ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்தபோது - கே.பி.ஆர்.



மறைந்த முதல்வரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமச்சந்திரன் 

அது சிறுகுடி கிராமம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடுடைய நண்பர் சேதுப்பிள்ளையின் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடத்தி வைக்க அறிஞர் அண்ணா, நாவலர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிகளை அங்கும் இங்கும் ஓடி புரட்சித்தலைவர் படமெடுத்துவிட்டு என் பக்கத்தில் வந்தமர்ந்தார். அதுதான் நான் அவரை முதன்முதல் சந்தித்தது.

அடர்த்தியான முடியோடு சுருள் கிராப்பு. சில்க் கள்ளி ஜிப்பா அணிந்து கையைச் சுருட்டி இருந்தார். சிவந்த மேனியாய்க் காட்சியளித்தார். என் பக்கத்தில் அமர்ந்தது எனக்கு பெருமையாக இருந்தது. அவருக்கும் எனக்கும் ரோஸ் மில்க் கொடுக்கப்பட்டது. அந்த வருடம் வெளியான ‘மதுரை வீரன்’ சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு என்னைக் கவர்ந்திருந்தது. எனவே நான் அவரோடு பேசத்துடித்தேன்.

‘படத்தை இரண்டு முறை பார்த்தேன், நன்றாக இருந்தது’ என்று பேச்சுக் கொடுத்தேன். அவர் முக மலர்ச்சியோடு பதில் சொன்னார் – ‘அந்தப் படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்தார்கள். அதுதான் வெற்றிக்குக் காரணம்.’ இது அவருடைய பரந்த மனப்பாங்கைக் காட்டியது. அவர் குடித்து முடித்ததும் அந்த டம்ளரை வாங்க முயன்றேன். தர மறுத்து அவராகவே பரிமாறியவரிடம் கொடுத்து விட்டார். 
 
16 வருடங்களுக்குப் பிறகு அவர் சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றோ நான் அவருக்கு மெய்க்காப்பாளனாக பணியாற்றுவேன் என்றோ அப்போது நான் நினைத்துப் பார்க்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் எனது பாக்கியம் அப்படி நடந்தது. தோட்டத்தில் அவரைச் சந்தித்து எலுமிச்சம் பழம் கொடுத்து மரியாதை செலுத்தி மெய்க்காப்பாளராக பதவியேற்றேன்.

அவர் சத்யா ஸ்டுடியோ செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தார். பிளைமவுத் காரில் அவர் அருகே பழம் பெரும் நடிகர் அவரது நிழலாக உட்கார்ந்தார். நான் முன் சீட்டில், கார் நகர்ந்தது. அன்னை சத்யா ஆலயத்தின் முன் வந்ததும் நின்றது. காருக்குள் இருந்தபடியே காலிலிருந்த செறுப்பை அகற்றிவிட்டு பயபக்தியுடன் தாயைக் கும்பிட்டார். என்னையும் அறியாமல் நானும் கும்பிட்டேன். வழியில் என்னை விசாரித்தார். திருமண வீட்டில் சந்தித்ததை நினைவூட்டினேன்.

அதற்கு அவர் ‘உலகம் உருண்டை பார்த்தீர்களா?’ எங்கேயோ சந்தித்த நாம் மீண்டும் இங்கே சந்திக்கிறோம் என்றார். நான் பெயரைச் சொன்னபோது இருவர் பெயரும் ஒன்றாக இருப்பதால், நான் கே.பி.ஆர். என்று அழைத்தால் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார். நான் சரி என்றேன். இதற்கு முன் எங்கே இருந்தீர்கள் என்றார். ‘’கக்கன்ஜி அவர்களுக்கு மெய்க்காப்பாளனாக இருந்தேன்’’ என்றேன். அவரைப் பற்றிக் கேட்டார். அவர் ‘நேர்மையானவர், எளிமையானவர், அடக்கமானவர்’ என்றேன். புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டே என்னுடைய அபிப்ராயமும் அதுவே என்றார்.

மாற்றுக் கட்சித் தலைவரைப் பற்றி நான் உயர்வாகச் சொன்னதை, சிறிதும் மனக்கசப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அது அவரது பண்புள்ளத்தைக் காட்டியது. கார் ராஜ்பவனைக் கடந்தபோது போலிஸ் கான்ஸ்டபிள் உடையில் ஒருவர் கைவண்டி இழுத்துச் செல்வதைக் கவனித்துவிட்டு, காரை நிறுத்தி என்னை விசாரிக்கச் சொன்னார். கீழிறங்கி ஓடி அந்த நபரை விசாரித்தேன். விசாரித்ததில் ஒரு போலிஸ்காரருக்கு உறவினர் என்று தெரிய வந்தது. மனநிலை சரியில்லாதவராம். போலிஸ்காரரின் வீட்டுக்குப் போனபோது உடையையும் தொப்பியையும் எடுத்துப் போயிருக்கிறார்.

நான் நம்பரையும் தொப்பியையும் வாங்கிக்கொண்டு வந்தேன். அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவித்து, அந்தத் தொப்பியையும் நம்பரையும் உரியவரிடம் கொடுக்கச் சொன்னார். அப்போது செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த கே.வி. சுப்பிரமணியம் ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் பண்ணி விபரம் சொன்னேன். அவர் தாமதிக்காமல் உடுப்புக்குரிய கான்ஸ்டபிளுடன் வந்து தலைவரைச் சந்தித்துப் பேசினார். கான்ஸ்டபிளும் தவறு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. தலைவர் எவ்வளவு கண்டிப்பானவர், கடமை உணர்வு உள்ளவர் என்பதைப் பார்த்தபோது நான் மிகவும் எச்சரிக்கையாகவும் கடமை உணர்வோடும் பணியாற்றினேன். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியிலிருந்தார். புரட்சித்தலைவர் அவர்கள் சிறுசேமிப்புத் துணைத்தலைவராக இருந்தார். அவரால் அப் பதவிக்கு பெருமை ஏற்பட்டது. அவருக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. கைகளில் துப்பாக்கி ஏந்தி போலிஸ் மரியாதை செலுத்துவார்கள். அந்த மரியாதையை ‘வேண்டாமே’ என்று அடக்கமாகக் கூறினார்.

‘வேண்டாம்’ என்று கூறுவது உகந்ததாகாது, போலிஸை அவமதிப்பது போலாகும் என்று நான் பணிவோடு எடுத்துக் கூறியதும் ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதற்கு அவர் நடை போட்டு வரும் பாணியும், ஏற்றுக்கொள்ளும் முறையும் மிடுக்காகவும், கம்பீரமாகவும் இருக்கும். உயர் மட்ட இராணுவ - போலிஸ் அதிகாரிகளையும் அது மிஞ்சிவிடும்.

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

மாற்றுக் கட்சித் தலைவராக இருந்தாலும் அவர் பார்த்தது ஓர் மனிதராக... அது தான் MGR அவர்கள்...

கவிஞர்.த.ரூபன் சொன்னது… [Reply]

வணக்கம்
சிறப்பான கருத்தாடல் மிக்க பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ரூபன் அவர்களே!

vivek kayamozhi சொன்னது… [Reply]

அதனால் தானே இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் புரட்சித்தலைவர்..!!
இதுபோல் இன்னும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி விவேக்!

ஜோதிஜி சொன்னது… [Reply]

பக்கவாட்டில் உள்ள தமிழ்ச்செடி லோகோவை எடுத்து விடுங்க. இணைப்பு மாற்றப்பட்டு உள்ளது.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சரி எடுத்து விடுகிறேன் ஜோதிஜி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!