வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நம்பிக்கை - படித்ததில் பிடித்தது

 

இதுதான் வாழ்வின் அடிப்படை. இது இருட்டை விரட்டுகிறது. வெளிச்சத்தை விதைக்கிறது. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. இது இல்லாமல் எந்த நாடும் எந்த நாகரிகமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

என்ன அது?

அதுதான் நம்பிக்கை. பிள்ளைகள் படிக்கிறார்கள். சில நேரங்களில் கணக்குப் பாடங்களில் முட்டைகளை வாங்குகிறார்கள். விலை கொடுக்காமலே முட்டைகளை வாங்கி வருகிறார்களே என்று வியப்போடு அவர்களை வழிக்கு கொண்டு வரவேண்டும்.

பிரம்பை எடுத்தால் பிரம்மா கூட படைப்பதை நிறுத்திவிடுவான். பிள்ளைகள் எங்கே படிக்கப் போகிறார்கள்?

உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவான் படித்ததே இல்லை. இசைப் பாடத்தில் அவருக்கு எதிர்காலமே இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார் ஆசிரியர். இப்போது பீத்தோவானை அறியாத இசை மேதைகளே இல்லை. அவனை அறியாதவர்கள் மேதைகளும் இல்லை.

மாபெரும் விஞ்ஞானி ஐசக் நியூட்டன், இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் மக்குப் பிள்ளைகள் என்றே பெயரெடுத்தவர்கள். இருந்தாலும் வரலாற்று ந்தி அவர்கள் பக்கமாகத்தான் வளைந்தோடிக் கொண்டிருக்கிறது. ஆங்கில இலக்கிய தேவாலயத்தில் ஆராதிக்கப்படுகிற பொற்சிலையான ஷேக்ஸ்பியர் பதின்மூன்று வயதில் பள்ளிக்கூடத்தை விட்டவர். அதற்குமேல் படித்திருந்தால் பள்ளிக்கூடம் அவரை விட்டிருக்கும்.

ஷேக்ஸ்பியர் மாடு மேய்த்தார். இப்போது இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் அவர் பிறந்த ஊருக்குப் போகாமல் வருவதில்லை. ஷேக்ஸ்பியரின் தாய், தந்தை, சகோதரி ஒருவருமே படித்ததில்லை. இப்போது ஷேக்ஸ்பியரை படிக்காதவர்களே இல்லை.

மாபெரும் தளகர்த்தரான வெலிங்டன் பிரபு இலக்கிய பாடத்தில் தோற்றதால் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. சாரணர் படைதனை நிறுவிய பேடன் பௌல் பிரபுவுக்கு ஆக்ஸ்போர்டு பள்ளிக்கூடத்தில் இடமே கிடைக்கவில்லை.
உங்கள் குழந்தைக்கு இன்னமும் பேசவரவில்லையா? இதுவரைக்கும் வாசிக்காமல் இருக்கிறதா? கவலையே படவேண்டாம். மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டினுக்கு நான்கு வயது வரைக்கும் பேசவரவில்லை; எட்டு வயதுவரைக்கும் எழுத வரவில்லை.

ஓவிய சிற்ப விற்பன்னரான பிக்காசோ பள்ளிக்கூட நாட்களில் அகரம், இகரத்தை நினைவில் வைத்துக்கொள்ளாமல் அவதிப்பட்டார்.

வயதுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை. வரலாற்றைப் பார்த்தால், இளம் வயதில் எதற்கும் பயன்ற்றவர்கள் வளர்ந்த பிறகு வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் தலைவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், போர்வீரர்கள், ஓவியர்கள் போன்ற பலர, ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இதில் 35 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேல்தான் பிரகாசித்திருக்கிறார்கள்.

23 சதவீதமானவர்கள் 80 வயதிரற்கு மேல்தான் பிரகாசித்திருக்கிறார்கள். 8 சதவீதமானவர்கள் வாழ்வு முடிகிற போது வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள். சுருங்கச் சொல்வதென்றால் 66 சதவீதமான உலகின் வரலாற்று மகுடங்கள் 60 வயதை கடந்தவர்களாலேயே உருவாக்கப் பட்டிருக்கின்றன.

உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். புகழ்ந்து தள்ளுங்கள். அவர்கள் எந்தத் துறையில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்தத் துறையிலேயே செலுத்துங்கள். சின்ன வயதில் சிறப்புகள் தெரியவில்லை என்பது குற்றமில்லை. அவர்கள் பின்னாளில் மேதைகளாகவும் ஆகலாம் யார் கண்டது?!

சனி, 7 ஜனவரி, 2012

வாழ்வில் சாதிக்க வேண்டுமா?


