திங்கள், 10 பிப்ரவரி, 2014

தமிழ்ப்புத்தகம் இல்லாத புத்தகக் கண்காட்சி!

கடந்த மூன்று வருடங்களாக சென்னைப் புத்தக கண்காட்சிக்குப் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு நிறைவேறவே இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி. நான் வேலை செய்வது வெளி மாநிலத்தில் என்பதும் ஒரு காரணம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எனது பயணத்திட்டமிடல் என்பது எனது தனிப்பட்ட சொந்த வேலைகளின் பொருட்டே இருக்கும்.

கிடைக்கிற வாரம் பத்து நாளில் என்னுடைய வேலைகளையே முடிக்க முடியாது. என்னென்னமோ திட்டமிட்டுக்கொண்டு போவேன். ஆனால் பாதி வேலை கூட முடிந்திருக்காது. கடந்த இரண்டு வருடங்களாகவே எனது பயணம் டிசம்பர் மாதத்திலேயே முடிந்து விடுவதால் ஜனவரியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வரமுடியாத சூழல்.

வெறும் புத்தகங்கள் வாங்க மட்டுமன்றி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளர்களாக மாறிக்கொண்டிருக்கும் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் பதிவுல நண்பர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் அல்லவா. பதிவர் சந்திப்பின் போதுதான் வரமுடியவில்லை. இப்படி புத்தகத் திருவிழாவிலாவது பார்க்கலாம் என்றால் அதுவும் முடியாது போயிற்று.


அலுவலக விஷயமாக ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் செல்லவேண்டி இருந்தது. இடையில் கிடைத்த இரண்டு மணி நேரத்தை எங்கே செலவழிக்கலாம் என்று யோசித்தபோது 'ராம் மந்திர்' பக்கத்தில் 'எக்ஸிபிஷன் கிரவுண்டில்' புத்தகக் ககண்காட்சி நடைபெறுவதாக அறிந்தேன். சரி ஒரு எட்டு போய் வரலாம் என்று கிளம்பினேன்.

மாலை ஐந்து மணிதான். இருட்டத் தொடங்கியிருந்தது. உள்ளே 200 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள். பாவம் மக்கள்தான் யாருமில்லை. இதே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் கூட்டம் அலைமோதும். மைதானமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.

ஒடிஸா மக்கள் எல்லோருமே தீனிப்பண்டாரங்கள். எங்கு பார்த்தாலும் பானி பூரி கடையிலும், ஃபாஸ்ட் புட் கடையிலும் கூட்டம் நிறையவே இருக்கும். பல நேரங்களில் இவர்கள் வீட்டில் சமைக்கவே மாட்டார்களோ என்னவோ என்றும் நான் நினைப்பதுண்டு. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முக்கியமாய் குடும்பத்தலைவிகள் கூட இந்த சாலையோரக் கடைகளில் ருசித்து சாப்பிடுவது இங்கே சர்வ சாதாரணம். இந்த புத்தகச் சந்தையிலும் சில ஃபாஸ்ட் புட் கடைகள் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் அங்கேயும் கூட்டமில்லை என்பதுதான் அதிசயம்.

ஆங்கிலப் புத்தகங்கள், ஒரிய புத்தகங்கள் நிறைய இருந்தது. பிரபல பதிப்பகங்களும் இடம் பெற்றிருந்தன. பிரபலமான எழுத்தாளர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை. இனிமேல்தான் அதுபற்றி விசாரிக்கவேண்டும். அப்துல் கலாமின் ஆங்கிலப் புத்தகங்கள் தவறாமல் எல்லா புத்தகக்கடைகளிலும் இருந்தன. புத்தக விற்பனை மிகவும் மந்தமாகத்தான் இருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் தத்தமது இணைகளுடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கொரு நப்பாசை எங்காவது ஏதாவது தமிழ்ப்புத்தகம் தென்படாதா என்று. இது நியாயமான ஆசை இல்லைதான். நம் தமிழ்நாட்டில் ஏதாவது புத்தகச்சந்தையில் ஒரிய புத்தகத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன? இரயில் நிலையங்களில் விற்கப்படுவதைப்போல இங்கு வசிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்காகவும் புத்தகங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். அதற்காக விற்பனைக்கெல்லாம் உத்தரவாதம் கொடுக்க முடியுமா நம்மால்?

