மக்கள் திலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் திலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 நவம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது… புலவர் முத்து பாரதி

அப்போது நான் பகல் பொழுதில் கந்தசாமி நாயுடு கல்லூரியின் இளங்கலை மாணவன். இரவில் பேராசியர் ஏ.எஸ். பிரகாசம் அவர்களின் உதவியாளர். திரு சேதுராமன் அவர்கள் தயாரித்த ‘சபலம்’ என்ற படத்திற்காக ஹோட்டல் ரஞ்சித்தில் தங்கியிருந்தோம்.

இரவில்- சில ஓய்வு நேரங்களில் ஹோட்டல் ரூம் பாய்ஸ் அனைவரும் ஒன்று கூடுவார்கள். ராமு என்ற பையன் மூலம் எனக்கு தகவல் அனுப்புவார்கள். நான் போவேன். எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாட்டு பாடுங்கள் என்பரார்கள். (‘சமுதாயத்தின் அடித்தள மக்களின் நெஞ்சை அஸ்திவாரமாகக் கொண்டுள்ள ஒரு தலைவரின் சமுதாய வாழ்வும், அரசியல் வாழ்வும் எந்த நேரத்திலும் ஆட்டம் கண்டிட சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை’ என்று இந்த நேரத்தில் நான் வியந்திருக்கிறேன்.) அவர்கள் விருப்பப்படி எழுதுவேன். அவர்களிடம் பாடிக் காட்டுவேன்.

1976-ஆகஸ்ட் 25 ஹோட்டல் தொழிலாள நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் புரட்சித்தலைவருக்கு ஒரு சீட்டுக்கவி எழுதினேன்.

காலையில் அஞ்சல் செய்துவிட்டு கல்லூரிக்குப் போய்விட்டேன். மாலையில் திரும்பி வந்த போது, ஹோட்டலில் ஏகபோக வரவேற்பு.

புரியாமல் தவித்து முடிவில் தெரிந்து கொண்டேன். புரட்சித்தலைவரின் அலுவலகத்திலிருந்து எனக்கு ஃபோன் வந்ததாகக் கூறி தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள். தொடர்பு கொண்டேன். திரு முத்து அவர்கள் மாலை 6 மணிக்கு ஆற்காடு முதலி தெரு அலுவலகத்தில் தலைவரை சந்திக்கும்படிக் கூறினார்.

முகவரியை விசாரித்து புரட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த அலுவலகத்தின் கீழ் ஹாலில் வால் பேப்பர்களாக சுவரோடு ஒட்டியபடி பலர் நிற்க- நான் நடுவில் கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்.

முத்து வந்து ‘யார்?’’ என்றார். ‘’புலவர் முத்து பாரதி’’ என்றேன். நீங்க வந்தாச்சான்னு தலைவர் கேட்டார். மாடிக்குப் போங்க என்றார். மாடி அறைக்கு வெளியே இருந்த ஹாலில் தென்னாற்காடு மாவட்ட கழக அமைப்பாளரும் மற்றும் நான்கைந்து பேரும் இருக்க-நானும் இணைந்தேன். தலைவரின் அழைப்பில் எல்லோரும் உள்ளே சென்றோம்.

உடன் வந்தவர்கள் சுவர் ஓதர் ஒதுங்க, நான் தலைவரின் எதிரில் அப்படியே நின்று விட்டேன். ‘’இதில் புலவர் முத்து பாரதி யாரு?’’ தலைவர் கேட்டார். வியப்பாலும் மகிழ்ச்சியாலும் என் நா மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ள நான்தான் என்ற பாவனையில் செஞ்சில் கை வைத்தேன். வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்தேன்.

தலைவரின் மேசைக்கு எதிரில் இரண்டு நாற்காலி. ஓன்றில் ஒரு அம்மையார். மற்ற நாற்காலி காலி. உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். தலைவர், அம்மையாரிடம் சொன்னார். ‘தம்பி நல்லா கவிதை எழுதறார். எனக்கு கடிதம் எழுதியிருக்கார், கவிதையிலே. எப்படி தெரியுமா?’

‘’ஊருக்கெல்லாம் நிழல் கொடுக்கும்

ஆலமரம் – என்று

உலகம் உன்னை உணர்ந்து கொள்ளும்

காலம் வரும்!

நல்ல உள்ளம் தன்னைத் தேடி

செல்வம் வரும். என்

நாயகனே உன்னைத் தேடி

தெய்வம் வரும்…’’

(என்று தொடங்கி நான் எழுதியனுப்பியிருந்த 24 வரி சீட்டுக்கவியையும் கவிதா நயத்தோடும் சரளமாகவும் பாடினார்). தலைவர் அம்மையாரை எனக்கு அறிமுகப் படுத்தினார். அம்மையார் பி.டி. சரஸ்வதி ஆவார்.

