வியாழன், 14 பிப்ரவரி, 2013

அபாயத்தின் ஓசைகள்



கூடங்குளம் ஒரு முடிவுறாத போராட்டமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாநில அரசோ மௌனம் காக்கிறது. இதில் பொய்யான தகவல்கள்வேறு பரப்பப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கிவிட்டால் மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகம் மாறிவிடுமாம்?! இந்த படித்த முட்டாள்களை என்னவென்று சொல்வது? 

அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக நாட்டையே அடகு வைக்கிறார்கள். ஆனால் இந்த படித்த மேதாவிகள் எதற்காக இப்படி இதற்கெல்லாம் ஆதரவளிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. மேலோட்டமாக அல்லது அரசுக்கு ஜால்ரா போடும் பத்திரிகைகளின் செய்திகளைப் படித்துவிட்டுத்தான் இந்த அரைவேக்காடுகள் அவசரகதியில் உளறுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
ஆனால் அணு உலைகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலேயே பேசுகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் கூட கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்பு பற்றிய எந்தக்கேள்வியையுமே எழுப்பாமல் பல தலைமுறைகளை காவு வாங்க இவர்கள் ஆயத்தமாவது எதனால்?.... வெறும் கட்சி விசுவாசம்! தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு இங்கு மட்டுமே சாத்தியம்!

கல்பாக்கத்திற்கும், தாராப்பூருக்கும் என்ன கேடு வந்துவிட்டது என்பது இவர்களின் கேள்வியாக இருக்கக்கூடும். கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985 ல் இரு 220MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சிலகாலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW  ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப்பகுதிகளில் தொடர் பிரச்னை ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப்பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன்வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன் வகைகளான ராட்டு, சிங்கராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்கள் மீது தெரிக்கும் கடல் நீரால் உடல் முழுவதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக்கழிவுகளின் விளைவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
 அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை, அடிப்படைத் தரவுகள் ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதும் அலட்சியப்பட்டுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச்செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. அன்று தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அப்போது 65 முதல் 80 பேர் வரை அடித்துச்செல்லப்படதாகத் தகவல்கள் வெளியாயின. 

கல்பாக்கம் அணு உலை கட்டும்போது சுனாமி அலைகளின் அபாயங்கள் கணக்கில் எடுக்கப்படதா என்ற கேள்விக்கு, இந்திரா காந்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். L.V. கிருஷ்ணன் அவர்களிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் தந்த பதில்…. இல்லை. சுனாமி அலைகள் சாரந்து எந்த தற்காப்பும் அங்கு இல்லை. இந்தியாவில் எவரும் சுனாமி அலைகள் வந்து நம் கரைகளைத் தாக்கும் என்று கற்பனை செய்துகூட பார்த்திருக்கவில்லை. புயல் மட்டுமே கணக்கில் எடுக்கப்படது. அதுவம் 6 மீட்டர் அலைகள்தான் அதன் கணக்கு, என்றார்.

ஆனால் நடந்தது என்ன? நாடே அறியும்! இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அரசின் உதவிகளைப் பெறும் எல்லா விஞ்சானிகளும் ஒன்றுபோல அணுஉலையை ஆதரிக்கிறார்கள். மக்கள் சார்ந்த விஞ்சானிகள் அனைவரும் அணு உலையை தொடர்ந்து எதிர்க்கிறார்கள்.  
இன்று நாட்டின் மின்சரத்தேவைகளில் சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% பெறுகிறோம். அதே வேளையில் அணு உலைகளில் இருந்து 2.36% மட்டுமே பெறுகிறோம். அப்படி இருக்க, எப்படி இங்குள்ள நடுத்தர வர்க்கத்திற்க்கு அணுவின் மேல் அத்தனை பாசமும், சூரிய ஒளி, காற்றாலை மதிப்பற்ற ஒருவித நையாண்டியும் உருவானது. உலக அளவில் இந்த அணுத்துறைதான் சூரிய ஒளி மற்றம் காற்றாலை சார்ந்த ஆய்வுகளை முடக்கிவைத்துள்ளது.

எப்படி பெட்ரோலிய நிறுவனங்கள் மாற்று எரிபொருள் அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் சார்ந்த அனைத்து ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் முடக்கிவைத்துள்ளதோ அதே பாணிதான் இங்கும் செயல்படுகிறது. இதுவரை எல்லா சூரிய ஒளி நிறுவனங்களுக்கும் வங்கிகள் தொழில் முறையாகத்தான் கடன்கள் வழங்குகின்றன. ஆனால் இந்த வெள்ளை யானை கடந்த 65 ஆண்டுகளாக நம் வரிப்பணத்தை எத்தனை லட்சம் கோடிகள் தின்று செரித்துள்ளது என்கிற கணக்குகளை அரசு முன்வைக்குமா?  


6 கருத்துகள்:

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

நல்ல கேள்வி...!

ezhil சொன்னது… [Reply]

அருமையான அறிவுப்பூர்வமான பகிர்வு.... நிறைய தெரியாத தகவல்கள்... நன்றி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி உஷா அன்பரசு அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில் அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

நீங்க கடைசியாக சில வரிகளில் சொன்னதைத்தான் தான் இன்று வீரப்ப மொய்லி புலம்பலாக சொல்லி இருக்கின்றார்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜோதஜி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!