பரஸ்பர நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரஸ்பர நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு?


இந்த மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு? கிட்டத்தட்ட 2007-லிருந்து மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்களை தேடித்தேடி படித்து வருகிறேன். கொஞ்சமாய் அதைப் பற்றிய முழு விவரம் தெரியாமலேயே முதலீடும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதனுடைய முழு பலா பலன்களை அறிந்த பிறகு எனது நண்பர்களுக்கும் மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டைப்பற்றிக் கூறி சேமிப்பை இப்படி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

இப்படி அனைவரும் தங்களது பணத்தை சேமிப்பதினால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகமாவதோடு மியூட்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும். இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்த வழி. அதுவும் எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும்.

ஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நோக்கத்தோடுதான் இங்கே என் அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த விவரங்களையும் பதிவிடுகிறேன்.

வாழ்க்கையில் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் சேமிப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்கள். வரவுக்கும் செலவுக்குமே சரியாகப்போகுது என்று சொல்பவர்கள் கூட நெருக்கடியான நேரத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க ஏதாவது சேமிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி சேமிப்பது, எங்கே சேமிப்பது என்ற சரியான வழிகாட்டல் இன்றி, திட்டமிடல் இன்றி அவதிப்படுகிறார்கள். இன்றும் கூட பரவலாக இருக்கும் சேமிப்பு முறை ’சீட்டு கட்டுவது’. இதில் பணத்தைக் கட்டி பலனடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள் அதிகம். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பி பணத்தைக் கட்டியவர்கள் கம்பி நீட்டிய பிறகுதான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

இன்று வரை சீட்டுக் கம்பனி, தீபாவளி ஃபண்டு, அதிக வட்டி என்ற ஆசை காட்டும் நிதி நிறுவனங்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் திருந்தியபாடில்லை. எங்கே தவறு? வங்கியில் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது? கிராம வங்கிகளில் பெரும்பாலும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே கணக்கு தொடங்குபவர்கள். படித்தவர்கள் என்ன அத்தனையும் தெரிந்தவர்களா என்ன?

எங்கள் அலுவலகத்திலேயே பலர் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அல்லது எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்ற ரீதியில் உதவாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தைப் போட்டுவிட்டு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூட்சுவல் ஃபண்ட்) பற்றியோ, நல்ல காப்பீடு திட்டங்கள் (இன்ஷூரன்ஸ் பாலிஸிகள்) பற்றியோ சரியான புரிதல் இல்லை. முகவர்கள் எதையோ சொல்லி ஏமாற்றியிருப்பதேயே வேதவாக்காக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூடிய மட்டும் என் நண்பர்களிடத்தில் சரியான முதலீட்டு திட்டங்களையும், உயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்குவதோடு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி புரிந்தும் வருகிறேன். இந்த அனுபவங்களைத்தான் இனி பதிவாக்கலாம் என்ற திட்டம். 

சோம்பல் அதிகமாகி விட்டது. படிப்பது குறைந்து விட்டது. ஒருவித சலிப்புத்தன்மையும் உருவாகி விட்டது. இதிலிருந்து மீள ஒரே வழி பதிவுலகில் மீண்டும் பவணி வருவதே. இடையிடையே புத்தகங்களில் இது சம்பந்தமாக நான் படித்த விவரங்களையும் சேர்த்தே பதிவுகள் வரும்.

நாட்டு நடப்பு பற்றியும், அரசியல் சூன்யத்தைப் பற்றியும் எழுத ஆசைதான். கடந்த பாசிஸ ஜெயலலிதா ஆட்சியின் அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் கடைசியாக நான் எழுதிய பதிவு தேவை ஆட்சி மாற்றம்’. ஆனால் பணத்துக்கு விலை போன மக்களால் அந்த அவதி ஜெயலலிதா மறைந்தும் தொடர்கிறது இதன் முடிவு எப்போது என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்ய விருப்பம் இருக்கிறது.

தொடர்ந்து இனி சந்திப்போம். வழக்கம்போல் ஆதரவு கொடுக்க நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

சனி, 30 செப்டம்பர், 2017

பரஸ்பர நிதித் (மியூட்சுவல் ஃபண்ட்) தி்ட்டங்கள் - கேள்வி-பதில்


வெகு நாட்களாக பதிவுலகத்தை வி்ட்டு விலகியிருந்தாயி்ற்று. முகநூலும் வாட்ஸ்சப்பும் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டன. ஆர்வமி்ல்லாததும் காரணம்.

மீண்டும் மெதுவாய் பதிவிடலாம் என்று ஆசை துளிர்த்திருக்கிறது. அதன் தொடக்கம்தான் இந்தப் பதிவு.

அனைத்து மியூட்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள பொதுவான இணையதளம் ஏதாவது இருக்கிறதா?

இந்திய மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் அமைப்பான ஆம்ஃபியின் இணையதளத்தில் (http://www.amfiindia.com) எல்லா விபரங்களையும் பார்க்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டை எவ்வளவு காலத்துக்குள் பணமாக்க வேண்டும்?

தனியாக கால அளவு எதுவும் இல்லை. அது உங்களின் பணத்தேவையைப் பொறுத்தது. அதே நேரத்தில், ஒரே திட்டத்தில் மட்டும் முதலீட்டை முடக்கி வைக்காமல், வருமானத்தை மட்டும் எடுத்து வேறு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கை குறைக்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்ட்டில் நீண்ட கால அடிப்படையில் எஸ்.ஐ.பி.முறையில் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்கள் மிகுந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டவை. திரட்டப்படும் நிதி மற்றொரு மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதுதான் இதன் போர்ட்ஃபோலியோ! இந்தத் திட்டங்களில் நிர்வாகச் செலவு மற்ற திட்டங்களை விட சற்று அதிகமாக இருக்கும். தற்போது இந்தியாவில் சமார் 35-க்கும் மேல் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் திட்டங்கள் மூன்றாண்டு காலத்தில் 30-40% ரிட்டர்ன் அளித்து வருகின்றன.


