ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு

மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் நூடுல்ஸ் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை.
 
திகைப்புடன் இந்த உணவு எப்படிப் பழக்கமானது என்று கேட்டபோது, “விலை மலிவாக இருக்கிறது, அத்துடன் அடிக்கடி டி.வி-யில் காட்டப்படுவதால் பிள்ளைகள் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்என்று அந்த வீட்டுப் பெண் சொன்னாள். குடிக்கத் தண்ணீர் தாருங்கள்என்று கேட்டதும் வெளிறிப்போன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்.
 
மண் குவளை, மரக் குவளை, வெண்கல, அலுமினிய டம்ளர், சில்வர் டம்ளர் என்று இருந்த காலம் போய், இன்று பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத வீடுகளே இல்லை. இவை தண்ணீர் அடைத்து விற்கப்படும் பாட்டில்கள், குடித்து முடித்தவுடன் நசுக்கித் தூக்கி எறியப்பட வேண்டியவை. ஆனால், அதை அன்றாடம் தண்ணீர் குடிக்கும் டம்ளராகப் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்து, எந்த நாட்டிலும் இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் விருந்தினருக்குத் தண்ணீர் தரும் பண்பாடு கிடையாது. பிளாஸ்டிக் பூக்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பழங்கள், பிளாஸ்டிக் கோப்பைகள்... பிளாஸ்டிக் இல்லாத வீடுகளே இல்லை. இதுதான் நமது பண்பாட்டின் அடையாளம் என்றால் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
பண்படுதலே பண்பாடுஎன்பார் டி.கே.சி. பண்பாடு என்னும் சொல்லே 1937க்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வந்தது. டி.கே.சி-தான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார்என்கிறார் பிரபஞ்சன்.
 
இன்று நுகர்வுக் கலாச்சாரமே நமது பண்பாட்டினைத் தீர்மானிக்கிற சக்தியாக மாறியிருக்கிறது. அதைத் தனது சுயலாபத்துக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன வணிக நிறுவனங்கள். அதற்குத் துணை நிற்கின்றன ஊடகங்கள்.
 
பண்பாட்டின் சிறப்பியல்புகளை, முதன்மைக்கூறுகளை, நம்பிக்கைகளை முன்னிறுத்தும் எழுத்தும், இலக்கியமும் சமூக தளத்தில் இரண்டாம் நிலையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. நாம் பண்பாட்டு நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.
 
பண்பாடு என்பது ஓர் இனக் குழுவின் வரலாறு. புரிந்துணர்வு, வாழ்வியல் வழிமுறைகள், தொழில்சார் தேர்வுகள், நம்பிக்கைகளை உள்ளடக்கியது. மொழி, உணவு, இசை, நுண்கலைகள், சமய நம்பிக்கைகள், தொழில் கருவிகள் போன்ற காரணிகள் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
இரண்டாயிரம் வருடப் பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் வேரில் இருந்து, மரபில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள எதற்காக இத்தனை அவசரப்படுகிறது?
இன்றையப் பண்பாட்டு மாற்றங்களுக்கு முக்கியக் காரணம், சந்தைக் கலாச்சாரம். அது உருவாக்கிய பொய்கள், அந்தப் பொய்களை முன்னிறுத்திக் கொண்டாடும் ஊடகங்கள், அதன் வழி உருவான கட்டுக்கதைகள்... இவையே பண்பாட்டு மாறுதல்களை உருவாக்குகின்றன.
பண்பாட்டின் தேவை என்பது சக மனிதனுடன் அன்பு செலுத்தவும், இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவும், இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு முயற்சிக்கவும், தான் வாழும் சமூகம் மேம்பட உதவி செய்வதுமே ஆகும்.
 