சில பள்ளிக்கூடங்களும், கல்வி நிறுவனங்களும் கூட இங்கே ஸ்டால் அமைத்திருந்தார்கள். 'ஸ்பாட் அட்மிஷன்' என்ற அறிவிப்பு வேறு! நல்ல அழகான ஆசிரியைகளை அமர்த்தி தங்கள் பள்ளிக்கூடப் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களை சீண்டத்தான் யாருமில்லை.

பக்கத்திலேயே இந்திய அளவிலான எல்லா மாநிலங்களின் கைத்தறித்துணி கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கைத்தறியிலான எல்லாவகை ரகங்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தன. ஆனால் விலைதான் பயங்கரமாக இருந்தது. தமிழ்நாட்டு கைத்தறித்துணிகளை விற்பனை செய்ய ஒரே ஒரு சின்ன ஸ்டால் மட்டும் இருந்தது. விற்காத வேதனையில் இருக்கும் அவரிடம் ஏன் வயிற்றெரிச்சலைக் கிளப்ப வேண்டும் என்று கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

அங்கும் கூட்டம் அதிகமில்லை. ஒருவேளை இன்னும் இருட்டிய பிறகு வருவரார்களோ என்னவோ. நான் கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது இரவு எட்டு மணி. அப்போது ம் கூட்டம் வந்தபாடில்லை.



ஒடிஸா புத்தகக் கண்காட்சியில தமிழ்ப்புத்தகம் இருக்காதுதான்! பின்ன பதிவின் தலைப்பு எதுக்கு இப்படி? ...ச்சும்மா கலாய்க்கத்தான்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நாட்டில் இத்தனை நல்லவங்களா?!



சனிக்கிழமை என்றால் எங்கள் அலுவலகத்துக்கு அரைநாள் விடுமுறை. வெளியூரிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் இரயிலைப் பிடித்துப் போவது வழக்கம். அப்படித்தான் நேற்று நாங்கள் புறப்பட்டபோது எனக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலையை முடிக்கச்சொல்லி உத்தரவு வந்தது. எனவே மற்றவர்களை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு நான் எனது அறைக்குத் திரும்பிவிட்டேன். 

வருடா வருடம் எங்கள் நிறுவனத்தில் புது வருட துவக்கத்தில் ஏதாவது பரிசுப்பொருள் கொடுப்பது வழக்கம். அப்படி இந்த வருடம் எங்களுக்கு கொடுத்தது ‘‘ரைஸ் குக்கர்’’. நண்பர்களில் ஒருவர் இதையும் தன்னோடு வீட்டுக்கு கொண்டு போனார். இரயில் நிலையத்தில் நாங்கள் இறக்கி விட்டபின் பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து இரயிலுக்காக காத்திருந்தார். 

இரயிலும் வந்தது. இவர்களும் போய் ஏறியிருக்கிறார்கள். இரயில் புறப்பட்டு வேகமெடுத்து போய்க்கொண்டிருக்கிறது. அறையில் இருந்த எனக்கு அந்த நண்பரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. பதட்டமாக பேசினார். என்ன செய்தி என்றால், அவசர அவசரமாக இரயிலில் இருக்கையைப் பிடிக்கும் வேகத்தில். ‘’ரைஸ் குக்கரை’’ (இதுக்கு தமிழ்ல என்னங்க?) அங்கேயே விட்டுவிட்டு இரயில் ஏறியிருக்கிறார். உள்ளே போய் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்ததும்தான் இவரக்கு குக்கர் ஞாபகமே வந்திருக்கிறது. உடனடியாக எனக்கு கைப்பேசியில் அழைப்பு…

