கவிப்பிரியனைக் கவர்ந்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிப்பிரியனைக் கவர்ந்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

என்னை ஞாபகமிருக்கிறதா?




இருக்கலாம்
இன்றைக்கு
உனக்கு என்னை
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்
சௌந்தர்ய வண்ணங்கள்
உனக்கு விரித்திருக்கும்
ஷாமியானாப் பந்தலின்
சரிகைச் சிலுப்பில்
நீ சயனித்திருக்கும்போது
அதோ..
அந்தச் சூடுதகிக்கும்
பாலைவன மணற்பரப்பில்
தனித்த கனவுகளோடு
தொடுவானுக்கருகில்
நிற்கும் என்னை
உனக்கு இன்று
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்.
என்றேனும் ஒரு
இலையுதிர் காலத்தில்
வெறுமையில்
புழுங்கிப்போன உன் இதயம்
தொன்றலைத்தேடி
தவிக்கும் போது
நமது பழைய நந்தவனத்தின்
அசோக மரக்கிளையில்
அமர்ந்தபடி
ஜீவன் கரைந்து கூவுகிற
ஒரு ஒற்றைக் குயிலின்
உயிர் பிரியும் பாடல் வந்து
என்னை யாரென்று
உனக்கு ஞாபகப்படுத்தாமலா
போகும்!?


செவ்வாய், 1 மே, 2012

தொலைபேசிகள் கடிதங்களின் சவப்பெட்டி!



கல்லூரி விடுதிக்கு
அம்மா எழுதும்
கடிதத்தில் தெரியும்
தாய்ப்பால் வாசம்
பணிவிடைத் தாள்களின்
அடியில் மட்டுமே
வரவேற்கப்படும்
அப்பாவின் கடிதங்கள்
காதலிக்கும்போதுதான்
தெரியவந்தது
கடிதங்களைப் படித்தும்
பசி ஆறலாம்
சுமக்கும்
செய்திகளிலிருந்து
கடிதங்களே
அறிவித்துவிடும்
நண்பர்கள் வயதை
பிரசவத்திற்குப்
பிறந்தகம் போன
மனைவிகளின்
கடிதங்களால்
காப்பாற்றப்படலாம்
பல
கணவர்களின் கற்பு
இப்பொழுதெல்லாம்
என்
கண்களில் படுகின்றன
தொலைபேசிகள்
கடிதங்களின் சவப்பெட்டியாக!

-     - நெல்லை ஜெயந்தா



திங்கள், 23 ஜனவரி, 2012

காதலெனும் அரும்பை...


அன்பே!
காதலெனும் அரும்பை
மலர்வதற்குள் பறித்தேனா?
உன் மனதை உடைத்துவிட்டேனா?
மனந்திறந்து மன்னிப்பு கேட்கிறேன்


மலர் கொடுத்தேன்
சூடிக்கொண்டாய் – என்
மனதைக் கொடுத்தேன்
தீயிலிட்டாய்!

பூ பூக்கலாம் உதிரலாம்
உதிர்ந்த்தடி என் நெஞ்சம்
கண்ணீரைச் சிந்தி
கரைத்துவிட்டாய் என் மனதை


ஆறுதல் சொல்வேன் அரவணைப்பேன்
ஆனால்
என்னவென்று சொல்வேன்
எது தடுக்கிறதென் நெஞ்சை?


மண்ணின் தாகத்தைத்
தீர்த்திடலாம் மேகம்!
பெண்ணே! உன் தாகத்தைத்
தீர்த்திடுமோ என் மோகம்?


நம் உறவு ஆரம்பித்தது எங்கே?
முடியப்போவது எங்கே?
பார்க்க முடியாத தூரத்தில்
நாம் இருந்தாலும்
பாவையுன் மீது நாளும் ஞாபகம்


நல்ல பதில் வருமென்று
நாளும் நான் காத்திருப்பேன்!?


இந்தக் கவிதை என் நண்பன் தாண்டவமூர்த்தி 12.12.1989 அன்று எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது.


அடிக்-கடி கடிதம் எழுது. நீ பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை, விமர்சனங்களை எனக்கு காட்டவே இல்லை. எனக்கும் ஞாபகம் இல்லை. இன்னும் பல எழுதிவை. அடுத்தமுறை படித்துக் கொள்கிறேன். (எப்போது?)


இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும்போது உனது முதல் கடிதம் எனக்கு வரும். அதன்பின்பு மறுபடியும் ஏதாவது கிறுக்கி எழுதுவேன். அதுவரை விடைபெறுவது,
உன் நண்பன்,
தாண்டவமூர்த்தி.


மறக்க முடியாத நினைவுகளுடன்,

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பெயரற்ற கடிதங்கள்



நீண்ட இடைவெளிக்குப் பின்
நிகழும் சந்திப்பு...
பகிர்ந்து கொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மௌனம் என்ற
நாகரிகப் பார்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது நேரம்!
பிரிகையில்...
உன் குடும்பம் பற்றி நீயும்
என் குடும்பம் பற்றி நானும்
உப்புச்சப்புமில்லாமல்
பேசி முடிக்கையில...
தப்பித்தவறிக்கூட அந்த
பழைய பார்வையை
பார்க்கவே இல்லை
உன் கண்களில்.


எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ!
பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை!
குப்பைக் கூடையில்
போடவேண்டும்!
சரி....
நீங்காமல் நெஞ்சில் கிடக்கும்
பழைய நினைவுகளை
என்ன செய்வது?

நன்றி; மீரா பழனி, சென்னை.