே இங்கே வந்தாகிவிட்டது. ஆனாலும் ஒடிஸாவை முழுதாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. இங்கு என்னோடு பணி புரிபவர்கள் எல்லாருமே இந்த மாநிலத்துக்காரர்கள் என்பதால் என்னோடு ஊர் சுற்ற யாரையும் துணைக்கழைக்க முடிவதில்லை.

அதுவும் தவிர நான் 2006-ல் முதன் முதலாய் ஒரிஸாவிற்கு பணிக்கென வந்தபோது என்னை அனுப்பிய இடம் காடும் காடுசார்ந்த பகுதியுமான கலிங்கநகர் தான். ஒரு காலத்தில் கலிங்கநாடு என்றழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியாதலால் இதற்கு இந்தப்பெயர் வந்திருக்கக்கூடும்! பெயரில்தான் நகர் இருந்தது. உண்மையில் இங்கே அப்போது ஒரு சிறிய சிறிய குக்கிராமங்களும், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்விடங்களும்தான்.

 
நாட்டின் மிகப்பிரபலமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் குரோமைட் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்த பகுதிதான் நான் பணிபுரிய வந்த இடம். கிட்டத்தட்ட 60 கி.மீ. தெலைவில் ஒரு சின்ன இரயில் நிலையம். அங்கிருந்து இந்த 60 கி.மீ. பயணிக்க கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் செய்ய வேண்டிய மோசமான சாலை வசதி எனஇந்த சூழ்நிலைகளைப் பார்த்தாலே வேலையே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிப்போவார்கள்.

டாடா ஸ்டீலின் சுரங்கம் மட்டுமின்றி ஒடிஸா அரசின் ஒடிஸா மைன்ஸ் கார்ப்போரேஷன் எனப்படும் OMC, ஜிண்டால் ஸ்டீல்ஸ் உட்பட மற்ற சில நிறுவனங்களின் சுரங்கங்களும் இந்தப் பகுதியில் அடக்கம். கிட்டத்தட்ட 13 சுரங்கங்கள் இங்கு உண்டு. தினமும் வெட்டியெடுக்கப்படும் குரோமைட் தாதுவை பக்கத்திலுள்ள பாரதீப் துறைமுகத்துக்கும், அதனதன் தொழிற்சாலைகளுக்கும்  கொண்டு செல்லவதற்கு இருக்கும் இந்த ஒரே ஒரு மோசமான சாலையில் ஆயிரக்கணக்கான லாரிகள் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

தப்பித்தவறி இதில் ஏதாவது ஒரு லாரி பழுதுபட்டு நடு வழியில் நின்று விட்டால் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் என்றால் நிலைமை எப்படி என்பது புரியும் அல்லவா? அப்படி ஒரு சமயம் ஒரு இரவு முழுவதும் சாலையிலேயே காத்திருந்த சம்பவங்களும் உண்டு.


இந்த சுரங்கம் அமைந்திருக்கும் பகுதிகள் அனைத்தும் பொதுவாக சுகிந்தா என்றழைக்கப்படுகிறது. சுகிந்தா என்ற பெயரில் ஒரு பெரிய ஊரும் அருகில் உள்ளது. அங்கு முன்பொரு காலத்தில் ஒரு சிற்றரசர் இந்தப்பகுதியை ஆண்டு வந்திருக்கிறார். அதற்கு சாட்சியாக ஒரு பழைய காலத்து அரண்மணை இடிபாடுகளுடன் காணப்படுகிறது. அவரின் வாரிகள் இன்றும் இங்கு மதிக்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நாற்றாண்டின் தொடக்கத்தில் இங்கே இரும்புத்தாதும், குரோமைட் தாதும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் இந்த சுகிந்தா ராஜாவிடம் அப்போதைய டாடா ஸ்டீல் நிர்வாகமும், அரசும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்புதான் இங்கே தாதுக்களை வெட்டியெடுக்க ஆரம்பித்தார்கள். அப்போதைய ஒரு டன் தாதுவின் விலை என்ன தெரியுமா வெறும் 15 ரூபாய் !

இயற்கை எழில் கொஞ்சும் இந்தப்பூமி உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் மாசடைந்த பத்து இடங்களுள் ஒன்றாக இருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

பண்டைக் காலத்தில் கலிங்கநாடு என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பில் ஒரு பகுதிதான் இன்றைய ஒடிஸா. வரலாற்றுச் சம்பவங்களுக்கும் இந்த மாநிலம் சளைத்ததல்ல. தென்னிந்தியாவிலிருந்து சோழ அரசர்கள் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடிய நிகழ்வுகளும், அசோகச் சக்ரவர்த்தி இந்த நாட்டின் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு ரத்த ஆறு ஓடுவதைப் பார்த்து மனம் வருந்தி இனி எந்த நாட்டின் மீதும் படையெடுப்பதில்லை என்று முடிவு செய்து புத்த மத்த்தைப் பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டு மனம் மாறியதும் இந்தப் பூமியில்தான்.

உலகப் புகழ் மிக்க பூரி ஜகன்நாதர் ஆலயமும், உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படக்கூடிய சிறப்பு பெற்ற கொனார்க் சூரியனார்க் கோவிலும், பழம் பெருமை வாய்ந்த லிங்கராஜ் ஆலயமும் இந்த ஒடிஸாவில் தான் இருக்கின்றன. தசரா, துர்கா பூஜை, காளி பூஜை போன்றவை இங்கு விஷேஷமாக கொண்ட்டாடப்படும் பண்டிகைகள்.

இது தவிர்த்து நிலக்கரி, குரோமைட், இரும்புத்தாது, பாக்ஸைட் போன்ற தாது வளங்கள் நிரம்பிய பூமி இது. புகழ் பெற்ற ரூர்கேலா இரும்பு உருக்குத் தொழிற்சாலையும், நால்கோ என்றழைக்கப்படும் நேஷனல் அலுமினியம் நிறுவனமும், ஜிண்டால் குழும நிறுவனங்களும் இங்கே உண்டு.

உலகிலேயே மிக நீளமான ஹிராகுட் அணையும் இந்த ஒரிஸாவில்தான் இருக்கிறது. மகாநதி இங்கேதான் பாய்ந்தோடுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உப்பு நீர் ஏரி (சிலிகா) இங்குதான் இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்த மண்ணில்தான் பிறந்தார். ஒடிஸாவின் தென்பகுதி ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் இருக்கு….
 

4 கருத்துகள்:

Pandiaraj Jebarathinam சொன்னது… [Reply]

தகவல் அருமை..

ஜோதிஜி சொன்னது… [Reply]

ரொம்ப அற்புதமாக வந்துருக்கு. இப்படியே (இந்த நடையில்) கொண்டு போங்க.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி பாண்டியன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பாராட்டிற்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!