இரயில் போய் இருபது நிமிடம் ஆச்சு. என் அறையிலிருந்து இரயில் நிலையம் இருப்பதோ ஒரு கி.மீ.தூரம். அவர் இரயில் நிலையம் போய் பார்க்கச்சொல்கிறார். அது அங்கு இருந்தாலும் இருக்கும். என்று கோரிக்கை வைக்கிறார். நானோ அது தேவையில்லாத வேலை. இன்னேரம் யாராவது எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள் என்றேன். அவரோ இல்லை நம் அதிர்ஷ்டம் அது அங்கு இருந்தாலும் இருக்குமில்லையா என்றார்.

நான் அவநம்பிக்கையோடு கிளம்பினேன். இரயில் நிலையம் போய், வழக்கமாய் நாங்கள் உட்காரும் இடத்தை நோக்கிப் போனேன். தூரத்திலிருந்தே தெரிந்துவிட்டது. அவர் விட்டுப்போன அந்த ‘’ரைஸ் குக்கர்’’ அனாதையாய் யாராலும் சீண்டப்படாமல் அங்கேயே கிடந்தது. ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாய் நேராக அங்கே போய் அதை எடுத்துக்கொண்டு வந்துகொண்டே இருந்தேன். ஹூம்… ஒரு பய கேக்கணுமே… யாருமே உரிமை கொண்டாடவுமில்ல, கேக்கவும் இல்ல. பக்கத்திலேயே பலர் அமர்ந்திருந்தும் யாரும் இதை சட்டை செய்யவேயில்லை.

திடீர்னு எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்களா என்ன? இல்லை அதிலே ஏதாவது வெடிபொருட்கள் இருக்கும் என்று பயந்திருப்பார்களா? அப்படி ஒன்றும் இல்லையே? அதன் அருகில்தானே பலர் அமர்ந்திருந்தார்கள். பொருள் இருக்கிறது, அப்படியானால் அதன் உரிமையாளர் பக்கத்தில் எங்கோ இருக்கவேண்டும் என்று எண்ணித்தான் யாரும் கைவைக்காமல் இருந்திருக்கிறார்கள். 

எப்படியோ பொருள் கிடைத்துவிட்டது. தகவலை உடனடியாக அந்த நண்பருக்குத் தெரியப்படுத்தினேன். அவர் மகிழ்ச்சியோடு நன்றி கூறினார். இந்தக்காலத்தில் இப்படிக்கூட மக்களா?

எல்லோரும் நல்லவங்களா மாறிட்டு வர்றாங்களோ?!

சனி, 8 பிப்ரவரி, 2014

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது…ஆர்.என். நாகராஜராவ்



நியூட்டோன் படப்பிடிப்பு தளத்தில் ‘ரத்னகுமார்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் - பஞ்சு இயக்குகிறார்கள். பி.யூ. சின்னப்பா, பானுமதி சம்பந்தப்பட்ட ஒரு தர்பார் சீன். நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட போர்வீரர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவராக கையில் ஈட்டி பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார். ஆனாலும் அந்த பர்சனாலிட்டி, பொன்னிறம் இவர் சேவகரல்ல, ஒரு ராஜாவின் தகுதிக்குரியவர் என்று வெளிப்படுத்தியது.

அதனால்தான் என்னவோ பி.யூ.சின்னப்பாவுடன் நடித்துக்கொண்டிருந்த பானுமதி, நான் ஸ்டில் ஃபோட்டோகிராபர் ஆனதால் இவரை எனக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்ற நினைப்பில் ‘யார் இவர்?’ என்று என்னிடம் தெலுங்கில் கேட்டார். நானும் தொயிலுக்குப் புதியவன், முன்னே எனக்கு அவரோடு பழக்கம் இல்லை. ஒரு வார்த்தையேனும் அவரோடு பேசிக்கொண்டதில்லை. அதனால் எனக்குத் தெரியாதம்மா என்று சொன்னேன். பானுமதி அவரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே போனார்கள். நானும் கவனித்தேன்.

