செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பாலியல் வன்முறைக்கும் கற்பழிப்பிற்கும் என்ன வேறுபாடு?


ஒரு பெண்ணின் உடலைஅவள் விருப்பமில்லாமலும், அவளது எதிர்ப்பை புறக்கணித்தும், தனது உடல் தேவை, இச்சை அல்லது வெறி என்ற ஏதோ ஒன்றுக்காக ஒரு ஆண் பலவந்தப்படுத்தி அனுபவிப்பதுதான் பாலியல் வன்முறை!

பாலியல் வன்முறைக்கும் கற்பழிப்புக்கும் என்ன வேறுபாடு? பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணின் உடலுக்கு இழைக்கப்பட்ட தாக்குதல். அவள் மனதுக்கும் தன்மானத்துக்கும் செய்யப்படும் அவமானம். ‘பெண்’ என்பதால் அவள் ஒரு ஆணின் மிருக வெறிக்கு இரையானவள் என்று பல விளக்கங்களை உள்ளடக்கியது.

ஆனால் கற்பழிப்பு என்பது அதற்கும் சற்று மேலே போகிறது. ஒரு பெண்ணின் மான்பும் மரியாதையும் இழிவு செய்யப்பட்டது என்பதைவிட அவள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புனிதம் அவளைவிட்டுப் போய்விட்டது என்பதைக் குறிப்பதே கற்பு-அழிப்பு.

அந்தப் புனிதமானது அழியவே அழியாதா என்றால்… அப்படியல்ல… ஒரு ஆணால் – கணவன் என்ற தகுதியுடன் காலம் முழுவதும் அழிக்கப்பட வேண்டியதுதான் அந்தப் புனிதம். அதில் மனைவிக்கு உடன்பாடோ விருப்பமோ இல்லாவிட்டலும் கணவனால் அழிக்கப்படும்போது அது தன் புனிதத்தை இழந்து விடுவதில்லை. ஏனெனில் அவன் அதற்கான உரிமை பெற்றவன். அந்த உரிமையோடு புனிதத்தை அழித்தவன். அல்லது உரிமையுடன் ஆண்டதால் அந்தப் புனிதம் அழிந்துவிடுவதில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். 

உரிமை இல்லாதவன் புனிதத்தை அழித்து விட்டால் அவனையே உரிமையாளனாக ஆக்கிவிடுவதன் மூலம் புனிதத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். அதனால் கற்பும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடும். கற்பழித்தவன் கணவனாகி விடுவான். 

ஒரு பெண்ணின் உடல் ஆணின் தேவைக்காகவே படைக்கப்பட்டது என்பதை அத்தனை மதங்களும் சத்தமாகவே சொல்கின்றன.

- வழக்கறிஞர் அருள்மொழி.


பெண்ணுக்கு கற்பழிப்பு - கத்திக்குத்து, கட்டைத்தடியால் அடி, சவுக்கு விளாறல் போன்ற உடல் உபாதை அல்ல. அது அவமானம். வெள்ளையாய் உடுத்திக்கொண்டிருப்பவரை கடுஞ்சேற்றில் தள்ளுகிற அவமானம். ஆசையாய் உணவு உண்ண தட்டில் அசிங்கம் பரிமாறும் அவலம்.

எந்த அனுமதியும் இன்றி, எந்த மனித மதிப்பும் இன்றி நடத்தப்படும் காரியம். இந்த அவமானத்தை எத்தனை விதமாய்ச் சொன்னாலும் ஆணுக்கு புரிவதே இல்லை. சொந்த தங்கைக்கு நேர்ந்தாலும் அவன் கோபம் முதலில் அவளை நோக்கித்தான் போகும்.

இந்த அவமானம் மரணத்தை விடவும் கொடியது. இதற்கு இணையான இழப்பு ஆணுக்கு நடப்பதே இல்லை. இது தரும் அதிர்ச்சி அவனுக்கு நிகழ்வதே இல்லை. பிறந்த குழந்தையை சுவற்றில் அடித்துக் கொல்லுதலைக் காட்டிலும் கொடுமை இது!

- பாலகுமாரன்.

6 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

கொடுமைதான். ஆனால் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறதே? இதற்கு சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும் என்று விளங்கவில்லை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கந்தசாமி அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

இதில் பாதிக்கப்படுவது 95 சதவிகிதம் பெண்களே. ஆனால் இது குறித்து விளக்கமாக பதில் எழுதினால் என்னை பிறாண்டி எடுத்துவிடுவார்கள்.

ராஜி சொன்னது… [Reply]

இப்படி வன்கொடுமையில ஈடுபடுறவங்க கண்ணையும், வாயையும் பிடுங்கிட்டு நெத்தில இவன் இப்படிப்பட்ட ஆள்ன்னு பச்சை குத்தி விட்டுடனும். அப்போதான் தெரியும் வேதனை. மத்தவங்களுக்கும் ஒரு படிப்பினையா இருக்கும்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஜோதிஜி! நீங்களே இப்படி பயந்தா நாங்கெல்லாம் எப்படி பதிவெழுதுவது. தாராளமா எழுதுங்க. நாங்க பக்க பலமா இருக்கோம். மருந்துபோட?!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி! கடுமையான தண்டனை தரவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. எளிதில் தப்பிவிடலாம் என்கிற பயமின்மையே இவர்களின் துணிச்சலுக்குக் காரணம்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!