திங்கள், 21 செப்டம்பர், 2015

மாற்று அரசியலின் அவலம்!

மாற்று அரசியல் - நேர்மையான அரசியலுக்கும், ஆட்சிக்கும் நடுநிலை வாதிகளும், அறிவு ஜீவிகளும்  வைத்த பெயர்தான் இது. பணம் மற்றும் ஜாதி அரசியலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், மிகக்குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியவர் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்தான். இப்போது ஆட்சி எப்படி நடக்கிறது என்ற விவாதத்தை அப்புறம் பார்த்துக் கொள்வோம். அங்கு காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. ஆட்சிக்கு மாற்று உருவாகி விட்டது. மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக உணர்த்திய தேர்தல் அது. அப்போது அது குறித்து 'ஒரு நாயகன் உதயமாகிறான்'  என்ற பதிவையும் போட்டிருந்தேன்.


இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு மாற்று அரசியலுக்கான சூழலே இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி. மாற்று அரசியலை முன்வைத்துத்தான் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இப்போது அவர் மகனை வைத்துதான் அரசியல் நடத்துகிறார். 'அடுத்த வாரிசு' பிரச்னையில் எங்கே தலை தூக்கிவிடுவாரோ என்று கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்ட 'வைகோ' தூய்மையான அரசியலை முன்வைத்து கட்சி துவக்கி, பின் மிக கேவலமாக தன் தாய்க்கட்சியோடு கூட்டணி, சொற்ப இடங்கள் அதிகமாக கொடுத்ததால் அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று தன்  பிம்பத்தை தானே கெடுத்துக்கொண்டார். இதே மாதிரி மாற்று அரசியல் முழக்கத்தை வைத்து முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்கியவர் விஜயகாந்த். இப்போது மனைவி, மைத்துனர் இவர்களை வைத்துக்கொண்டுதான் கட்சியை நடத்தி வருகிறார்.

இவர்களின் நோக்கம் தூய்மையான அரசியலோ அல்லது நேர்மையான ஆட்சியோ அல்ல. முதலமைச்சர் கனவு மட்டுமே. ஆனால் மாற்று அரசியலுக்கான எந்த முயற்சியும் இவர்களிடத்தில் இல்லை. தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் விட்டால் வேறு கதியே தமிழகத்துக்கு இல்லை என்கிற நிலை வந்தாகி விட்டது. நிரந்தர முதல்வர் போதையில் இருக்கும் 'ஜெ' கடைசி நேரத்தில் எப்படியும் பணத்தை வீசி மற்ற கட்சிகளை வளைத்து விடலாம் என்ற திட்டத்தில் இருப்பார். இந்த உதிரிக் கட்சிகளும் இருக்கின்ற எல்லா ஓட்டைகளையும் பொத்திக்கொண்டு கிடைத்ததை வாங்கிக்கொண்டு அடங்கிப் போவர்.

ஆனால் இதே கட்சிகள் தி.மு.க.விடம் அதிக இடங்கள் முதல் ஆட்சியில் பங்குவரை பேரம் பேசுவதுதான் வேடிக்கை. காரணமும் இல்லாமலில்லை, தி.மு.க.வின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் அவ்வளவுதான். மக்களிடமும் இன்னும் கருணாநிதி எதிர்ப்பு என்பது குறைந்தபாடில்லை. கணக்கற்ற ஊழல்கள், சிறைவாசம் எல்லாம் இருந்தும் ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியும் குறைந்தபாடில்லை.

ஆனாலும் மிகத்தெளிவாக தமிழக மக்கள் இரண்டு பேருக்குமே தலா ஐந்து ஆண்டுகளை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கட்சிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும்போது தமிழ்நாடே சுடுகாடாகும் என்பது தெரிந்துதான் இருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் 'ஜெ' வின் ஆட்சி இந்த அவலத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த முறை தி.மு.க.விற்குத்தான் வாய்ப்பு போக வேண்டும்.

ஆனால் இந்த இடதுசாரிகளும், வேகோவும் சேர்ந்து மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு உதவுவதைப் பொறுக்க மாட்டாதவர்கள் அங்கிருந்து விலகி வருகிறார்கள். மலையையே முழுங்கும் அளவுக்கு ஊழல்கள் வியாபித்திருக்கும் தமிழகத்தின் அவல ஆட்சியைப் பற்றி 'வைகோ' வாய் தவறிக்கூட எங்கும் பேசுவதில்லை. ஒரு சுயநலவாதியை நானும்கூட சில நாட்கள் நேர்மையானவர் என்று நம்பியிருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.

மாற்று அரசியல் குறித்த விழிப்புணர்வை, அவசியத்தை தமிழகத்தில் யார்தான் ஏற்படுத்தப் போகிறார்கள்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையுமே தேர்ந்தெடுப்பது? என்னதான் வழி? கொஞ்சம் சிந்திக்கலாமே!

சில நாட்களுக்கு முன்பு தேவியர் இல்லம் திருப்பூர் வலைப்பதிவின் ஜோதிஜி அவர்களின் மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - பதிவுக்கு பதில் (அ) பின்னூட்டம்) எழுதியதை இங்கே நினைவு கூர்கிறேன்.