அப்போது அவருக்கு முப்பதுக்குள்ளாக வயதிருக்க வேண்டும். கட்டுமஸ்தான உடம்போடு பார்ப்பவரை கவர்பவராக இருந்தார். இன்னும் எனக்கு அந்தக் கண்களை நினைவிருக்கிறது. அவருக்கு என்ன பணித்தார்களோ அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். யாருடனும் போய் அரட்டை அடித்துக் கொண்டிருக்க மாட்டார். அமைதியாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார். நானும் பொதுவாக யாருடனும் பேசுவதில்லை. அதனால் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்னை ஒரு படம் எடுங்கள் என்றுகூட அவர் கேட்டுக் கொண்டதில்லை.
அப்போது அவர் யானைக்கவுனியில் இருந்து வருவார். எப்படி? நடையாய் நடந்து வருவார். எப்படியும் முன்னேறிவிட வேண்டும் என்று துடிப்போடு இருந்தார். இதுதான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தது. அடுத்தும் ‘மீரா’ படத்தில் அவரைப் பார்த்தேன். அதிலும் வந்து போகக்கூடிய சிறிய வேடம்தான் அவருக்கு. அதன்பிறகு ‘நாம்’ படத்தில் அவரோடு வேலை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு.

 
அப்போதெல்லாம் கழுத்தில் சின்னதாக ருத்ராட்சத மாலை போட்டிருப்பார். ஒரு குழந்தையைப் போல நடந்துகொள்ளுவார். எந்தக் குழந்தையைக் கண்டாலும் தூக்கி எடுத்துக் கொஞ்சுவார். எப்போதும் கதர் ஆடைகளையே அணிவார். சாப்பாட்டு நேரத்தில் தன்னோடு நிறையபேர் அமர்ந்து சாப்பிடுவதை விரும்புவார். இருப்பதை பகிர்ந்தளித்து திருப்தியாகச் சாப்பிடச் சொல்லுவார். தானும் திருப்தியாகச் சாப்பிடுவார். அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டாலே அது ஒரு நினைவுகைறும் அனுபவமாகும்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதற்கு கட்டுப்படக்கூடியவராக இருந்தார். மாறுபட்ட கருத்துகள் தோன்றுமானால் அதைச் சொல்வதிலும் தயக்கம் காட்டாதவர். முதலில் பார்த்தபோது நான் அவரைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. பழகப் பழக இவர் பெரிய மனிதராக வருவார் என்று நினைத்தேன். தன்னை முன்னேற்றிக் கொள்ள கடுமையாக உழைத்தார். படப்படிப்பு தளத்தில் ஒரு ராணுவக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் வேண்டும் அவருக்கு. ஒரு பள்ளிக்கூட வாத்தியார் போலத்தான் நடந்து கொள்ளுவார். பிரம்பு ஒன்றுதான் கையில் இருக்காது!

எத்தனைக்கெத்தனை கண்டிப்பானவரோ அத்தனைக்கத்தனை பரிவுள்ளவர். அரவணைத்துக் கொள்ளும் தன்மையாளர். அதனால்தான் அவர் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார். தர்ம சிந்தனை உள்ளவர். யாருக்கவது துக்கமோ துயரமோ உதவி என்று வந்துவிட்டால் பையில் இருப்பதை அப்படியே அள்ளிக் கொடுத்துவிடுவார். அது ஆயிரமோ இரண்டாயிரமோ எவ்வளவு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்… அப்படியே கொடுத்து விடுவார். எனக்குத் தெரிந்து தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அவரிடம் பண உதவி பெற்றிருக்கிறார்கள்.

சொல்லப்போனால் அவரை வைத்துத்தான் அவர்கள் பிரபலம் அடைந்தார்கள்!

புகைப்பட நிபுனர் ஆர்.என். நாகராஜராவ்