செவ்வாய், 1 ஜனவரி, 2013

வாழ்ந்து காட்டவேண்டும்... தொடர்ச்சி


திரைப்படங்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள் அல்லவா? நான் சிறுவயதில் டி.வி.சினிமா போன்றவற்றை பார்த்ததே கிடையாது! காரணம் எங்கள் கிறித்துவ முறைப்படி டி.வி.,சினிமா பார்க்கக்கூடாது. என்னுடைய 18-வது வயதில் என்னுடைய கணவரை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். தற்சமயம் சிங்கப்பூரைப் பொறுத்தவரை சன் டிவி பார்க்க முடியும். சிங்கப்பூர் டி.வி.யிலும் (பிரைம் 12) தமிழ்ப்படம் பார்க்க முடியும். பொதுவாக நல்ல படம் என்று அறிந்தால் மட்டுமே நேரம் செலவழித்துப் பார்ப்பேன். இல்லையென்றால் அதற்காக நிறைய நேரம் செலவழிப்பதில்லை. சிங்கப்பூர் வந்து இதுவரை திரையரங்கில் போய் பார்த்த படங்கள், ஜீன்ஸ், நிலாவே வா, படையப்பா.

மற்றபடி சிங்கப்பூரைப்பற்றி நிறைய அறிய ஆவல் உண்டு என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு பாக்கியம் இருந்தால் நிச்சயம் சிங்கப்பூர் வருவீர்கள். அப்பொழுது முழுமையாக அறியலாம். என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறேன். என்னிடம் பணப்பற்றாக்குறை இல்லாதிருந்தால் நானே ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேன். பணம் மட்டும் ரெடியாக அதாவது ஒன்றரை லட்சம் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் சிங்கப்பூர் வரலாம். இது ஒன்றுதான் பயங்கர கொடுமை. காரணம் இங்குள்ள ஏஜன்ட்டுகள் இதன் மூலம் நன்றாக சம்பாதிப்பதுதான்.

இன்னொரு விஷயம், பெண்களுக்கு சிங்கப்பூரில் நல்ல மதிப்பும் மரியாதையும் எங்கு சென்றாலும் கிடைக்கும். வேலை பார்க்கின்ற இடமாக இருந்தாலும் சரி, அல்லது வீடாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் சம உரிமை சிங்கப்பூரில்! மற்றவற்றை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். மற்றபடி கவிதாவிற்கு நல்ல ஆலோசனை சொல்லுங்கள். நன்றாக யோசித்து ஒரு முடிவு எடுக்கச்சொல்லுங்கள். அவளுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

உங்கள் மனைவி, குழந்தைகளைக் நான் நிறையவே விசாரித்ததாகச் சொல்லுங்கள். குழந்தைகள் இருவருக்கும் அன்பின் முத்தங்கள். என்னை யார் என்றே அவர்களுக்குத் தெரியாது. பரவாயில்லை. நான் சென்னை வந்தால் நிச்சயம் உங்களை வந்து பார்க்கிறேன். தற்போது என்னுடைய புகைப்படம் ஒன்றை அனுப்புகிறேன். அதை அவர்களிடம் காட்டுங்கள். மற்றபடி எல்லா நலனும் பெற்று, வாழ்வில் வெற்றிநடை போட உங்கள் குடிம்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.

குறிப்பு; இந்த கடிதம் எழுதி முடித்தபிறகு எனக்கு ஒரு தகவல் ஒரு நண்பர் மூலமாகக் கிடைத்தது. மாம்பலத்தில் ஒரு ஏஜன்ஸி உள்ளது. அதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். அந்த முகவரியை எழுதுகிறேன். நீங்கள் உங்களுடைய எல்லா விபரங்களையும் எடுத்துக்கொண்டு அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கு தேர்வானால் விமானப் பயணத்திற்கான கட்டணம் மட்டும்தான் செலவாகும். கண்டிப்பாக அங்கு போய் முயற்சி செய்யவும். அங்கிருந்து நிறைய பேரை சிங்கப்பூருக்கு அனுப்புகிறார்கள். அதிர்ஷடம் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

3 கருத்துகள்:

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி! இராஜராஜேஸ்வரி! தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

semmalai akash சொன்னது… [Reply]

விலாசம் கொடுக்கவில்லையே! :-) நல்ல தகவலகள்.
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!