அதிகமாக சாதித்தவர்களிடம் பொதுவான ஏழு பழக்கங்கள் இருப்பதாக ஸ்டீஃபன் கோவி போன்றவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை உங்களிடம் உள்ளனவாஎன்று சோதித்துப் பாருங்கள்.


1.      விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்படுவது. இதை ஆங்கிலத்தில் ப்ரோ ஆக்டிவ் என்பார்கள். எளிய உதாரணம்.... சென்னையில் எத்தனை பேர் குடை கொண்டு செல்கிறார்கள், எத்தனை பேர் ஒரு பயணத்துக்கு முன்பாக பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு, எல்லா உபாதைகளுக்கும் மாத்திரை எடுத்துச் செல்கிறார்கள்.இவர்கள் எல்லாம் ப்ரோ ஆக்டிவ் இனம்!

2.      எந்தக் காரியத்தைத் துவங்கும் முன்பும், அதன் இறுதி இலக்கைப் பற்றித் தெளிவாக இருப்பார்கள். உதாரணம் சினிமா போகலாம் என்று தீர்மாணித்தால், எந்த சினிமா, எந்த தியேட்டர், பார்க்கிங் பிரச்னை உண்டா, எந்த ஷோ என்பதைப் பற்றி தெளிவாக இருப்பது.

3.      முதலில் செய்ய வேண்டியதை முதலில் கவனிப்பது. மறுபடி சினிமா உதாரணத்தில், இங்கே போய் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், இணையத்திலோ அல்லது யாரையாவது அனுப்பியோ டிக்கட்டுக்கு ஏற்பாடு பண்ணுவது. இந்த முறையை வாழ்வின் ஒவ்வொரு காரியத்துக்கும் பயன்படுத்துவார்கள். இம்மூன்று பழக்கங்களும் தனி மனித வாழ்வில் சாதிப்பவர்களிடம் கட்டாயம் இருக்கும்.


பொதுவாழ்வில் வெற்றி பெற....

4.      எந்தக் காரியத்திலும் தனக்கு மட்டும் வெற்றி என்றில்லாமல் மற்றவர்க்கும் வெற்றி தரும்படி செயல்படுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் தரலாம். எளிய உதாரணம், புத்தக விற்பனை. என்னதான் நல்ல புத்தகமாக இருந்தாலும், எழுதுபவரால் மட்டும் அதை விற்றுத் தீர்க்க முடியாது. விற்பனையாளருக்கும் அதன் வெற்றியில் பங்கு தரவேண்டும். சிலருக்குப் பணமாகத் தரலாம், புகழாகவும் தரலாம். இதைத்தான் ‘வின் வின் (Win Win)என்பார்கள்.

5.      எந்தப் பிரச்னையையும் முதலில் புரிந்துகொள்வார்கள். அதன்பின் மற்றவருக்குப் புரிய வைப்பார்கள். ஒரு அலுவலகத்தில் புதிய மாற்றம் கொண்டுவருமுன் அந்த மாற்றம் யார்யாரைப் பாதிக்கும் என்று தெரிந்துகொண்டு அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விளக்குவார்கள்.

6.      ஆறாவது ஸினர்ஜி (Synergy) என்னும் குணம். உடன் இருப்பவர்களின் திறமைகளைத் தன் திறமைகளுடன் சேர்த்துக் கொண்டு இயங்குவது. ஒவ்வொருவர்களின் சிறப்புகளையும் தன் சிறப்புகளுடன் சேர்த்துக்கொள்வது. இந்தக் குணத்தை வெற்றிகரமான சினாமா இயக்குனர்களிடம் பார்க்கலாம். படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குனர், வசனகர்த்தா போன்ற எல்லாருடைய திறமைகளையும் தன் திறமையாக்கிக்கொள்வது.

7.      ஏழாவது முக்கியமான பழக்கம், புதுப்பித்தல். தன் திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது. கணிப்பொறியியலில் சிறந்தவர்களிடம் இதை நிச்சயம் காணமுடியும். நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் இத்துறையில் புதுசாக நிகழ்வதை அவ்வப்போது ஒரு மாணவன் போல கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும், தனிப்பட்ட விரிவரைகளுக்குச் சென்றும் புதுப்பித்துக் கொள்ளாவிடில் பிழைக்க முடியாது. 1970-ம் வருடத்தின் எலக்ட்ரானிக்ஸ் பாடப் புத்தகங்களை இன்று படித்தால், அதில் சிலிகான் சில்லுகலாளான மைக்ரோபுராசஸர் பற்றி ஒரு வரி இருக்காது. தொழிலறிவைப் புதுப்பிக்க வேண்டியது வெற்றிக்கு மிக முக்கியம்.