பண்பாட்டுக் கலப்புகளை எதிர்கொள்ளும்போது புதிய பண்பாட்டு மாற்றங்கள் பிறக்கின்றன. இன்று தமிழகத்தில் பரோட்டா அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. பரோட்டா கடைகள் இல்லாத ஊர்களே இல்லை. ஒரு நாள் பரோட்டா தயாரிப்பதை நிறுத்திவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும்போல் இருக்கிறது.
ஆனால், பரோட்டா சாப்பிடுகிற எவருக்கும் அது எங்கிருந்து தமிழகத்துக்கு வந்தது, அதை ஏன் வீட்டில் பெண்கள் சமைக்க மறுக்கிறார்கள், இவ்வளவு புகழ்பெற்ற பரோட்டாக்கள் ஏன் கடவுளின் உணவாக இன்றும் மாறவில்லை என யோசனை செய்வதில்லை. பண்பாட்டின் ஆதார அம்சங்களில் ஒன்றான உணவு சீர்கெட்டுப் போனதே இன்றைய ஆரோக்கியக் கேடுகளுக்கு முக்கியக் காரணம்.
 
தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களாக காதல், வீரம், கொடை, பக்தி விருந்தோம்பல் ஆகிய ஐந்தினையும் குறிப்பிடுகிறார்கள். இன்று இந்த ஐந்தும் சீரழிந்துபோன நிலையில், புரையோடி நோய்க்கூறென மாறியிருக்கிறது.
 
இலக்கியங்களில் காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம், இன்று சாதியை முதன்மைப்படுத்தி, காதலர்களைத் துரத்திக் கொல்லத் துடிக்கிறது. யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் என்பதெல்லாம் வெறும் இலக்கிய உளறல்கள் என்று சொல்லும் அளவு தமிழ்ச் சமூகத்தில் சாதிய உணர்வு தலை தூக்கியுள்ளது.
 
இன்னொரு பக்கம் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று வீரம் பேசிய தமிழ்ச் சமூகத்தில் இன்று மிஞ்சியிருப்பது கூலிப்படைக் கலாச்சாரம் மட்டுமே. குற்றம் தனி நபரின் செயலாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது நம் காலத்தின் அபாயம்.
 
காலனியம் துவங்கிவைத்த பண்பாட்டு அழிப்பு இன்று பன்னாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு உலகம் தழுவிய ஒற்றைப் பண்பாடு என ஒரு பொய்வாதமாக உருவெடுத்துள்ளது. இது முற்றிலும் வணிகர்கள், வணிக லாபங்களுக்காக உருவாக்கும் ஒரு தந்திரம்.
 
தமிழகப் பண்பாட்டுச் சீரழிவில் வெட்கித் தலை குனிய வேண்டிய அம்சமாக நான் கருதுவது குடியே. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் குடி ஒரு கொடிய நோயாகப் பற்றிப் படர்ந்துவருகிறது. குடிப்பவர்கள் தன்னை அழித்துக்கொள்வதுடன் பொதுவெளியில் ஆபாசம் பேசி, வாந்தி எடுத்து, சண்டையிட்டு, சாலை விபத்துகளை உருவாக்கி, தன்னையும் சமூகத்தையும் சீரழித்துவருகிறார்கள். 

குடிவெறி கொலை களவு செய்யவும், பெண்களை வன்பாலுறவு கொள்ளவும் தூண்டுகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் குடிநோயில் இருந்து தமிழ் மக்களை யாராலும் காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.
 
பண்பாட்டுப் பெருமை பேசும் நாம் சுத்தமான ஒரு பொதுக் கழிப்பறையைக் கூடப் பேண முடியாத சமூகமாக ஏன் இருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வண்ணம் ஒரு கழிப்பறை எந்த நகரிலாவது அமைக்கப்பட்டிருக்கிறதா? பார்வையற்யோர் பேருந்து நிலையப் பொதுக் கழிப்பறைக்குள் கால் வைக்க முடியுமா? நினைக்கவே அவமானமாக இருக்கிறது.
 
ஜாக் லண்டனின் கதை ஒன்றில், “ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும். பின்பு, அந்த இனத்தின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். நான்காவது, அவர்கள் நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்என்பார்.
இந்த நான்கும்தான் இன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஒரு குறள் – ஒரு கதை



நீல வானில் விண்மீன்களிடையே நிலவு நீந்தி வருதலைக் காணும்போது அந்த அழகை வார்த்தைகளால் காண முடியுமா?

