பதிவுத்திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுத்திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 பிப்ரவரி, 2014

வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா?


நான் ஒடிஸா கிளைக்கு வந்தபோது இங்கே ஏற்கனவே ஒரு தமிழர் இருந்தார். கணிணி பிரவைச் சேர்ந்தவர். ஆனாலும் பிளாகர் பற்றியோ வலைத்தளங்கள் பற்றியோ எதுவும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி பிளாகரில் வலைப்பதிவை ஆரம்பிப்பது, தமிழில் தட்டச்சு செய்வது, திரட்டிகள் என்று பலவும் சொல்லிக் கொடுத்தேன். கணிணி தொழில்நுட்பம் பற்றி ஏற்னவே அறிந்திருந்ததனால் எளிதாக கற்றுக்கொண்டு வலைப்பதியவும் ஆரம்பித்து விட்டார்.




ஆனால் ஒன்று மட்டும் அவரால் முடியவில்லை. அது தமிழில் தட்டச்சு செய்வது! பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட இல்லை. பின்னே எப்படி வலைப்பக்கத்தில் எழுகிறார் என்கிறீர்களா? சொந்த சரக்கு எதுவும் இல்லை. மற்றவர்களின் பதிவுகளிலிருந்து திருடி அதைத் தன்னுடையது போல பதிவிடுவதுதான் அவர் வழக்கம். பெயருக்குக்கூட இது இன்னாருடையது, இந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற நாகரிகமெல்லாம் கிடையாது.


அவருக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தமறக்க முடியாத நினைவுகள்தளம். சற்றேறக்குறைய ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதைப்பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நாமெல்லாம் மாங்கு மாங்கென்று தமிழில் தட்டச்சு செய்து வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவுகளைப் போடும்போது இவர் மட்டும் ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகள் போடுவார். இதைப்பற்ற்றி ‘’ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி?’’ என்றுகூட ஒரு பதிவைப் போட்டிருந்தேன். வருடத்திற்கு நூறு பதிவுகள் என்று மூன்று பதிவுகளைக்கூட தொடமுடியாத நிலையில் அவருடைய பதிவுகளோ ஆயிரத்திற்கும் மேலே போய்விட்டது.


வாசகர்களின் வருகைக்கும் குறைவில்லை. சும்மா உப்பு சப்பில்லாத பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் வருவதில்லையே தவிர, காரசாரமான அரசியல், பாலியல் சார்ந்த பதிவுகளுக்கும், கவர்ச்சியான தலைப்புகளுக்கும் வாசகர் வரத்து எப்போதும் குறைவதே இல்லை. ஆனால் எல்லாமே ‘’காப்பி, பேஸ்ட்’’ வகைகள்தான். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பொங்கி எழுந்தார்கள், சிலர் எச்சரிக்கை செய்தார்கள். அசரவில்லை இவர். அப்புறம்தான் ஒரு பதிவர் இவருக்கு ‘’காப்பி பேஸ்ட் மன்னன்’’ (இந்தப் பெயரை இப்போது கூகிலில் தேடினால்கூட முதலில் வருவது இவரது சங்கதிதான்) என்று பட்டப்பெயர் கொடுத்து இவருடைய எல்லா விபரத்தையும் தன்னுடைய வலைப்பதில் ஏற்றி நாறடித்தார்.


அப்போதும் நான் எச்சரிக்கை செய்தேன். கேட்கவில்லை. அவருடைய பணி தொடர்ந்துகொண்டிருந்தது. பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை அவருடையது அறுபதாயிரம் என்றால் என்னுடையது முப்பதாயிரமாக இருக்கும். இது தேவையில்லாத ஒப்பீடுதான் என்றாலும் ஒரு குறுகுறுப்பிற்காக பார்த்துக் கொள்வதுண்டு. நான் எங்கே அவரை எட்டிப்பிடித்து விடுவேனோ என்று மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருந்தார். நான் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் நேரத்தில்தான் வலைப்பதியத் தொடங்குவேன்.


ஆனால் அவர் கணிணி அறையில் இணைய இணைப்பில் எப்போதும் இருப்பதால் பணிசெய்வது குறைவாகவும், பதிவிடுவது அதிகமாகவும் இருக்கும். நான் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. பணிச்சூழலில் நான் வேறு இடத்திற்கு வந்துவிட்டேன். அவர் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றலாகிப் போனார். இடைப்பட்ட காலத்தில் ஆமை முயலை வென்ற கதையாக எனது பதிவின் பக்கப்பார்வைகள் சறசறவென்று மேலேறி அவர் என்னை எட்டமுடியாத அளவிற்கு மேலே போய்விட்டது. என்ன நினைத்தாரோ அலுவலகத்தில் அதே வேலையாக இருந்திருப்பார் போலிருக்கிறது.


இதுதான் கெட்ட நேரம் என்பதோ என்னவோ? ஒருநாள் மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிபவர்களாலோ அவரைப் பற்றிய புகார் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது! விசாரனையின் போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். அவருடைய பதிவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போயிருக்கிறார்கள். பாலியல் சமாச்சாரங்களும் அதில் இருக்கவே உடனே ராஜினாமா செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். இது அந்தக் கிளையிலிருந்த நண்பர் ஒருவரால் எனக்குக் கிடைத்த செய்தி.


இது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்போது வேலையில் இல்லை. எனக்கொரு சந்தேகம்? வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா என்ன? அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் அதைச் செய்தார் என்பதைத் தவிர மற்றபடி அது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் நிர்வாகம் தலையிடலாமா? அதற்காக அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியா? நண்பர்களே கருத்து கூறுங்கள்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஒரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி?