‘என்ன செய்யறீங்க?’ தலைவர் கேட்டார். ‘சினிமாவுக்கு பாட்டு எழுதறேன். (இப்போது ஒரு படத்திற்கு பாட்டு எழுதியிருந்தேன்) தொடர்ந்து எழுத ஆசை. தற்சமயம் இயக்குனர் பேராசி.இயர் பிரகாசம் அவர்களிடம் உதவியாளனாக இருக்கிறேன்’ என்றேன். ‘தொடர்ந்து எழுதுங்க’ என்றார். தலையாட்டினேன். பேசிக்கொண்டிருந்த தலைவர் (என் சீட்டுக் கவியின் விளக்கமாக) தெய்வம் மனிதர்களைத் தேடி வராது, பேசாது தெரியுமா? என்று கேட்டார்.

புரட்சித்தலைவரை பாட்டுடைத் தலைவனாக தெய்வமாக சீட்டுக்கவி எழுதியிருந்த நான் உணர்ச்சி உந்துதலில் மேசையைத் தட்டி ‘என் தெய்வம் வரும். பேசும்.’ என்றேன். (எல்லோர் முகத்திலும் வியப்பு) தலைவர் புன்னகை மாறாமல் இருந்தார்.

‘’எப்படி சொல்றீங்க?’’ என்றார். தெய்வம் தேடி வர்றது அதனுடைய மனசைப் பொறுத்தது அல்ல. பக்தனுடைய தவத்தைப் பொறுத்தது. தவம் பலமா இருந்தா தெய்வம் தானா வரும்’ என்றேன். தலைவர் வாய் விட்டுச் சிரித்தார். மேசை மீதிருந்த என் கையை தன் கையால் பொத்தித் தட்டினார்.

‘தம்பி என் கிட்ட ஏதாவது…’ என்றார். ‘நிச்சயமா இல்லை. உங்களைப் பார்க்கணும்னு சின்ன வயசிலேயே ஆசைப்பட்டேன். இனிமேலும் பொறுக்க முடியாதுன்னு சீட்டுக்கவி எழுதினேன். பார்த்திட்டேன். அவ்வளவுதான். வர்றேன்.’ ‘அடிக்கடி வாங்க’ என்றார். வெளியே வந்தேன்.

இளங்கவிஞனான என் மீதும் சிரத்தை எடுத்துக் கூப்பிட்டு ‘காட்சிக்கெளியனாய்’ என்ற வள்ளுவர் வாக்கின்படி அன்பு காட்டி பாராட்டியதிலிருந்து தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் புரட்சித்தலைவர் கொண்டிருக்கும் ஆசை-ஆர்வம்-பற்று-என்னை இன்னமும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

புலவர் முத்து பாரதி.

வியாழன், 4 ஜூலை, 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது....

இயக்குநர் பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம் 

மறக்க முடியாதவை....
தாய்க்கு முதல் பிரசவம்;காதலிக்கு முதல் முத்தம்;
மனைவிக்கு முதல் இரவு;
கணவனுக்கு முதல் சம்பளம்;

ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு மறக்க முடியாதது அவன் எழுதி, திரைக்கு வந்த முதல் திரைப்படம். 

திரைக்கதை எழுதச் சந்தர்ப்பம் தேடி அலைந்த என் கடும் தவம் கலையும் கடைசி மூச்சில், நான் கண்டுகொண்ட மக்கள் திலகத்தின் முதல் தரிசனத்தில், கிடைத்த வரமே என் முதல் திரைப்படம்!

அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ. இறுதியாண்டு மாணவர்க்கு நான் பயிற்ற வேண்டிய பாடம் - 'தமிழ் நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்'. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி பற்றிப் பேசுகிறேன்.

அந்த நாடகக் குழுவிலே ஓர் இளைஞன். அவன் மேடையிலே வேடமிட்டு வந்தால் அவனை மொய்க்கும் கண்கள் மதுவுண்ட வண்டுகளாகும் - அவனது அழகும் குரலும் அப்படி.

கண்பட்டதோ என்னவோ அன்று மேடையில் அவன் பாடும்போது தொண்டை கரகரக்கிறது. திடுக்கிடுகிறான். காளைப் பருவத்தின் தலைவாசலில் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு கண்டம். 'மகரக் கட்டு' - தொண்டை உடைந்து குரல் கெட்டுப் போகும். குரல் கெட்டுப் போனால் தலைமை வேடம் கிடைக்காது; துணை வேடம்தான்.

எந்த மேடையில் கொலு வீற்றிருந்தோமோ அங்கே கோலேந்தி நிற்பதா? கூடாது' என்று அழுகிறது அந்த இளைஞனின் 'ஆத்மா'. அந்த நடிகன் மறுநாள் கம்பெனியை விட்டுக் காணாமல் போகிறான்!
குரல் உடைந்த்ததால் அந்தக் கலைஞன் உடனே மனம் உடைந்து போகவில்லை. குத்துச்சண்டை, குஸ்தி, கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்று தன் கட்டுடலை வளர்த்து திரும்பவும் கொலுவேறுகிறான் - நாடக மேடையில் அல்ல, அதன் விசுவரூபமான திரைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமா? தமிழகத்து மக்களின் இதயகப் கொலுவிலெல்லாம் ஏறி அமர்கிறான்!

