திங்கள், 9 ஜூன், 2014

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது - தமிழ்ப்பித்தன்

1956-ம் ஆண்டு! அப்போது நான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தென்றல்வார ஏட்டில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். அந்நாளில் திரைப்படப் பணிக்கெனத் தனி உதவியாளர் அவருக்குக் கிடையாது. அதனால் வசனம் எழுதுவது என்றாலும் பாடல் அமைப்பது என்றாலும் அந்தப் பணிகளுக்கு என்னையும் மற்றொரு துணை ஆசிரியரான நண்பர் தென்னரசு அவர்களையும் உதவியாளராகப் பயன்படுத்தி வந்தார்.

கவியரசர் வசனம் எழுதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன்அப்போது வெளியாகி இருந்தது. வெற்றி நடைபோட்ட அந்தப் படத்திற்கு அற்புதமாக வசனம் எழுதியிருந்தார் கவியரசர். பெரும்பான்மையான காட்சிகளுக்குரிய வசனங்களை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதினேன். 1955-ம் ஆண்டிலிருந்தே தம் கைப்பட எழுதுவதை நிறுத்திவிட்டு டிக்டேஷன் முறையை அவர் மேற்கொண்டிருந்தார்.  

மதுரை வீரனுக்குரிய வசனங்களில் எல்லாம் கவிதை மிதந்தது; புலமை பொங்கியது; நகைச்சுவை ததும்பியது; வீரம் மின்னியது. ஆனால் எனக்கு மட்டும் வேதனைஏக்கம் ஏற்பட்டிருந்தது. மக்கள் திலகம் முழக்கமிடும் வசனங்களின் வரி வடிவங்களைப் பார்க்கும் வாய்ப்புதானே கிடைத்திருக்கிறது. அவரை சந்தித்துப் பேசுகிற வாயப்பு கிடைக்கவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம்.

ஏக்கம் விரைவில் மறையும் என்ற நம்பிக்கையை கொடுத்தது, கவியரசரும், பி.வி. கிருஷ்ணன் என்னும் காமிரா நிபுணரும் கூட்டாகச் சேர்ந்து ஸ்வஸ்திக் பிலிம்ஸ்என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய சேதி. அவர்கள் தயாரித்த பவானிஎன்னும் படத்தில் மக்கள் திலகம் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பவானிதிரைக்கதையை எழுதுவதில் ஈடுபட்டிருந்த கவியரசர் ஒருநாள் காலையில் என்ன அழைத்துச் சொன்னார், இன்னிக்கு சாயந்தரம் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நாம போறோம். ‘’ஸ்டோரி டிஸ்கஷனுக்குத் தயாரா இருங்க’’.

அந்தச் சேதி எனக்குத் தேனாக இனித்தது. காலையிலிருந்தே மாலை நேரத்தை எதிர்பார்த்துக் கனவுலகில் பவனி வரத்தொடங்கினேன். மக்கள் திலகம் அவர்களை முதன் முறையாக அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்க்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினேன்.

மாலை 6 மணியளவில் லாயிட்ஸ் தெருவில் இருந்த அவரது இல்லத்திற்கு கவியரசரும் நானும் சென்றோம். கவியரசரைக் கண்டதும் தாமரை மலர் போல் மலர்ந்து வரவேற்றார் அவர். அவரைக் கண்டதும் மன்மதனைப் பார்த்து விட்டோம் என்று என் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

கவியரசர் என்னை அறிமுகம் செய்து வைப்பார் என்று நினைத்தேன். அந்த மறதி மன்னர் மறந்துவிட்டார். ஆனால் மக்கள் திலகம் அவர்கள், என்னைச் சுட்டிக்காட்டி இவர் யார்?’ என்று கவியரசரிடம் கேட்டார். இவர் நம்ம தென்றல்சப்-எடிட்டர்! தமிழ்ப்பித்தன்னு பேரு. மதுரைக்காரர்! தமிழிலே ஆர்வம் உள்ளவர். கவிதை இலக்கணம் எல்லாம் நல்லா தெரிஞ்சவர், என்று அறிமுகம் செய்தார்.

உடனே மக்கள் திலகத்திற்கு வணக்கம் செலுத்தினேன். புதியவனான என்னைக் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் அவர் காண்பித்த அக்கறை எனக்கு வியப்பை அளித்தது. அந்த நினைவு இன்றும் என் மனதில் ஆனந்தக் கும்மியை ஆடச் செய்து வருகிறது.

பவானி திரைக்கதையை மக்கள் திலகத்திடம் கூறத் தொடங்கினார் கவியரசர். சில காட்சிகளை அவர் ஏற்றுக்கொண்டார். சில காட்சிகளை மாற்றி அமைக்கும்படி ஆலோசனை கூறினார். கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு நேந்திரங்காய் சிப்ஸ் வழங்கப்பட்டது. அதனைச் சில வினாடிகளில் நாங்கள் தீர்த்து விட்டோம். ஆகவே மேற்கொண்டும் எங்களுக்கு சிப்ஸ் தருவதற்கு நினைத்த மக்கள் திலகம் அவர்கள், தமது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை அவர்களை அழைத்து, ‘’இன்னும் கொஞ்சம் சிப்ஸ் கொண்டு வாங்க அண்ணே’’ என்றார்.

சில வினாடிகளில் எம்.ஜி.சி. அவர்கள் சிப்ஸ் கொண்டு வந்து தந்தார். அது போதுமானதல்ல என்பதை மக்கள் திலகம் உணர்ந்தார். மறுவினாடி, ஒரு துள்ளளுடன் சோபாவை விட்டு எழுந்து உள்ளே சென்றார். சிப்ஸ் இருந்த பாக்கட்டையே கொண்டு வந்துவிட்டார். எங்கள் பிளேட்டுகளில் சிப்ஸை நிரப்பிவிட்டு, தமது அண்ணனை நோக்கி வெற்றிப் புன்னகை புரிந்தார். அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிலைத்து நிற்கிறது.

எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டும். அனைவரின் பசியைப் போக்க வேண்டும் என்ற நற்கொள்கைகள் எல்லாம் இவரது இதயத்தில் மண்டிக் கிடப்பதை அந்த முதற் சந்திப்பிலேயே நான் தெரிந்து கொண்டேன். அவரை வாழ்த்தத் தொடங்கியது எனது நெஞ்சம்.

தமிழ்ப்பித்தன்.

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது… [Reply]

வணக்கம்

தமிழ்ப்பித்தன் மக்கள் திலகத்தை சந்தித்த நிகழ்வு பற்றி மிக நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள் அந்த ஜீவன்களின் மூச்சில்தான் இன்றைய அரசியலும் நடக்கிறது.வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக

சிறகடிக்கும் நினைவலைகள்-3.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
த.ம 2வது வாக்கு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!