 இது ஒரு எச்சரிக்கைப் பதிவு

1). சொந்தமாக கணணி இருக்கவேண்டும்.
2). அதிவேக இணைய இணைப்பு இருக்கவேண்டும் அல்லது
3). அலுவலகத்தில் ஓசி இணைய இணைப்பு இருந்தாலும் சரி
4). தமிழில் தட்டச்சு செய்ய ஒரு மென்பொருள் நிறுவ வேண்டும்
5). தமிழில் வேகமாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்
6). அடுத்தடுத்து பதிவுகளைப் போட நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டும்
7). எந்தத் தலைப்பில் போட்டால் வாசகர்கள் வருவார்கள் என்று மெனக்கெட வேண்டும்.
8). அப்போதுதான் வெளியான சினிமாவைப் பற்றி எழுதவேண்டும்
9). கவர்ச்சிகரமான பாலியல் ரீதியான தலைப்புகளைப் போடவேண்டும்
10). முக்கியமாக வேலை வெட்டி இல்லாமல் இருக்க வேண்டும்
11). வீட்டிலும், அலுவலகத்திலும் பதிவு பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
12). பரந்து பட்ட வாசிப்புத்தன்மையும், சமூகப் பிரக்ஞையும் இருக்க வேண்டும்.


இப்படித்தானே நினைக்கிறீர்கள் நீங்கள்! அதுதான் இல்லை. இது மிகவும் சுலபமான வேலை. உங்களிடம் கணிணியும், அதிவேக இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதும். ஒரே நாளில் இரண்டு மூன்றென்ன பத்து பதிவுகள் கூட போடலாம். மிகவும் சுலபமான வழி இருக்கிறது.

தமிழ் சுமாராகத் தெரிந்திருந்தாலே போதும். தமிழ் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே! நான் ஆரம்பித்த அதே தினத்தில் என்னுடைய நண்பர் ஒருவருக்கு பதிவுலகத்தைப் பற்றி எடுத்துக்கூறி, நானே எல்லா வழிமுறைகளையும் கூறி பதிவை ஆரம்பிக்கச் சொன்னேன். அவரும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் யாருக்கு எவ்வளவு பக்கப் பார்வைகள் என்கிற போட்டி கூட இருந்தது. நான் ஒரு நாளைக்கு ஒரு பதிவிட கடுமையாக மெனக்கெடுகிறேன்.

அது எப்படிப்பட்ட செய்தியோ தட்டச்சு செய்வதுதான் முக்கியமான வேலையாக இருக்கும். அப்புறம்தான் இணைய இணைப்பு பற்றிய கவலை. ஆனால் இவரோ ஒரு நாளைக்கு குறைந்தது 4 பதிவுகளைப் போடுகிறார். எப்படி என்று ஆராய்ந்த போதுதான் சூட்சுமம் புரிந்தது. அது வேறொன்றுமில்லை, பதிவுத் திருட்டுதான். எல்லா வலைப்பதிவர்களும் பதிவுத்திருட்டு பற்றி குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டிருக்க இவர் சத்தம் போடாமல் பிரபல பதிவர்களின் வலைத்தளங்களிலிருந்து மிகச்சுலபமாக காப்பி பேஸ்ட் செய்து மிகவும் வெற்றிகரமாக பதிவிட்டு வருகிறார். எல்லா திரட்டிகளிலும் ஓட்டுக்கள் வேறு. பக்கப்பார்வைகள் இப்போது என்னுடைய தளத்தைவிட கிட்டத்தட்ட 2000 ம் அதிகம்.

இது பொறாமையால் எழுதப்பட்ட பதிவு இல்லை என்று கஷ்டப்பட்டு பதிவு எழுதும் அன்பர்களுக்குப் புரியும். அனைத்து வாசகர்களுக்கும் செய்திகள் போய்ச்சேர வேண்டும் என்று காப்பி செய்து போட்டிருந்தாலும், குறைந்த பட்சம் எங்கிருந்து அந்தப் பதிவைச் சுட்டார் என்று கூட போடுவதில்லை. பதிவுலகின் விதிமுறைகளையும், தார்மீக நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துக்கூறியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வாசகர்கள் அதிகமாக வர வர இது ஒரு போதையாக மாறிப் போகிறது என நினைக்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்வதே தெரியாது என்பதால் அது வீண் வேலை என்கிறார். நல்ல நண்பராக அறிமுமான இவரை நேரிடையாக காட்டிக் கொடுக்கவும் முடியவில்லை. எப்படியிருக்கிறது பாருங்கள் பதிவுலகம்? இது போல் எத்தனை பேரோ?!  இதில் உச்சகட்டமாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கு எனது பதிவுகளை அனுப்ப பதிவு செய்து கொடுக்க, அது என்னுடைய பதிவுதான் என்பதே தெரியாமல் அதை உடனே காப்பி, பேஸ்ட் செய்து பதிவாகப் போட நான் ஆட்சேபிக்க, அப்புறம் அந்தப்பதிவை நீக்கினார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இப்படிப்பட்ட பதிவுத் திருடர்கள் எந்தப்பதிவுகளையும் முழுமையாகப் படிப்பதுகூட இல்லை. கொஞ்சம் பரபரப்பான அல்லது வாசகர்கள் மத்தியில் எடுபடும் விஷயங்களை அதன் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டு, அதைக் கொஞ்சம் மாற்றி காப்பி செய்து போடுவதுதான்.

பதிவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

ஒரு காதல் கடிதம் கவிதையாக உங்களுக்காக OPEN HEART என்ற இந்த தளத்தில்....