இ.எல்.எஸ்.எஸ்., குளோஸ்டு எண்டட் ஃபண்ட் வேறுபாடு என்ன?

இ.எல்.எஸ்.எஸ். என்பது பங்கு சார்ந்த ஓப்பன் எண்டட் திட்டம். இதில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்வதோடு, யூனிட்டுகளையும் விற்று பணமாக்க முடியும். இத்திட்டத்தில் வரிச்சலுகை பெற, மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டை எடுக்காமல் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த மூன்று ஆண்டுகள் லாக்-இன் பீரியடை வைத்து இதை ஒரு குளோஸ்டு எண்டட் ஃபண்ட்டாக பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். குளோஸ்டு எண்டட் என்பது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே முதலீட்டை வெளியில் எடுக்க முடியும். இடையில் எடுக்க முடியாது. இ.எல்.எஸ்.எஸ், அனைத்துமே ஓப்பன் எண்டட் திட்டங்கள்தான். இதில் இடையே வெளியேற முடியும். ஆனால் வரிச்சலுகை பெற்றுவிட்டு இடையே இத் திட்டத்திலிருந்து வெளியேறினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டு விடும். இது திட்டத்தைப் பொறுத்து 12 மாதங்கள், 15 மாதங்கள், 24 மாதங்கள் என்பது மாதிரி இருக்கும்.

மேலும் என்.எஃப்.ஓ.வின் போது வாங்கினால் திட்டக் காலம் முடிந்த பிறகுதான் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற முடியும்.

குளோபல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா?

குளோபல் ஃபண்டுகள் மூலம் திரட்டப்படும் நிதி, பெரும்பாலும் ஆசியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் விதமாகத்தான் அமைந்துள்ளன. உலக அளவில் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை ஆசியா கொண்டுள்ளது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், 70% ஆசியாவில்தான் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி, அதிக வருமானத்தை ஈட்டும் விதமாகவும் முதலீட்டின் மீதான ரிஸ்க்கை குறைக்கும் விதமாகவும்தான் இந்த குளோபல் ஃபண்டுகள் களமிறங்கி இருக்கின்றன.

மியூட்சுவல் ஃபண்டில் உண்மையான வருமானம் எவ்வளவு?

ஒரு திட்டம் 40% வருமானம் சம்பாதித்து இருக்கிறது என்றால், அது முதலீட்டாளர் கைக்கு வரும் முன்பு, அதனை விட அதிகமாக வருமானம் ஈட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் நிர்வாகச் செலவு மற்றும் லாபத்தை எடுத்துக்கொண்டு அதனைக் கழித்துதான் என்.ஏ.வி. மதிப்பை வெளியிடுகிறது. இது திட்டத்தின் தன்மையைப் பொறுத்தது 0.25% தொடங்கி 3% வரை செல்கிறது. இதையும் சேர்த்தால் உண்மையான வருமானம் என்பது அதிகம்.


பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது, யூனிட்களை வாங்கினால் என்.ஏ.வி. அதிகமாக உள்ளது. இது ரிஸ்க்கானதுதானே?

நம்மவர்கள் பங்குச் சந்தை வேகமாக ஏறினாலும் பதற்றமடைகிறார்கள்; இறங்கினாலும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். யூனிட்களின் மதிப்பு அதிகமாக இருந்தால் அது விற்கும் காலம். குறைவாக இருந்தால் அது வாங்கும் காலம் என்று முன் கூட்டியே முடிவு செய்து கொண்டு மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொண்டால் இந்தக் குழப்பங்கள் வர வாய்ப்பில்லை.

மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அவசரத் தேவைக்கு பணம் எடுப்பது எப்படி? யூனிட்களின் ஒரு பகுதியை விற்க முடியுமா?

உங்களுக்கு எவ்வளவு பணத்தேவையோ அல்லது எத்தனை யூனிட்களை விற்றால் உங்கள் தேவை பூர்த்தியடையுமோ அதற்கேற்ப யூனிட்களை விற்றுக் கொள்ளலாம்.

டேக்ஸ் சேவர் ஃபண்டில் போடப்படும் தொகையில் எந்த அளவுக்கு வரி விலக்கு உண்டு?

வருமான வரிப்பிரிவு 80C பிரிவின் கீழ் வரிச்சேமிப்பு மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்சம் ரூபாய் வரை, ஒரு நிதியாண்டில் வரி விலக்குப் பெற முடியும். உங்களின் அடிப்படை வருமானத்தைப் பொறுத்தது அதிக பட்சம் 33 ஆயிரம் ரூபாய் வரியைச் சேமிக்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்டில் சிறப்பான வருமானம் பெற எவ்வளவு காலத்துக்கு காத்திருக்க வேண்டும்?

இதில் கால அளவு என்று எதுவும் இல்லை. நீங்கள் எந்த அளவுக்கு லாபம் எதிர்பார்த்து முதலீட்டை மேற்கொண்டீர்களோ, அதை எட்டியதும் யூனிட்களை விற்று விடலாம். இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று வெளியேறும் கட்டணம். அடுத்தது குறுகிய மூலதன ஆதாய வரி.