ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது?


அன்புள்ள சகோதரருக்கு,
உங்கள் அன்பு மறவா சகோதரி ஜெயந்தி எழுதுவது. இங்கு மாமா, கிரண் மற்றும் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பூரண நலம். அதுபோல் உங்கள் இருவர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி அறிய ஆவல்.
உங்களுடைய கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 26.04.2000 அன்று கிடைத்தது. கடிதத்தைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அச்சில் வார்த்தது போல் அழகிய கையெழுத்து, அழகிய வார்த்தை நடையில் எழுதியிருந்தீர்கள். உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது. அதை சரியான முறையில் வெளிக்கொணராமல், வழி தெரியாமல் போராடுகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்தால் நல்ல ஒரு பத்தரிகை நிருபராகக் கூட வரலாம்.
நீங்கள் கூறியிருந்தபடி எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் வரையவேண்டும் என்று ஆசைதான். ஆனல் பெயின்டிங் பிரஷ் தொடக்கூட நேரமில்லை. இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டும். கட்டட வேலை, டெய்லரிங், கம்ப்யூட்டர் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் ஏதோ செய்து கொண்டிருப்பதால் என்னால் முழு மூச்சாக ஓவியத்தில் ஈடுபட முடியவில்லை.
உங்கள் கடிதத்தில் இருக்கும் ஊக்கம்தான் என்னை முழுமையாக ஓவியத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாமாவிற்கு துணைத்தாசில்தார் பதவி கிடைத்திருக்கிறது. ஆனல் சீனியாரிட்டிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர் கலெக்டர் ஆஃபிசில்தான் வேலை செய்கிறார். கிஷோர் நன்றாக படிக்கிறான். கூடவே இந்தியும் படிக்கிறான்.



18.04.2000 அன்று நீங்கள் வந்து போனதாக மாடி வீட்டில் இருப்பவர்கள் கூறினார்கள். நீங்கள் வந்த நேரத்தில் நான் இல்லாததது குறித்து வருத்தம் அடைந்தேன்.
நான் வரைந்த ஓவியத்தை ஃபோட்டோ காப்பியாக மாற்றி அனுப்பியிருந்தீர்கள் அல்லவா? அதை எப்படி ஃபோட்டோ காப்பியாக மாற்றுவது என்ற விபரத்தை எழுதி அனுப்பவும். நீங்கள் வாழ்த்தாக மாற்றிய ஓவியம் இருந்தால் இரண்டு நகல் அனுப்பி வைக்கவும்.
நானும் இங்கே சில படங்களை வரைந்து வைத்திருக்கிறேன். அதை எப்படி இவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் விவரம் கேட்டு எழுதியிருக்கிறேன்.நீங்கள் ஊருக்கு வந்தால் அவசியம் வந்து போகவும்.
இவருடைய அக்கா மகன் இப்போது அமெரிக்காவிலுள்ள BOSTON-ல் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறான்.
உங்கள் கம்பெனி நிலவரம் பற்றி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? அதனால்தான் சொல்கிறேன் உங்களுக்குள்ளே இருக்கும் திறமையை நம்பி முழுமையாகப் போராடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் கம்பெனி வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்காமல் கூடவே கட்டுரை, கவிதை என எழுத்து வேலையையும் தொடர்ந்து செய்யுங்கள். அதில் நிச்சயம் முன்னேற்றம் காண்பீர்கள்.
இதுதான் சங்கதி. மற்ற விஷயங்கள் ஏதுமின்றி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜெயந்தி.
தொடர்புடைய இடுகை;
எத்தனை அழகான வாழ்த்து மடல்.


சனி, 18 பிப்ரவரி, 2012

மறக்க முடியாத மெட்ராஸ்


 சென்னை நகர வீதிகளும் டிராம் வண்டிகளும்
எதேச்சையாக தினத்தந்தி நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட செய்தி இது. அந்தக்கால சென்னையில் டிராம் வண்டிகள் ஓடிய கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் பார்த்திபன். நமக்கெல்லாம் அந்த அனுபவம் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் மெட்ரோ ரயில் அனுபவம் கிடைக்க இருக்கிறது.
பழைய அனுபவங்களை அசைபோடுவதில் இருக்கும் சுகமே அலாதியானது இல்லையா? டிராம் வண்டிகள் சென்னையில் ஓடியது பற்றிய அந்தக் கட்டுரை உங்களுக்காக….

மவுண்ட் ரோடில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ் வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் இந்த டிராம் வண்டிகள். மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகள் மாங்கு மாங்கென்று ஒடி இருக்கின்றன.
1877-ல் தான் மெட்ராஸ் வாசிகளுக்கு டிராம் வண்டிகள் அறிமுகம் ஆனது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892-ல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்தக் கம்பெனி, Messers Hutchinson & Co என்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் மூன்று ஆண்டு கடின உழைப்பிற்குப் பிறகே எலக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895-ல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் இயங்கின. இந்தியாவிலேயே எலக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்தச் சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. அமெரிக்காவில் கூட இங்கு அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகே டிராம்கள் ஓடத்தொடங்கின.
எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையைத் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6-ந்தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்துபோல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கட் வாங்கிக் கொள்ளவேண்டும்.
ஓட்டுநரும் கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள்.  திடீரென டிக்கட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கட் இருக்கிறதா என்று பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே தாவி விடுவார். டிக்கட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கட் வாங்கிவிட்டால் எங்கு வேண்டுமானால் செல்லலாம். மாத சீசன் டிக்கட் முறைகளும் அமுலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10-ம் வசூலிக்கப்பட்டது.
சென்னையில் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச்செல்லலாம். துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.


அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்படவில்லை. அதுவும் இல்லாமல் பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வண்டிகளுக்கான மின்சாரம் பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்டது. மெட்ராஸில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நாள்தோறும் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
டிராம் வண்டிகள் மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம் எலக்ட்ரிக் டிராம் வண்டிகளை Conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்கான சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதன் நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்குமேல் வயர்கள் போட்டு, அதிலிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ளும் முறைக்கு ஒப்புக்கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.


இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900-ல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலக்ட்ரிக் கன்ஸ்ட்ரஷன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி 4 ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904-ல் மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கைமாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சநாள் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனல் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953-ம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராஸின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப்போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இயக்கவும் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள் இன்று நமக்கெல்லாம் கற்பனைப் பொருளாக மாறிப்போய்விட்டதுதான் காலத்தின் கோலம்!
மறக்க முடியாத நினைவுகளுடன்,

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார் இந்த உலகில்?

இணையம் ஒரு சுவாரஸ்யமான கடல். எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அதில் நீந்திக்கொண்டிருக்கலாம். விட்டுப்போக மனசே வராது. என் இளமைக்காலத்தில் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே இருந்திருக்கிறேன். எங்கு யாரிடம் புத்தகத்தைப் பார்த்தாலும் எப்படியாவது கேட்டு வாங்கிவிடுவேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை அடுத்தவர்க்கும் படிக்கக் கொடுப்பேன். அந்தப் பழக்கம்தான் இப்போது இணையத்திலும் தொடர்கிறது.

தமிழில் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போது அப்பப்பா எத்தனை வலைபூக்கள் எப்போது படிப்பது இதையெல்லாம் என்று மலைப்பாக இருந்தது. இப்போது தேர்ந்தெடுக்கபட்ட பதிவுகளை மட்டுமே படிக்க முடிகிறது. வலைப்பக்கம் ஆரம்பித்த பிறகு அதுவும் முடிவதில்லை. எல்லா பதிவுகளையுமே படிக்க ஆவலாக இருந்தபோதும் நேரம் கை கொடுப்பதில்லை. நம்முடைய பதிவுகளை வந்து வாசிக்கறவர்களுடைய பதிவுகளையாவது போய்ப் படிக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியினாலேயே சில பதிவுகளாயாவது படிக்க முடிகிறது.

யார் வருவார் நம் பதிவுகளைப் படிக்க என்று சோர்ந்துபோன நேரத்தில் படிப்படியாய் வாசகர்கள் வரத்தொடங்கியுள்ளார்கள். இந்த நேரத்தில் என் பதிவுகளை மனப்பூர்வமாக பாராட்டி எழுதி அறிமுகப் படுத்தியவர்கள் பலர். அவர்களில் 'நாற்று' வலைப்பதிவின் நிரூபன் மற்றும் மகிழம்பூச்சரம் வலைப்பதிவின் 'சாகம்பரி' ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் சகோதரி சாகம்பரி முதலில் வலைச்சரத்தில் என் பதிவை அறிமுகம் செய்தார். இப்போது லீப்ஸ்டர் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறார்.


லீப்ஸ்டர்வலைப்பதிவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்படுகின்ற விருதாம்..அதனது அர்த்தம் 'மிகவும் பிடித்த என்பதாகும்'. "இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப் பதிவுகளுக்கு விருது வழங்க வேண்டும்

புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார் இந்த உலகில்? எனக்கு விருது வழங்கி என்னை உற்சாகப்படுத்தவும் நண்பர்கள் இருக்கும்போது அதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் ஏற்றுக்கொள்வதுதானே முறை. இதை ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை வலையில் காப்பி-பேஸ்ட் செய்து கொள்ளவேண்டுமாம். ம்... செய்தாயிற்று! அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் நமக்குப்பிடித்த 5 வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டுமாம். வழங்கிட்டாப்போச்சு. 

விருது வழங்கிய 'சாகம்பரிக்கு' நன்றி தெரிவித்து கீழ்க்கண்ட எனக்கு மிகவும் விருப்பமான இந்த வலைப்பக்கங்களுக்கு லீப்ஸ்டர் விருதை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. என். உலகநாதன். இயல்பான நடையில் யதார்த்தமாக எழுதும் இவரின் எல்லா பதிவுகளுமே என்னைக் கவர்ந்தவை.

2. My Diary மாலா வாசுதேவன் என்ற பெயரில் பதிவுகளை எழுதும் இவரின் ஒரே ஒரு பதிவைப் படித்ததுமே எனக்குப் பிடித்துப் போயிற்று.

3. மிடில் கிளாஸ் மாதவி சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவங்களையும், சுவையான சிறுகதைகளையும் கொண்டது.

4. வேளாண் அரங்கம் வேளாண்மைச் செய்திகளை ஒட்டுமொத்தமாகத் தருகிறது இந்தத்தளம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

5. நிலாக்கால நினைவுகள். அறிவியல் செய்திகளை மிகவும் அழகாகத் தருகிறது இந்ததளம்.

Rules :

•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.

அன்புடன்,