ஜோதிஜி! இத்தனை நாள் காத்திருந்து கலந்து கட்டி அடித்திருக்கிறீர்கள். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத அரசியல்வாதிகள் குறித்த வரிகள் அற்புதம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே வருவதற்கு அவர்களுக்கு யார் தைரியம் கொடுப்பது? மக்களேதானே! மக்கள் என்ன தெளிவாக இருக்கிறார்கள்? இவர்கள் ஐந்தாண்டு காலம் சுருட்டியாயிற்று, அடுத்தது அவர்களுக்கும் ஒரு ஐந்தாண்டு கொடுத்துப் பார்ப்போம் என்கிற தாராள மனப்பான்மையை எங்கு போய் சொல்லி முட்டிக் கொள்வது?

மாற்று அரசியல் என்பதே இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் முடியும் போலிருக்கிறது. ஆசை பேராசையாகி பேரம் படியும்வரை மதில்மேல் பூனையாக இருந்து கடைசியில் கிளம்பிப்போய் ஓட்டு கேட்டால் மதிகெட்ட மானிடர்கள் எப்படியும் நமக்கு ஓட்டை போட்டுத்தானே ஆகவேண்டும் என்கிற தடித்தனம் எப்படி வருகிறது இந்த அரசியல்வாதிகளுக்கு? தமிழ் நாட்டில் தி.மு.க.வையும் மத்தியில் காங்கிரஸையும் மட்டுமே குடும்ப அரசியல் செய்கிறவர்களாக மக்கள் மத்தியிலே வாதத்தை வைத்த எல்லா அரசியல் அயோக்கியர்களுமே தத்தமது வாரிசுகளை சத்தமேயில்லாமல் நுழைத்துவிடுகிற அதிசயம் இங்கு மட்டுமே நடக்கும்.

ஏனென்றால் நம் மக்களின் மறதி அப்படி. நேர்மை என்பது கிலோ என்ன விலை என்கிற காலமிது? எந்தக்கட்சியில் சேர்ந்தால் எவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம் என்கிற கனவு கட்சிக்காரனுக்கு மட்டுமல்ல கடைக்கோடி மக்களுக்கும் வந்திருக்கிறது. காசு கொடுப்பவனிடம் அண்டிப்பிழைக்க, எச்சில் சோற்றுக்கு அலையும் நாயாய் நாணயம் இல்லாத நாலாந்தர அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஓட்டைப் போட்டு அவனை சிம்மாசனத்தில் ஏற்றி அவனின் ராஜ வாழ்க்கையை பார்த்து பரவசமடையும் நம் பரதேசி மக்களை நினைத்தால் அழுகைக்கு பதில் எரிச்சல்தான் வருகிறது.
ஆதாயம் எங்கோ அங்கே நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு போய்ச்சேரும் மனோநிலை இரண்டாம் மட்ட அரசியல்வாதிகளிடம் வந்து வெகு நாட்களாகிறது. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டபின் தனிகட்சி ஆரம்பித்ததும் தொடங்கியது இந்த கலாச்சாரம்.

சென்ற மே மாதத்தில் வைகோ குறித்த எனது பின்னூட்டத்தை இங்கே தாங்கள் நினைவு கூர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

//வைகோவை எப்படி நேர்மையாளர்கள் வரிசையில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த இயக்கத்திலிருந்து வெளியேறினாரோ அதே இயக்கத்தோடு கூட்டணியும், விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசியதால் இரண்டாண்டு காலம் ஜெயாவினால் சிறையில் அடைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்ட பின்னரும், கேவலம் சில தொகுதிகளுக்காக அதே ஜெயா கூட்டணியில் சேர்ந்த வைகோவும்கூட ஒரு தேர்ந்த சந்தர்ப்பவாதிதான். அதனால்தான் மரியாதை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறார்.//

2 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

மக்களுக்கு புதிய சிந்தனைகள் உருவாக வாய்ப்பில்லாமல் கடந்த 40 வருட பழக்க வழக்கங்களை விட்டு வெளியே வர முடியாமல் மொன்னையாக ஆகிப் போனதால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாக அரசியல்வாதிகளுக்கு பின்புலமாக இருந்து கொண்டு செயல்படும் ஊடக மற்றும் அதிகாரவர்க்கத்தினர் குறித்து அதிகம் தெரிந்து கொள்வதில் தான் ஆர்வத்துடன் செயல்படுகின்றேன். வெளியே தெரியாமல் வைகோ வை எப்படி முடக்கினார்கள் போன்ற விபரங்கள் ஆச்சரியம் அளிக்கக்கூடியது. வருகின்ற தேர்தல் பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் எண்ணப்படி போட்டியில் உயிர்பலி வரைக்கும் செல்லும் என்று நம்புகிறேன். பார்க்கலாம். இந்தப் பதிவு ரொம்பத் தெளிவாக வந்துருக்கு. வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@ஜோதிஜி திருப்பூர் தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி. அதிகார வர்கமும், ஊடகங்களும் செயல்படும் விதத்தை நான் குறிப்பிட மறந்து விட்டேன். ஆட்சியாளர்களின் ஊழலை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களும், திறமையான, ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருப்பது இப்போதுதான். இது பற்றிய தங்களது அலசல்களை பதிவாக எதிர்பார்க்கிறேன். உயிர்ப்பலி வரை போகும் என்ற கணிப்பு நிஜமானாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!