அதே போல் தான் தன் தோழிகளிடையே பருவத்தின் முத்திரைகளை முழுமையாகப் பெற்ற பெண்ணரசிபெழர் அமுதவள்ளி… ‘அமுதாஎன்று செல்லமாக அழைக்கப்படும் ஆணரங்கு! குபுகுபுவென்று பொங்கி மேலாடையைக் குத்திக் கிழித்து விடுவது போல் எழுந்து நிற்கும் அமுத கலசங்கள் கொண்டவள்! காண்போரின் இதயத்தை எளிதில் ஈர்க்கும் கூர்மையான நீள் விழிகள்! அந்நீள் விழிகளில் உருளும் கருநாகப் பழங்களில்தான் அவள் காதலன் சொர்க்கத்தின் திறவுகோள் உள்ளதாகக் கருதினான்!

பனி தூங்கும் மெல்லிய பூவிதழ்களினும் துல்லிய மேனி கொண்ட பாவையவள். இடையினை வளைத்துப் பிடித்து வாரியணைத்த போதெல்லாம் இடை ஒடிந்திருமோ என்று அஞ்சி தடவிப் பார்த்துக் கொள்வாள்!

காதலனின் இரும்புப் பிடியில் சிக்கித்தவிப்பதில் அவளுக்கு சுகம். அப்போது துவண்டுவிட்ட நிலையில் அவன் முதுகை அவள் பூந்தளிர் கைகள் தடவும்! தன் மார்பில் அவள் செப்புக்குடங்கள் புதைந்ததால் தோன்றிய வலிக்கு இதமாக இருக்கும் அவனுக்கு!

கோட்டான் கூவுமுன்னே இணையும் இதழ்கள்கோழி கூவிய பின்னர்தான் வேறு வழியில்லா காரணத்தால் பிரியும்! அதுவரையில் அதர பானத்தை அவள் தர தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள அவன் முயற்சிக்கஇப்படித்தான் இரவெல்லாம் இன்பம்இன்பம்இன்பம்!

உடல் முழுவதும் நகக்குறியும், பற்கள் பதிந்த அடையாளங்களும் கொண்டவளாய் பிரிந்து செல்வாள்! அவள் தோழிகள் அந்த அடையாளங்களைப் பார்த்து கேலி செய்வர்! நாணத்தால் நிலம் நோக்குவாள்!

நீராடும் போது அந்த அடையாளங்களை மறைக்க நீரிட்டுத் தேய்ப்பாள்! மறையாதுதோழியர் கேலி செய்வர்! போலியாகக் கோபங் கொள்வாள்! இது அவளுக்கு வாடிக்கை!

அவள் நெஞ்சம் அறிந்த தோழி மலர்விழி, ‘ஏன் இப்படி சங்கடப் படுகிறாய்? பெண்மையை மென்மையாய் அனுபவிப்பதில்தான் சுகம் அதிகம், என்று அவளிடம் சொல்வதுதானேஎன்றாள்!

நான் என்ன செய்யட்டும்? இப்படி பலர் கேலி செய்யும்படி செய்ததற்க்காக அவரிடம் சண்டை போடவேண்டும் என்றுதான் எண்ணிச் சென்றேன்! அவரைப் பார்த்ததும் என் நெஞ்சம் என்னையும் மீறி அவரிடம் அடிமையாகி விடுகிறதுபிறகு வேறு வழியில்லாது தழுவப் போய் விடுகின்றேன்என்றாள்!

இந்த நிலைக்கு ஆளான மங்கையின் மனநிலையை அறிந்த வள்ளுவப் பெருந்தகை சித்தரிக்கும் காட்சி இதோ!-

‘புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

(ஊடுவேன் என்று எண்ணிக்கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.)
முன்னாள் அமைச்சர். பா.உ.ச.