இப்பொழுது நான் குறிப்பிடுவது யாரை என்று மாணவர்களே உங்களுக்குத் தெரியும்; எம்.ஜி.ஆர்.தான்.

பிறருக்கு உதவுவது அவரது பிறவிக் குணம்; துணிச்சல் அவரது தொட்டில் பழக்கம்; தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போழுது ஒரு மாணவர் எழுந்து, 'நீங்கள் மிகையாகப் புகழ்கிறீர்கள். இதெற்கெல்லாம் என்ன ஆதாரம்?' என்று என்னை வழிமறிக்கிறார்!

ஆதாரத்திற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய ஒரு அவசியம் ஏற்படுகிறது; சொல்கிறேன்.

சென்னை அருணாசலம் ஸடுடியோ. படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க கொடுத்து வைத்த பலபேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து அப்போது வெளியாகி உள்ள ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எம்.ஜி.ஆர். ஆர்வம் காட்டுகிறார்.

'அற்புதமான கதை' ஒருவர் ஐஸ் வைக்கிறார்.  'ஒவ்வொரு காட்சியும் ஜோர்' - ஒருவர் சோப்பு போடுகிறார்! 'சண்டைக்காட்சிகள் தூள்' என்று ஒருவர், 'பாடல்கள் எல்லாம் பிரமாதம்' என்று ஒருவர் - இப்படி அவரைச் சுற்றி பல காக்காய்கள் பறக்கின்றன!

இந்த முகஸ்துதியில் மரத்துப்போனவர் எம்ஜி.ஆர். தன் அருகில் நின்ற ஒருவரின் மௌனத்தைக் கலைத்து எம்.ஜி.ஆர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைக்கிறார்.
கேட்டதும தான் தாமதம்! அந்த நபர் அந்தப் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரேதப் பரிசோதனை பண்ணத் தொடங்குகிறார். குறைகளை எல்லாம் கூசாமல் குத்திக் காட்டுகிறார். 'அந்த அதிகப் பிரசங்கி'யின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது சகோதரர் மா. ராஜாங்கம் (அப்பொழுது உத்தம பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் திண்டுக்கல் எம்.பி.யாகி அஸ்தமித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வீ ரர்) பேசாதே என்று ஜாடையாக அந்த முந்திரிக் கொட்டையின் பின் சட்டையைப் பிடித்து இரகசியமாகச் சுண்டுகிறார்.

எம்.ஜி.ஆரோ அந்த இங்கிதம் தெரியாதவர் பேச்சை வெகு ஈடுபாட்டோடு கேட்கிறார். எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதையைக் கண்டதும் ராஜாங்கத்துக்கு சற்று நம்பிக்கை வருகிறது. அண்ணே 'இவர் என் சட்டகர்' பேரு ஏ.எஸ்.பிரகாசம். பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார்.

கதையெல்லாம் எழுதுவார். 'சுண்டிப் பாருங்க, செல்லுற காசா இருந்தா வாங்கிக்கங்க' என்று எனக்கு சிபாரிசு செய்யத் தொடங்குகிறார்.

'சுண்டவே வேணாம். இவர் செல்லுற காசுதான். நான் அனுப்பினேன்னு நீங்க வீரப்பாவை (ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆர். அப்படித்தான் சொன்னார்) போய்ப் பாருங்க' என்று எளிதில் திறவாத திரையுலக இரும்புக் கோட்டையை எனக்குத் திறந்து விடுகிறார்.

மண்ணுக்கேற்ற மதியூக மந்திரி - என் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஆர்.எம்.வி.யின் சத்யா மூவிஸ் கதவு, தட்டுவதற்குள் திறக்கிறது. திரையுலகில் என் கன்னி முயற்சி 'கண்ணன் என் காதலன்' என்ற படம் பிறக்கிறது.

திரைக்கு கதை எழுதச் சந்தர்ப்பம் கேட்டு நான் இதற்கு முன் எத்தனையோ கதவுகளைத் தட்டி இருக்கிறேன், திறந்ததில்லை. பிறருக்கு உதவுவது அவரின் பிறவிக் குணம்; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்பதற்கு கோடியில் நான் ஒரு சாட்சி.

இந்த மறக்க முடியாத முதல் சந்திப்போடு படப் பிடப்பின் வேளையில் நான் நிழலாடி நின்றபோது - துணிச்சல் அவர் தொட்டில் பழக்கம், தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை - என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள்!

வகுப்பு முடியும் மணி அடிக்கிறது. விளக்கத்தை முடித்து நான் வெளியேறுகிறேன்.

வியாழன், 20 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது….ஏ.வி.எம். சரவணன்

(எம்.ஜி.ஆர். பற்றிய தொடர்)


திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.

இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வாஎன்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.

என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணேஎன்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். அன்பே வா இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம்  நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார். 


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.